பதிவு செய்த நாள்
14 ஆக2017
08:12
கறுப்புப் பணத்தை பதுக்க உதவியதாக கருதப்படும், 331 போலி நிறுவனங்களின் (ஷெல் நிறுவனங்கள்) பங்கு வர்த்தகத்தை கண்காணிக்குமாறு, பங்குச் சந்தைகளுக்கு உஷார் அறிக்கை அனுப்பியது, இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி. இத்தனை சட்டங்களும், கட்டுப்பாடுகளும் இருக்கும் போதே, பங்குச் சந்தைகளில், ‘ஷெல்’ நிறுவனங்கள் எப்படி ஊடுருவ முடிந்தது?
ஷெல் நிறுவனங்கள் என்பவை, நேரடியாக தொழில் நடவடிக்கை எவற்றிலும் ஈடுபடாதவை. அவை, வேறு பெரிய நிறுவனங்களின் அரவணைப்பில், ஒட்டுண்ணியாக வாழ்பவை. பெரிய நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தையோ, வருவாயையோ, வரி கட்டாமல் மடை மாற்றிவிடவும் இவை பயன்படும்.இப்படிப்பட்ட ஷெல் நிறுவனங்கள், ஏராளமாக பெருகிவிட்டன; அவை தான், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பழைய பணத்தை மாற்ற பயன்பட்டன என குற்றஞ்சாட்டினார், பிரதமர் நரேந்திர மோடி.
நிறுவனங்களாக பதிவு செய்து கொண்டு, இரு ஆண்டுகளாக, எந்தவிதமான உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபடாத, 1.62 லட்சம் நிறுவனங்களை இனங்கண்டு, நீக்கும் முயற்சியும் முடுக்கிவிடப்பட்டது. கூடவே, ஷெல் நிறுவனங்களை கண்டுபிடிக்கும் வேலையும் துவங்கியது. அதன் தொடர்ச்சியாகவே, 331 நிறுவனங்களின் பட்டியலை, செபி, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு வழங்கியது.
தடை நீக்கம்:
இந்த பட்டியலை, கம்பெனி விவகாரங்களுக்கான துறை, ‘செபி’க்கு அனுப்பி வைத்தது. இந்த, 331 நிறுவனங்களில், 162 நிறுவனங்கள் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமாகி வருபவவை; 48 நிறுவனங்கள், தேசிய பங்குச் சந்தையிலும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவை.தங்கள் மீது, எப்படி நடவடிக்கை எடுக்கலாம்? அதற்கான அடிப்படை முகாந்திரம் என்ன? எங்களிடம் விளக்கம் கோரியிருக்க வேண்டாமா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி, வெகுண்டு எழுந்த ஐந்து நிறுவனங்கள், பங்கு பரிவர்த்தனை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் முறையீடு செய்தன.
அதில், ஜே.குமார் இன்ப்ரா, பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ், பிரஷ்வந்த் டெவலபர்ஸ் ஆகிய நிறுவனங்களின் மீதான, ‘செபி’யின் தடையை நிறுத்தி வைத்தது தீர்ப்பாயம்.இந்த விசாரணையின் போது, தீர்ப்பாயம் தெரிவித்தஒரு கருத்திலிருந்து தான், நாம் கேள்விகளை துவக்க வேண்டும். கம்பெனி விவகாரங்களுக்கான அமைச்சகம்,‘செபி’க்கு, 331 ஷெல் நிறுவனங்களின் பட்டியலை அனுப்பி வைத்தது, ஜூன், 9ம் தேதி. ‘செபி’ நடவடிக்கை மேற்கொள்ள, சுளையாக இரு மாதங்களை எடுத்துக் கொண்டது.
