பதிவு செய்த நாள்
27 ஆக2017
04:44
ஜி.எஸ்.டி., போர்ட்டலில், டிரான் – 1 படிவம் வெளிவந்து விட்டதா? அது, போர்ட்டலில் எந்த இடத்தில் உள்ளது. ‘வாட்’ இன்வாய்சை, ‘ஸ்கேன்’ செய்து, ‘அப்லோடு’ செய்ய வேண்டுமா?– ராமச்சந்திரன், மதுரை
ஜி.எஸ்.டி., போர்ட்டலில், டிரான் – 1 படிவம் தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. நீங்கள், ‘ரிட்டர்ன்’ எனும் பகுதிக்குள்சென்றால், டிரான் – 1 படிவத்தின் விபரங்கள் வரும். அதை நிரப்பி, மின்னணு மூலம் தாக்கல் செய்யலாம். நீங்கள் குறிப்பிட்டதுபோல, ‘வாட்’ இன்வாய்சை, ‘ஸ்கேன்’ செய்து, ‘அப்லோடு’ செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. நீங்கள், அதன் விபரங்களை குறிப்பிட்டால் போதுமானது.
சார், நாங்கள், 3பி ரிட்டர்ன் தாக்கலின் போது, உள் வழங்கலின் விபரங்களுக்கு பதிலாக, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ விபரங்களை தாக்கல் செய்து விட்டோம். இதை எவ்வாறு சரி செய்வது?– செந்தில் குமார், துாத்துக்குடி
இதை போன்று, பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஒருவேளை, 3பி ரிட்டர்ன் தாக்கலில், தவறாக விபரங்களை குறிப்பிட்டால், அதை, ‘ரிவைஸ்டு ரிட்டர்ன்’ எனப்படும், திருத்தப்பட்ட ரிட்டர்ன் படிவம் தாக்கல் செய்ய இயலாது. சட்டத்தில், அதற்கு வழிவகை செய்யவில்லை. அத்தகைய தவறான விபரங்களை, நாம், ஜூலை மாதத்திற்கான, ஜி.எஸ்.டி.ஆர்., 1 அல்லது ஜி.எஸ்.டி.ஆர்., 2 படிவம் தாக்கல் செய்யும் போது, திருத்திக் கொள்ளலாம். தவறான விபரங்களை தாக்கல் செய்ததற்காக, அபராதம் விதிக்கப்பட மாட்டாது.
சார், நாங்கள், சமையல் பாத்திரங்கள் விற்பனையில் உள்ளோம். இணக்க வரி நிலையை தேர்வு செய்துள்ளோம். நாங்கள் விற்பனை செய்யும் அனைத்து வரி விலைப் பட்டியலிலும், எங்களது, ஜி.எஸ்.டி., எண்னை குறிப்பிட வேண்டுமா அல்லது கம்பெனி போன்ற பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு அளிக்கும் வழங்கலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமா?– கரண், சென்னை
இணக்க வரி திட்டத்தை தேர்வு செய்தாலும், நீங்கள், பதிவு பெற்ற நபர் என்ற நிலையை பெறுவீர்கள். எனவே, நீங்கள் எழுப்பும் அனைத்து விலைப் பட்டியலிலும், தங்களுடைய, ஜி.எஸ்.டி., எண்ணை குறிப்பிட வேண்டும். மேலும், தங்களால் வரி வசூல் செய்ய இயலாது. எனவே, தங்களுடைய விலைப் பட்டியலில், ‘டாக்ஸ் இன்வாய்’ என, குறிப்பிடுவதற்கு பதில், ‘பில் ஆப் சப்ளை’ எனக் குறிப்பிட்டு, வரி வசூல் செய்யாமல் வழங்க வேண்டும்.
