பதிவு செய்த நாள்
07 ஆக2017
08:17
பங்குச் சந்தை தொடர்ந்து உயர்நிலையில் வீற்றிருக்க, பல காரணங்கள் உண்டு. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிறுவனங்களின் வளமான நிதிநிலை மற்றும் செயல்திறன், கூடும் சேமிப்பு, குறைந்த பணவீக்கம், சொத்து ஒதுக்கீடு மாற்றங்கள் என்று காரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவற்றை அடிப்படைத் தன்மை சார்ந்த காரணங்கள் மற்றும் சூழல் சார்ந்த காரணங்கள் என்று இரு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். பொருளாதார சான்றுகளோடு சந்தை உயரும்போது, அது அடிப்படைத் தன்மை சார்ந்து அமைகிறது. அத்தகைய சான்றுகளின்றி சந்தை உயரும்போது, அந்த வளர்ச்சி சூழல் சார்ந்து அமைகிறது. சூழல் சார்ந்த வளர்ச்சியும் பிறகு பொருளாதார அடிப்படைத் தன்மையின் ஆதரவை பெறக்கூடும்.
சாதகம்கடந்த, 2014ல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கண்ட சந்தையின் அபார வளர்ச்சி, சூழல் சார்ந்து அமைந்தது. ஆனால், அது தொடர்ந்து அடிப்படைத் தன்மையின் ஆதரவைப் பெறத் தவறியது. இதுவே சந்தையின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.இப்போதும் சந்தை சூழல் சார்ந்து உயர்ந்து நிற்கிறது. தொடர்ந்து பொருளாதார அறிகுறிகளில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படாவிட்டால், சந்தையின் வளர்ச்சி நிலைக்காது. சந்தை எப்போதெல்லாம் சூழல் சார்ந்து உயர்கிறதோ, அப்போதெல்லாம் இந்த சிக்கலை அது தனக்கு உருவாக்கிக் கொள்கிறது.
ஆனால், சந்தையின் தற்போதைய உயர்வில், அடிப்படைத் தன்மை அறவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. சேமிப்பு, பணவீக்கம், இடுபொருள்களின் குறைந்த விலை, குறையும் வட்டிவிகிதம், கூடும் அன்னிய முதலீடுகள், புதிய வரிச் சட்டங்களின் பலன்கள், கறுப்பு பொருளாதாரத்திற்கு எதிரான தொடர் எதிர்வினைகள், சில்லரை முதலீடுகளின் பெருக்கம், கூடும் நிர்வாக ஆளுமை தரம் என்று அடிப்படைத் தன்மையின் அறிகுறிகள் பல சந்தைக்கு சாதகமாக உள்ளன. இதில் குறை என்று சொல்லக்கூடிய முக்கிய அறிகுறிகள் பொருளாதார வளர்ச்சி, வங்கித்துறை சார்ந்த சீர்திருத்தங்களின் முன்னேற்றம், வாராக்கடன் பிரச்னையின் தீர்வு நோக்கிய நகர்வு மற்றும் நிறுவன அளவில் வளர்ச்சி.
கைகொடுக்கவில்லைசந்தையில் உள்ள முக்கிய அச்சம், இந்த அறிகுறிகள், 2014ல் நடந்தது போல மீண்டும் நம்மை ஏமாற்றி விடுமோ என்பதே. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் கையில் உள்ளது. 2014ல் மழை பொய்த்தது. இப்போது, பொய்க்க வாய்ப்பில்லை. 2014ல், உலகப் பொருளாதாரம் நமக்கு கைகொடுக்கவில்லை. இப்போது, அந்த நிலை இல்லை. வங்கிகளின் பிரச்னையை அரசு தீர்த்தால் மீண்டும் முதலீடுகளின் வளர்ச்சிக்கு அது வித்திடும். அதேபோல, வரிகளில் வளர்ச்சி கண்டால் அரசால் பெரிய முதலீடுகளை செய்ய முடியும். ஜி.எஸ்.டி., அதற்கு வித்திடும் என்றே தோன்றுகிறது.
இந்த இரு நகர்வுகளின் தாக்கம் வெளிப்படும் வரை, சந்தை பொறுமை காக்குமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. அதே சமயம், சந்தைக்கு வரும் பண வரத்து, இப்போதைக்கு அந்த கவலை இல்லை என்ற எண்ணத்தையே நமக்கு தருகிறது. தேக்கமோ அல்லது வீழ்ச்சியோ, சந்தை காணும் ஒவ்வொரு தருணத்திலும், முதலீடு செய்ய காத்திருப்போர், சந்தைக்கு கை கொடுக்கின்றனர்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|