பதிவு செய்த நாள்
17 ஆக2017
08:42
மும்பை : தொலை தொடர்பு சேவையில், அழைப்புகளை இணைக்கும் வசதிக்காக, நிறுவனங்கள் பெறும் கட்டணத்தை குறைக்க, தொலை தொடர்பு ஒழுங்குமுறை வாரியமான, ‘டிராய்’ திட்டமிட்டு உள்ளது. இதனால், ஏற்கனவே, ரிலையன்சின், ‘ஆர்ஜியோ’ வரவால், லாபம் குறைந்துவிட்ட நிலையில், மேலும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம், பார்தி ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஒரு தொலை தொடர்பு சேவை நிறுவன வாடிக்கையாளரின் அழைப்பு, வேறொரு சேவை நிறுவன வாடிக்கையாளருக்கு செல்லும் போது, ஐ.யு.சி., எனப்படும், இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, ஆர்ஜியோ வாடிக்கையாளர், ஏர்டெல் வாடிக்கையாளரை மொபைல் போனில் அழைக்கிறார் என, வைத்துக் கொள்வோம். இந்த அழைப்பை இணைத்து தரும் சேவைக்காக, ஏர்டெல்லுக்கு, ஆர்ஜியோ, நிமிடத்திற்கு, 14 காசுகள் வீதம் தர வேண்டும். இக்கட்டணம், 2015ல், 20 காசுகளாக இருந்தது. இக்கட்டணத்தை, ‘டிராய்’ நிர்ணயிக்கிறது. தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, ஐ.யு.சி., கட்டணத்தை அடியோடு நீக்குவது குறித்து, ‘டிராய்’ பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, தொலை தொடர்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐ.யு.சி., கட்டணத்தை அடியோடு நீக்க வேண்டும் என, பல, எம்.பி.,க்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக, தொலை தொடர்பு வாடிக்கையாளர்கள் உட்பட, பல்வேறு அமைப்பினரும், ‘டிராய்’க்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அவற்றை பரிசீலித்த டிராய், மொபைல் போன் சேவை நிறுவனங்களிடமும் கருத்து கேட்டுள்ளது. இதையடுத்து, இம்மாத இறுதியில், ஐ.யு.சி., கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, தெரிகிறது.
இக்கட்டணம் முழுமையாக நீக்கப்படாவிட்டாலும், பாதியாக, அதாவது, 5 – 8 காசுகளாக குறைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டணத்தின் அடிப்படையிலேயே, நிறுவனங்கள், தொலை தொடர்பு சேவை கட்டணங்களை நிர்ணயிக்கும். அதனால், மொபைல் போன் சேவை கட்டணம் மேலும் குறைய வாய்ப்புண்டு. இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, ‘ஐ.யு.சி., கட்டணத்தை குறைக்கக் கூடாது’ என, மொபைல் போன் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு, டிராயிடம் வலியுறுத்தி உள்ளது. ஏற்கனவே, ஆர்ஜியோவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஐ.யு.சி., கட்டணக் குறைப்பு, மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என, தெரிவித்துள்ளது.ஐ.யு.சி., கட்டணம் குறைக்கப்பட்டால், இலவச அழைப்புகளை வழங்கும் ஆர்ஜியோ அதிக பயனடையும். அதன் இணைப்பு கட்டண செலவு, வெகுவாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலை தொடர்பு அழைப்புகளை இணைப்பதற்கான, ஐ.யு.சி., கட்டணத்தை அடியோடு நீக்க வேண்டும். அப்போது, மேலும் குறைந்த கட்டணத்தில், மொபைல் போன் சேவை அளிக்க முடியும். எங்களின் இலவச அழைப்புகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்நிறுவனங்களின் வர்த்தக நிலைப்பாடு தான், வருவாய் இழப்பிற்கு காரணம்.
– ரிலையன்ஸ் ஜியோ
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|