பதிவு செய்த நாள்
11 ஆக2017
00:02
புதுடில்லி : இந்தியாவில், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கடைபிடிக்கும் நிர்வாக கலாசாரத்தை, இதர நிறுவனங்களும் பின்பற்றும் போக்கு அதிகரித்துள்ளதாக, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
சர்வதேச ஆய்வு நிறுவனமான, கிரான்ட் தார்ன்டன், 36 நாடுகளைச் சேர்ந்த, 2,500 நிறுவனங்களின் நிர்வாக கலாசார நடைமுறைகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில், 85 சதவீத நிறுவனங்கள், நிர்வாக நடைமுறையில் ஒழுங்குத்தன்மை, பணியாளர்களை நடத்தும்விதம் உள்ளிட்ட அம்சங்களில், சுய கட்டுப்பாடுகளை உருவாக்கி வருவதாக தெரிவித்து உள்ளன.
உலகளவில், நிறுவனங்கள், சிறந்த நிர்வாக கலாசாரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க துவங்கி உள்ளன. இதற்கு, அந்தந்த துறைகள் சார்ந்த, ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையங்களின் அறிவுறுத்தலும் முக்கிய காரணம். பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ சமீபத்தில், நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்கள், நிறுவனங்களின் நிர்வாக செயல்பாடுகளுக்கான கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என, தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில், இந்திய நிறுவனங்கள், சிறந்த நிர்வாக நடைமுறைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பிட்ட கால இடைவெளியில், அனைத்து ஊழியர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அவர்களுடன் நிறுவனம் சார்ந்த தகவல்களை, பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள துவங்கி உள்ளன. அத்துடன், நிறுவன செயல்பாடுகளுக்கான ஒழுங்குமுறை விதிகளை வகுப்பது, அது தொடர்பாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இது போன்ற செயல்பாடுகள் மூலம், நிறுவனங்களின் மதிப்பும், அவற்றின் வர்த்தகமும் உயரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|