பதிவு செய்த நாள்
07 ஆக2017
08:24
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்திருப்பதை அடுத்து, வைப்பு நிதி உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புகளில் ஏற்படக்கூடிய தாக்கம் பற்றி ஓர் அலசல்.
எதிர்பார்த்தது போலவே ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின், 3வது, இரு மாத கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதமான ரெப்போ விகிதம், 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வட்டி குறைப்பின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றியும், வரும் மாதங்களில் ரிசர்வ் வங்கியின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பது பற்றியும் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது.
கடனுக்கான வட்டிரிசர்வ் வங்கி கூட்டத்தில் ரெப்போ விகிதம் குறைப்பு தவிர, வங்கிகள் கடன் வழங்கும் வட்டி விகிதத்தை தீர்மானிக்கும் எம்.சி.எல்.ஆர்., முறை பற்றியும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த முறை, வட்டிவிகித மாற்றத்தின் பலனை வழங்குவதில் ஓரளவு வெளிப்படையாக இருந்தாலும் முழுஅளவு திருப்திகரமாக இல்லை என்றும், இது தொடர்பாக பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பேஸ் ரேட் முறையில் வட்டி குறைப்பின் பலன் உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு மாற்றப்படுவதில்லை எனும் நிலையில் தான், எம்.சி.எல்.ஆர்., முறை அமல் செய்யப்பட்டது. தற்போதைய இந்த முறையும் ஆய்வுக்குள்ளாகி உள்ளது.
ரிசர்வ் வங்கி, எம்.சி.எல்.ஆர்., முறைக்கு பதிலாக வேறு ஒரு முறையை கொண்டு வருவது குறித்து பரிசீலித்தாலும், இது உடனடியாக நிகழ வாய்ப்பில்லை என கருதப்படுகிறது. இந்நிலையில், தற்போதையை வட்டி குறைப்பு மாறும் கடன் விகிதங்கள் மீது எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனும் கேள்வியும் எழுந்துள்ளது. வட்டி குறைப்புக்கு ஏற்ப கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஒட்டு மொத்த நோக்கில் பார்க்கும் போது, இந்த வட்டி குறைப்பை எதிர்பார்த்து வங்கிகள் ஏற்கனவே இதை கணக்கில் கொண்டு செயல்பட்டிருப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
வங்கிகளின் ‘டிபாசிட்’ வட்டி விகிதம் எப்படி அமைகின்றன என்பதை கவனிக்க வேண்டும் என்கின்றனர். எனினும் வட்டி குறைப்பின் எதிர்பார்ப்பு இதிலும் கருத்தில் கொள்ளப்பட்டதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். எனவே, சிறிய அளவில் மாற்றம் இருக்கலாமேத் தவிர பெரிய அளவில் தாக்கம் இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
வைப்பு நிதி தாக்கம் எனினும் வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு சாதகமான நிலையில் மாற்றங்கள் அமையலாம் என கருதப்படுகிறது. ஏற்கனவே வட்டி குறைப்பு கணக்கில் கொள்ளப்பட்டாலும், எம்.சி.எல்.ஆர்., முறையுடன் தொடர்பு கொண்ட கடனுக்கான வட்டி விகிதம் ஓரளவு குறைக்கப்படலாம். புதிதாக வீட்டுக்கடன் பெற விரும்புகின்றவர் பல்வேறு வங்கிகள் அளிக்கும் கடன் விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்து தேர்வு செய்ய வேண்டும் என்றும் வல்லுனர்கள் ஆலோசனை சொல்கின்றனர். அதே நேரத்தில் மற்ற கட்டணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர்.
வங்கிகளின் வைப்பு நிதி வட்டி விகிதமும் குறைந்து வருகிறது. அண்மையில் பாரத ஸ்டேட் வங்கியின் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. சில தனியார் வங்கிகள் வைப்பு நிதி வட்டியை குறைத்துள்ளன. கடன் வளர்ச்சியின் போக்கின் அடிப்படையிலேயே வைப்பு நிதிக்கான வட்டி விகித போக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் குறைந்த வட்டி விகித சூழலில் வைப்பு நிதியை நாடுபவர்களுக்கான பலன் குறைவாகவே இருக்கும் நிலையே நீடிக்க உள்ளது.
டெப்ட் பண்ட்கள்வைப்பு நிதியை நாடுபவர்கள் டெப்ட் பண்ட் முதலீட்டு வாய்ப்பை பரிசீலிப்பது பொருத்தமாக இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதமும் குறையும் சூழலில் சேமிப்பு கணக்கில் பணத்தை வைத்திருப்பதை விட பொருத்தமான லிக்விட் பண்ட் திட்டங்களை நாடலாம் என, வல்லுனர்கள் கூறுகின்றனர். டெப்ட் பண்ட் உள்ளிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டங்களும் இந்த வட்டி குறைப்பை எதிர்பார்த்து அதற்கேற்ப செயல்பட்டிருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட கால திட்டங்களில் இதன் தாக்கம் இருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் குறிப்பிட்ட கால அளவிலான பண்ட்களில் முதலீடு செய்திருப்பவர்கள் அவற்றை தொடர்வது சரியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
மாற்று வாய்ப்புகள் என்ன?* சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை லிக்விட் பண்ட் வகை மியூச்சுவல் பண்ட்களுக்கு மாற்றலாம்.* சிறுசேமிப்பு திட்டங்களை பொறுத்தவரை முதலீட்டை தொடர்வதே பொருத்தமாக இருக்கும்.* பேமென்ட் வங்கிகள் அளிக்கும் வாய்ப்புகளையும் பரிசீலிக்கலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|