பதிவு செய்த நாள்
18 ஆக2017
00:15
புதுடில்லி : ‘ஸ்மார்ட் போன்’ மூலம், தகவல்கள் திருடப்படுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, விரிவான விளக்கம் அளிக்குமாறு, இந்தியாவில் செயல்பட்டு வரும், சீன ஸ்மார்ட் போன் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு, ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.
சீனாவில், ஸ்மார்ட் போன், ‘சர்வர்’களில் புகுந்து, வங்கிக் கணக்கு விபரங்கள், தொடர்புகள், படங்கள் உள்ளிட்ட, அந்தரங்க தகவல்களை திருடுவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும், சீனாவைச் சேர்ந்த, ‘விவோ, ஒப்போ, ஜியோனி, ஜியோமி’ உள்ளிட்ட நிறுவனங்கள், அவற்றின் ஸ்மார்ட் போன்களில், ‘ஆண்ட்ராய்டு’ போன்ற ஆணை தொகுப்புகளில் செயல்படும், பல்வேறு சாப்ட்வேர் புரோகிராம்களையும், செயலிகளையும் இணைத்து வழங்குகின்றன.
இந்நிறுவனங்களின் மைய சர்வர்கள், சீனாவில் உள்ளன. அவற்றில் தான், இந்நிறுவனங்களின் ஸ்மார்ட் போன் ஹார்டுவேர், சாப்ட்வேர் செயலாக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இந்த சர்வர்களில், கணினி நாசகாரர்கள் நுழைந்து தகவல்களை திருடினால், இந்தியாவில், சீன நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோர் பாதிக்கப்படுவர்.
இத்தகைய நிலையை தடுக்க, தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, விரிவான அறிக்கை அளிக்குமாறு, விவோ, ஒப்போ உள்ளிட்ட, 21 நிறுவனங்களுக்கு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.
இது குறித்து, அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளின்படி தயாரிக்கப்படும் ஸ்மார்ட் போன் சாதனங்களை மட்டுமே, இந்தியாவில் விற்க முடியும். இந்த விதிமுறைகளை பின்பற்ற தவறும் நிறுவனங்கள் மீது, ஐந்து கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்தியாவில் இயங்கும் சீன நிறுவனங்கள், சர்வதேச பாதுகாப்பு விதிகளின்படி, ஸ்மார்ட் போன்களை தயாரிக்கின்றனவா என்பது குறித்து, முழுமையான அறிக்கை அளிக்குமாறு கோரப்பட்டு உள்ளன.
ஸ்மார்ட் போன் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, விரிவாக விவரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இயக்கத் தொகுப்பு, சாப்ட்வேர் புரோகிராம்கள், அப்ளிகேஷன்கள், தகவல் பரிமாற்றத்தில், ‘என்கிரிப்ஷன்’ வசதிகள் ஆகியவை தொடர்பான பாதுகாப்பும், தகவல் திருட்டை தடுக்க அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அரண்கள் குறித்தும், தெளிவாக குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சீன நிறுவனங்கள் மட்டுமின்றி, பிற நாடுகளைச் சேர்ந்த, ‘ஆப்பிள், சாம்சங், பிளாக் பெரி’ ஆகிய நிறுவனங்களுக்கும், உள்நாட்டு நிறுவனங்களுக்கும், ஸ்மார்ட் போன் தகவல் பாதுகாப்பு தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, வரும், 28க்குள் விளக்குமாறு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் மின்னணு பயன்பாடும், அதை தொடர்ந்து, ஸ்மார்ட் போன் வாயிலான நிதிச் சேவைகளும் அதிகரித்துள்ளதால், அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|