பதிவு செய்த நாள்
07 ஆக2017
08:15
இந்திய பங்கு சந்தைகளில், வரலாற்று உச்சத்தில் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசிய பங்குச் சந்தை குறியீடான, நிப்டி, இந்த ஆண்டு தொடக்கத்தில், ஜனவரி மாதம், 8,207 புள்ளிகளில் ஆரம்பித்து, தற்போது, 10 ஆயிரத்து, 137 புள்ளிகளை அடைந்துள்ளது. கடந்த, ஏழு மாதங்களில், மே மாதம் கண்ட சிறிய இறக்கம் தவிர, பிற மாதங்களில் ஏற்றம் கண்டு, வியாபாரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் சந்தையின் போக்கு, வரவிருக்கும் மீதமுள்ள நிறுவனங்களின் முதல் காலாண்டு நிதி நிலை அறிக்கை, சர்வதேச சந்தையின் நிகழ்வுகள் ஆகியவற்றைப் பொறுத்து அமையும். இதுவரை, நிப்டி இண்டெக்ஸில் உள்ள, 50 நிறுவனங்களில், 30 நிறுவனத்தின் முதல் காலாண்டு அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதில், ஒன்பது நிறுவனங்களின் அறிக்கைகள் சாதகமாக இல்லை. இந்த வாரம், எஸ்.பி.ஐ., பேங்க் ஆப் பரோடா, டாடா மோட்டார், டாடா ஸ்டீல், ஐ.பி.சி.எல்., போன்ற முன்னணி நிறுவனங்கள் சிலவற்றின் அறிக்கைகளும் வர உள்ளன
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இந்த ஆண்டு, 6 சதவீதம் அதிகரித்து, இரண்டு ஆண்டுகள் உச்சத்தில் உள்ளது. இதற்கு உள்நாட்டு பொருளாதார உயர்வு மற்றும் அமெரிக்க நாணய குறியீடான, டாலர் இண்டெக்ஸ் வீழ்ச்சியடைந்தது ஆகியவை முக்கிய காரணங்களாகும். இதன் விளைவாக, ஏற்றுமதியை நம்பி இருக்கும் தொழில்நுட்ப துறை, மருத்துவ துறை சார்ந்த பங்குகள் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும்.
கடந்த வாரம், வங்கி துறை பங்குகள் விலை சிறிது குறைந்து காணப்பட்டது. இருப்பினும், கடந்த, மூன்று மாத சந்தை ஏற்றத்தில், வங்கி பங்குகள் முதன்மையாக ஏற்றம் கண்டன.கடந்த வாரம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது. இருப்பினும், இனி வர இருக்கும் காலத்தில், வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்புகள் குறைவு. கடந்த சில ஆண்டுகளாக, செப்டம்பர் முதல் நவம்பர் வரை பணவீக்கம் உயர்ந்து காணப்பட்டது. அடுத்த நிதி கொள்கை கூட்டம் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. அதில் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு இல்லை
இனி வரும் நாட்களில் பணப் புழக்கத்தை பொறுத்து சந்தையின் போக்கு அமையும். தற்போது, அன்னிய முதலீட்டு நிறுவனங்களான எப்.ஐ.ஐ., சந்தையில் விற்பனையை அதிகரித்துள்ளன. அமெரிக்க பங்கு சந்தை குறியீடு டொவ்ஜோன்ஸ், இந்த ஆண்டு, 32 முறை உச்சத்தை தொட்டு வியாபாரம் ஆகியது. நவம்பர், 2016 அமெரிக்க தேர்தலுக்கு பிறகு, டொவ் ஜோன்ஸ், 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை, 3,௦௦௦ புள்ளிகள் அதிகரித்து, வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதே காலத்தில், நிப்டி இண்டெக்ஸ், 2,௦௦௦ புள்ளிகள் அதிகரித்துள்ளது. கடந்த வார இறுதி நாட்களில், நிப்டி, 10 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே வர்த்தகம் ஆனது. தற்போது, 10 ஆயிரத்து, 137 ரெசிஸ்டென்ஸ் ஆகும். இதை கடக்கும் நிலையில், 10 ஆயிரத்து, 260 அடுத்த இலக்காகும். பொதுவாக சந்தை உயர்ந்து வர்த்தகமாக வாய்ப்புகள் அதிகம். 9,850 நல்ல சப்போர்ட் ஆகும்.
கவனிக்க வேண்டிய பங்குகள்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மஹாநகர் கேஸ் லிமிடெட், அசோக் லேலாண்டுபால்மர் லாறி லிமிடெட், ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு பெர்ட்டிலைசர்ஸ்
-முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|