பதிவு செய்த நாள்
08 ஆக2017
00:27
புதுடில்லி : ‘ஒரே அமைப்பின் கீழ், ‘ஆர்கானிக்’ பொருட்களின் தரத்தை நிர்ணயிக்கும் நடைமுறையை கொண்டு வந்தால், அத்துறை மேலும் சிறப்பாக வளர்ச்சி காணும்’ என, சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்து ஆய்வு செய்யும் இந்திய குழுவான, ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர்., தெரிவித்துள்ளது.
ரசாயன கலப்பு உரம், பூச்சி மருந்து போன்றவற்றை தவிர்த்து, இயற்கை உரம், பயிர் பாதுகாப்பு பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சாகுபடி செய்யப்படுபவை, ‘ஆர்கானிக் பொருட்கள்’ என, அழைக்கப்படுகின்றன. இவ்வகை இயற்கை விளைபொருட்களுக்கும், அவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கும், இந்தியா உட்பட, உலகெங்கும் மவுசு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில், இயற்கை வேளாண் பொருட்கள் துறையைச் சேர்ந்த, 75 நிறுவனங்களிடம், ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர்., ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது, இயற்கை பொருட்களின் தர நிர்ணயம், அங்கீகாரம் உள்ளிட்ட நடைமுறைகள், அரசு அமைப்புகள் பலவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளன. இது, இத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. பல அமைப்புகள், பல்வேறு ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் உள்ளதால், இயற்கை பொருட்களை ஏற்றுமதி செய்வோர் மட்டுமின்றி, அரசு அதிகாரிகளும் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர்.
இதற்கு, இயற்கை பொருட்கள் ஏற்றுமதியில், அந்தந்த அரசு அமைப்புகளின் பங்கு குறித்து, தெளிவாக வரையறுக்கப்படாமல் உள்ளதே முக்கிய காரணம்.வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி அமைப்பின் கீழ், இயற்கை பொருட்கள் உற்பத்திக்கான தேசிய திட்ட அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் அங்கீகாரம் பெற்ற பல்வேறு நிறுவனங்கள், இயற்கை பொருட்களின் ஏற்றுமதிக்கு சான்றிதழ் வழங்குகின்றன. இது போல, பல அமைப்புகள் வழங்கும் சான்றிதழ்களால், சுங்க அதிகாரிகள், ஏற்றுமதி ஆவணங்களை பரிசீலித்து அனுமதி வழங்குவதில், தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.
இது, இந்தியாவில் தொழில் செய்வதை சுலபமாக்கும், மத்திய அரசின் முயற்சிக்கு தடையாக உள்ளது. நன்கு திட்டமிட்ட நடைமுறைகள், தெளிவான விதிமுறைகள் ஆகியவை இல்லாததே, இதற்கு காரணம். ஆகவே, ஒரே அமைப்பின் கட்டுப்பாட்டில், இயற்கை பொருட்கள் துறையை கொண்டு வர வேண்டும். இதன் மூலம், இயற்கை உணவுகள் என்ற பெயரில் உலவும், ‘போலி’ பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
தவறு செய்யும் நிறுவனங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வழிபிறக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, நுகர்வோர் ஏமாற்றப்படாமல், பாதுகாப்பான உணவுப் பொருட்களை பெற முடியும். இயற்கை வேளாண் பொருட்கள், உரிய விதிமுறைகளை பின்பற்றி உற்பத்தி செய்யப்படுகின்றனவா என்பதையும், அவற்றின் தரத்தையும் ஆய்வு செய்யும் பணியை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|