நான், கணினி மென்பொருள் உருவாக்கும் சேவையில், என் நிறுவனத்தின் மூலம் ஈடுபட்டுளேன். நான், வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு, ‘சாப்ட்வேர்’ செய்து தருகிறேன். இந்தியாவில், எந்த விற்பனையும் இல்லை. நான், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டுமா?– தானப்பன், சென்னை
நீங்கள், இந்தியாவில் வழங்கலில் ஈடுபடவில்லையென்றாலும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதால், அது, வெளிமாநில வழங்கலாக கருதப்படும். எனவே, நீங்கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்தல் அவசியம். எனக்கு, ‘இன்புட் டாக்ஸ்’ அதிகமாக உள்ளது. உதாரணமாக, உள்ளீட்டு வரி, 3 லட்சம் ரூபாய் உள்ளது. ‘அவுட் புட் டாக்ஸ்’ 2 லட்சம் ரூபாய் தான் உள்ளது. அதிகப்படியான உள்ளீட்டு தொகையை, எவ்வாறு திரும்பப் பெறுவது?– ஜெயகுமார், கோவை
தங்களிடம் உள்ள அதிகப்படியான உள்ளீட்டு தொகையை திரும்பப் பெற இயலாது. நீங்கள், அந்த தொகையை, அடுத்த மாதங்களில் செலுத்த வேண்டிய வரியுடன் கழித்துக் கொள்ளலாம். இதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
நாங்கள், கள்ளக்குறிச்சியில், ‘ரீடெய்ல்’ கடை நடத்தி வருகிறோம். எங்களது ஆண்டு வருமானம், 60 லட்சம் ரூபாய். நாங்கள் இதுவரை, ஜி.எஸ்.டி., பதிவு பெறவில்லை. தற்போது, இணக்க வரி தேர்வு செய்ய இயலுமா? 1 சதவீதம் வரி வசூல் செய்ய முடியுமா?– பத்மாவதி ஏஜன்சிஸ், கள்ளக்குறிச்சி
நீங்கள், புதிய பதிவு பெறுவதற்கு, மின்னணு முறையில் விண்ணப்பிக்கலாம். அதில், இணக்க வரி நிலையை தேர்வு செய்யலாம். இணக்க வரி தேர்வு செய்த, பதிவு செய்யப்பட்ட நபர், வரி வசூல் செய்யக் கூடாது. சாதாரண வரி நிலையை தேர்வு செய்த நபர் மட்டுமே, வரி வசூல் செய்து, அரசுக்கு செலுத்த முடியும்.
நாங்கள், வாடகைக்கு கார் தரும் நிறுவனம் நடத்தி வருகிறோம். மும்பை நிறுவனம் ஒன்று, தமிழகத்திற்கு வரும் பிரதிநிதிகளுக்கு உபயோகப்படுத்தும் கார்களுக்கு, மும்பை விலாசத்தில், ‘பில்’ செய்யும் போது, வரி எப்படி வசூலிக்க வேண்டும்?– சுப்ரமணியன், கோவை
நீங்கள், பதிவு செய்யப்பட்ட நபருக்கு வழங்கும் இந்த சப்ளை, வெளிமாநில வழங்கலாக கருதப்படும். எனவே, நீங்கள், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டும்.
சார், இணக்க வரியை தேர்வு செய்த நபர், அவருடைய உச்ச வரம்பு, 75 லட்சம் ரூபாயை தாண்டியவுடன், சாதாரண வரி நிலைக்கு மாற்றப்பட்டால், அவர் வழங்கிய மொத்த வழங்கலுக்கும், சாதாரண முறையில் வரி செலுத்த வேண்டுமா அல்லது அதிகப்படியான தொகைக்கு மட்டும், சாதாரண முறையில் வரி செலுத்தினால் போதுமா?– ராகவேந்திரன், சேலம்
அவர் வழங்கிய அதிகப்படியான வழங்கலுக்கு மட்டும், ஜி.எஸ்.டி., வசூல் செய்து செலுத்த வேண்டும். மொத்த வழங்கல்களுக்கும், சாதாரண நிலையில் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|