பதிவு செய்த நாள்
14 ஆக2017
08:16
கையில் இருக்கும் நேரத்தை, திறம்பட நிர்வகிப்பதன் மூலம், செயல்களை வெற்றிகரமாக செய்து முடிப்பதோடு, வாழ்க்கையையும் நம் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என, ‘கெட்டிங் திங்ஸ் டன்’ புத்தகத்தில், டேவிட் ஆலன் வழிகாட்டுகிறார்.
ஒருவருடைய மனம் தெளிவாக இருக்கும் போது, செயல் திறனோடு விளங்க முடியும். அதாவது ஒருவர் செய்து முடிக்காத செயல்கள், அவர்கள் அடிமனதில் தொங்கி கொண்டிருக்கின்றன. இவற்றை நீக்க வேண்டும். குறுகிய கால நினைவுத்திறனில் அதிக சுமை ஏற்றினால் பாதிப்பே உண்டாகும். செயல்களை செய்து முடிக்க, முதலில் நாம் எப்படி இருக்க விரும்புகிறோம் என்பதை எழுதி வைக்க வேண்டும். பின், ஒவ்வொரு செயலையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை எழுத வேண்டும்.
பணிகளை நிர்வகிக்க, ஐந்து கட்டங்களை கொண்ட வழி இருக்கிறது. முதற்கட்டம் செய்ய வேண்டிய அனைத்தையும் திரட்டுவது. இதற்காக குறிப்பேட்டை பயன்படுத்தலாம். அடுத்ததாக செயல்முறையில் கவனம் செலுத்த வேண்டும். செயல்களின் தன்மை குறித்து பரிசீலிக்க வேண்டும். அவை முக்கியம் இல்லை என்றால் தள்ளி வைக்கலாம். முக்கியம் என்றால், அடுத்த கட்டமாக என்ன செய்வது என, யோசிக்க வேண்டும். முடிந்தால் அதை நாமே செய்ய வேண்டும்; இல்லை எனில் உரியவரிடம் ஒப்படைக்கலாம்.
இதன் பின், செயல்களை பிரித்து வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். நினைவூட்டல் தேவையா, சேமித்து வைக்க வேண்டுமா? போன்றவற்றை தீர்மானிக்க வேண்டும். வாரம் ஒருமுறை ஆய்வு செய்து, குறிப்பிட்ட செயல்முறையை தடையில்லாமல் தொடர வேண்டும். அடுத்ததாக திட்டமிடலில் கவனம் செலுத்த வேண்டும். முதலில் நோக்கம் மற்றும் குறிக்கோளை தீர்மானிக்க வேண்டும். ஏன்... எனும் கேள்வி எழுப்பி, அதற்கான பதில்கள் மூலம் தெளிவை பெறலாம். திட்டத்திற்கான வரையறைகளை வகுத்துக் கொள்ளவும் இது உதவும்.
அடுத்ததாக முடிவின் பலனை உருவகப்படுத்தி பார்க்க வேண்டும். இனி திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகளை ஆலோசிக்க வேண்டும். யோசனைகளை எழுதி வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம், புதிய யோசனைகளும் உருவாகும்.வழிகளை ஆலோசிக்கும் போது, உங்கள் செயல்களை சீர்துாக்கிப்பார்க்கவோ, விமர்சிக்கவோ கூடாது. இவற்றை பின்னணியில் வைத்துக் கொள்ளலாம். அடுத்த கட்டமாக, முக்கிய அம்சங்களை கண்டறிந்து, அவற்றை நுணுக்கமாக திட்டமிட வேண்டும்.
இந்த செயல்முறை பலன் தர, இதில் நம்பிக்கை வைக்க வேண்டும். எல்லாவற்றையும் குறித்த காலத்தில் செய்வதன் மூலம், நம்பிக்கை உண்டாகும். பின், அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும். வாராந்திர ஆய்வு மூலம் இதை தொடர்ந்து கடைபிடிக்கலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|