பதிவு செய்த நாள்
23 ஆக2017
00:35
புதுடில்லி : தென் கொரியாவில் இருந்து, அதிகளவில் தங்கம் இறக்குமதியாவதால், அந்நாட்டுடனான தாராள வர்த்தக ஒப்பந்தத்தில், விதிமீறல் நடைபெறுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க, சுங்கத் துறை முடிவு செய்துள்ளது.
இந்தியா, தென் கொரியா உடன், 2010ல், தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி, இரு நாடுகளும், அடிப்படை வரியின்றி, பரஸ்பரம் தங்கத்தை இறக்குமதி செய்து கொள்ளலாம்.இந்நிலையில், ஜூலையில், பலமுனை வரிகள் ஒழிந்து, ஒரே வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., அமலானது. அதில், ஏற்கனவே, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டு இருந்த, 12.5 சதவீத கூடுதல் வரி சேர்க்கப்பட்டது.
இதன்படி, தங்கம் இறக்குமதிக்கான மொத்த வரியினம், 10 சதவீதமாக உள்ளது. ஆனால், தாராள வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, தென் கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் தங்கத்திற்கு, 3 சதவீத, ஐ.ஜி.எஸ்.டி., தான் கணக்கிடப்படுகிறது.அதனால், ஜூலையில், தென் கொரியாவில் இருந்து அதிகளவில் தங்கம் இறக்குமதியானது. இம்மாதத்தில், தங்கம் இறக்குமதி, 210 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, 2016 ஜூலையில், 107 கோடி டாலராக இருந்தது.
பரிசோதனை:
தங்கம் இறக்குமதி, திடீரென உயர்ந்ததை அடுத்து, மத்திய வர்த்தகம், சுங்கம், பொருளாதார விவகாரங்கள் துறை அதிகாரிகள், ரிசர்வ் வங்கி உயரதிகாரிகள் ஆகியோரின் கூட்டம், டில்லியில் நடைபெற்றது. இதில், தென் கொரியா உடனான ஒப்பந்தத்தை பயன்படுத்தி, இறக்குமதியில் விதிமீறல்கள் நடக்கின்றனவா என்பதை, தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, இக்கூட்டத்தில் பங்கேற்ற உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, தங்கம் இறக்குமதி குறித்து, நிறுவனங்கள் அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில், சுங்க அதிகாரிகள் அனுமதி வழங்கி வருகின்றனர். இனி, சந்தேகத்திற்கு இடமான தங்கம் இறக்குமதியை, தற்காலிகமாக மதிப்பிட்டு, வங்கி உத்தரவாதத்தின் அடிப்படையில், ஒப்புதல் வழங்க, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதனால், இனி, தங்கம் இறக்குமதியாகும் ஒவ்வொரு சரக்கு பெட்டகங்களும், முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இந்த நடைமுறையில், வங்கி உத்தரவாதத்திற்காக, அதிக தொகை முடங்கும் வாய்ப்பு உள்ளதால், அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்ய, இறக்குமதியாளர்கள் விரும்ப மாட்டார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.
திருத்தம்:
தென் கொரியா உடனான, தாராள வர்த்தக ஒப்பந்தத்தில், பொருட்களின் மதிப்பை கூட்டுவதற்கான அளவீடு, இதர, ‘ஆசியான்’ நாடுகளுடன் செய்து கொண்ட இதே ஒப்பந்தத்தில் உள்ளதை விட, குறைவாக உள்ளது. எனவே, தென் கொரியா உடனான, ஒப்பந்த ஷரத்துகளில் திருத்தம் செய்வது குறித்து பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இக்கூட்டத்தில், தங்கம் இறக்குமதிக்கு பாதுகாப்பு வரி விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், நீண்ட ஆய்வுக்கு உட்பட்ட நடவடிக்கை என்பதால், அந்த யோசனை கைவிடப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|