அப்படியானால், இது ஒன்றும் அவ்வளவு அவசரமான, தலைபோகிற பிரச்னை இல்லை என, ‘செபி’ கருதி உள்ளது. அதனால், இந்நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்துக்கு மட்டும் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தது, தீர்ப்பாயம். சிக்கலே இங்கு தான் துவங்குகிறது. 331 நிறுவனங்களின் பட்டியல், எப்படி தயாரிக்கப்பட்டது; அவை என்னென்ன விதிமீறல்களில் ஈடுபட்டன; எப்படி ஷெல் நிறுவனங்களாக இருக்கலாம் என்ற தீர்மானத்துக்கு, கம்பெனி விவகாரங்களுக்கான அமைச்சகம் வந்தது? பட்டியலில் உள்ளவற்றில், பல நிறுவனங்கள் மிகப்பெரிய நிறுவனங்கள். 331 நிறுவனங்களில், மக்கள் பணம், 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது, மும்பை பங்குச் சந்தை. அதில், குறைந்தபட்சம், 13 நிறுவனங்களேனும், 300 கோடி ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் காண்பிக்கும் நிறுவனங்கள்.
இவ்வளவு பெரிய நிறுவனங்களே, போலி நிறுவனங்களாக இருக்க முடியுமா? இத்தனை ஆண்டுகளாக, கம்பெனி விவகாரங்களுக்கான அமைச்சகம் என்ன செய்து கொண்டிருந்தது? ஒவ்வொருஆண்டும், அவை தாக்கல் செய்யும் ஆண்டு வரவு – செலவு கணக்கை, யாருமே கூர்மையாக கவனிக்கவில்லையா; கவனித்தும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனரா? அப்படியானால், அந்நிறுவனங்களின் மொத்த கணக்கும் சந்தேகத்துக்கிடமானவை தானே?அப்படிப்பட்ட நிறுவனங்கள், எப்படி பங்குச் சந்தையில் காலுான்ற முடிந்தது?
நிறுவனங்களை பங்குச் சந்தைகளில் பட்டியலிடுவதற்கான நடைமுறைகள் என்பவை, அவ்வளவு கிள்ளுக்கீரையாக மாறிவிட்டனவா? பங்குச் சந்தை நிர்வாகங்கள் என்பவை, சிறு முதலீட்டாளர்கள் மூலதனத்தை பாதுகாக்கும் பொறுப்பு கொண்டவையா இல்லையா? இப்படிப்பட்ட நிறுவனங்களில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் எப்படி முதலீடு செய்தன? அவர்கள் முதலீடு செய்வதற்கு முன், நிச்சயம் அடிப்படை ஆய்வுகளைச் செய்திருக்க வேண்டுமே? ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போன்ற தேர்ந்த முதலீட்டாளர்கள் கூட, இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர் என, செய்தி வருகிறது.
மேலும், இந்த, 2017ம் ஆண்டிலேயே, பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு, 188 சதவீதம் உயர்ந்துள்ளது. ஷெல் நிறுவனங்கள் என, சந்தேகிக்கப்படும் வேறு சிலவற்றின் பங்குகள், 40 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளன. அடிப்படையே இல்லாமல், எப்படி இப்படிப்பட்ட அசுர வளர்ச்சி சாத்தியம்?
சரிவு:
நிறுவனங்களை பதிவது துவங்கி, பின், அவை சமர்ப்பிக்க வேண்டிய ஆண்டு வரவு – செலவு கணக்குகளை கண்காணிப்பது வரை, பின்பற்ற வேண்டிய நெறிமுறையில் தொய்வு... பங்குச்சந்தையில் பட்டியலிட வரும் போது, அங்கே கடைபிடிக்கப்பட வேண்டிய, ‘கறார்’ தன்மையில், சரிவு... விளைவு, திடீரென்று ஒரு நாள் விழித்துக் கொண்டு, இவையெல்லாம் ஷெல் கம்பெனிகளாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை மணி!
அரசு அமைப்புகளை நம்பி, கோடானுகோடி சிறு முதலீட்டாளர்கள், தங்கள் சின்னச் சின்ன சேமிப்புகளை கூட, பங்குச் சந்தையில் போட வருகின்றனரே, அவர்களுக்கு என்ன பாதுகாப்பு? இனியேனும், இத்தகைய ஷெல் கம்பெனிகள் இங்கே செயல்பட முடியாது என்ற நம்பிக்கையையும், உத்தரவாதத்தையும் அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.
-ஆர்.வெங்கடேஷ்,பத்திரிகையாளர்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|