பதிவு செய்த நாள்
21 ஆக2017
05:41
பலரும் பாதுகாப்பாக உணர்வதற்காக பணத்தை சேர்க்கின்றனரேத் தவிர, வாழ்க்கையின் ஆனந்தத்தை அனுபவிக்க பயன்படுத்துவதில்லை எனக் கூறும் கிறிஸ் கிளார்க், ‘ட்ரு பேமிலி வெல்த்’ புத்தகத்தில், உண்மையான செல்வம் எது என, அடையாளம் காட்டுகிறார்.
நம்மில் பெரும்பாலானோர், செல்வம் என்பது, பணம் என்று தான் நினைக்கிறோம். வங்கியில் உள்ள பணம், வீட்டின் மதிப்பு அல்லது நிதி முதலீடுகளை செல்வம் என நினைக்கிறோம். ஒரு சிலர் இதை தேடிச் செல்கின்றனர்; சிலர் பதுக்கி வைக்கின்றனர், சிலர் இதைக்கண்டு அஞ்சுகின்றனர். நம்மில் பலருக்கு பணம் என்பது பாதுகாப்பை குறிக்கிறது. இதை சேர்ப்பதில் தான் வாழ்வின் பெரும் பகுதியை செலவிடுகிறோம். நம்மில் சிலர், இது பற்றி ஓயாமல் அச்சம் கொள்கிறோம்.
பலருக்கு பணம் தொடர்பான புரிதல் சிக்கலாக இருக்கிறது. அதிக பணம் வைத்துள்ளவர்கள் அதை இழந்து விடுவோமோ என, அஞ்சுகின்றனர். அவர்கள் தங்கள் மற்றும் பிள்ளைகள் எதிர்காலம் பற்றி கவலை கொள்கின்றனர். நீங்கள் செழுமையாக உணராவிட்டால் பணக்காரராக இருப்பதில் பலனில்லை.இளம் தலைமுறையினர் பலரும் பணம் குறித்து அச்சம் கொள்கின்றனர். இது அவர்களின் வாழ்க்கை தேர்வுகளை பாதிக்கிறது. அவர்கள் பணத்துடன் வளர்ந்தாலும் கூட, எதிர்காலத்தில் தாங்கள் விரும்பிய வாழ்க்கையை பெற முடியுமா என அச்சம் கொள்கின்றனர்.
செல்வம் இருக்கிறதோ இல்லையோ பெரும்பாலானோர் பணத்துடனான உறவிலும், மற்றவர்களுடனான உறவிலும் தடுமாறுகின்றனர். பணம் தொடர்பான நம் அணுகுமுறை தவறாக இருக்கிறது. பணம் என்பது ஒரு கருவி தான் என்பதை உணர வேண்டும். நாம் செல்வம் பற்றி மறு யோசனை செய்ய வேண்டும். செல்வம் என்பது நாம் பொக்கிஷமாக நினைப்பதை அதிகமாக கொண்டிருப்பதாகும். இது தான் உண்மையான செல்வம். இதில் பணமும் அடங்கும். நாம் நேசிக்கும் மனிதர்களும் அடங்குவர். உண்மையான செல்வம் என்பது நல்ல ஆரோக்கியம், தன்னம்பிக்கை மற்றும் அதிக சுயகவுரவமாகும். கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்பதற்கான ஆர்வம் கொண்டிருப்பதும் செல்வம் தான். தனிப்பட்ட வாழ்க்கையில் தெளிவான இலக்கு கொண்டிருப்பது மற்றும் வாழ்க்கை திசையில் தெளிவு கொண்டிருப்பது தான் செல்வமாகும்.
உண்மையான செல்வம் என்பது நம்முடைய அனுபவங்கள், வாழ்க்கை பாடங்கள், நம் பாரம்பரியம் மற்றும் நினைவுகள் ஆகும். வேறுவிதமாக சொல்வது என்றால், உண்மையான செல்வம் என்பது தெளிவான மற்றும் மகத்தான இலக்கு, அன்பான உறவுகள் மற்றும் சாதனைகளால் உருவாவது. அன்பான உறவுகள் இல்லாத பணம் மிகவும் மேலோட்டமானது. அதே நேரத்தில் பணம் இல்லாத அன்பான உறவுகள் வீணடிக்கப்பட்ட வாய்ப்புகளாகின்றன. ஒவ்வொரு உறுப்பினரும் செழித்து வளரும் போது தான் ஒரு குடும்பம் வளமாக இருக்கிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|