பதிவு செய்த நாள்
27 ஆக2017
04:49
சுதந்திர இந்தியாவின், மிகப்பெரியசீர்திருத்தத்தின் வாயிலில், நாம் நிற்கிறோம். ‘ஒரே நாடு; ஒரே வரி; ஒரே சந்தை’ என்ற தாரக மந்திரத்தை, ஜி.எஸ்.டி., விதிப்பு முறை, இன்று நமக்கு வழங்கி உள்ளது.
வரிகளை ஒருங்கிணைப்பதால், மத்திய அரசு, சேவைகளின் மீது வரி விதிக்கும் தன் உரிமையை, விட்டுக்கொடுக்க வேண்டி உள்ளது. மாநிலங்கள், தங்கள் விருப்பம் போல், பொருட்களின் மீதான விற்பனை வரியை நிர்ணயம் செய்யும் உரிமையை, விட்டுக்கொடுக்க வேண்டி உள்ளது.
இதனால், அரசியல் பொது நோக்கமாகிய, ‘கூட்டுறவு கூட்டாட்சி’யும், ‘பொருளாதார பொதுச் சந்தையும்’ நாட்டில் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
விலை குறையும்ஜி.எஸ்.டி., என்பது, புது வரி அல்ல. ஏற்கனவே இருக்கும் பலமுனை வரிகளை ஒருமுனைப்படுத்தி, ஜி.எஸ்.டி., வசூலிப்பதால், விளையும் நன்மைகள் அநேகம். அவற்றில், சிலவற்றை காண்போம்.
முதலில், வரி செலுத்துவோருக்கு என்னென்ன நன்மைகள் என்பதை பார்க்கலாம்.இதற்கு முந்தைய வரி விதிப்பு முறையில், பொருட்களின் விலையேற்றத்திற்கு, மத்திய, மாநில அரசுகள் விதித்த வரிகள், ஒரு முக்கிய காரணமாக இருந்தன.
அதற்கான உள்ளீட்டு வரி பயனும், முழுமையாக கிடைக்காததால், வரி செலுத்துவோராகிய நுகர்வோர், ஒரு பொருள் தயாரிப்பதில் துவங்கி, அது நுகரப்படும் வரை, பல்வேறு முனைகளில், பலதரப்பட்ட வரிகளை, வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ செலுத்த வேண்டியிருந்தது.
தற்போது, ஜி.எஸ்.டி., விதிப்பின் மூலம், இந்த குறை அறவே நீக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம், ஒருமுனை வரி விதிப்பும், அதற்குண்டான பல்வேறு நிலைகளில், உள்ளீட்டு வரி பயனும் கிடைப்பதால், பல பொருட்களின் விலை குறையும். அதை வசூலிப்பதில், வெளிப்படைத் தன்மையும் ஏற்படும்.
சுங்கச் சாவடிமாநில அளவிலான சுங்கச்சாவடி முறை, அறவே ஒழிக்கப்பட்டு விட்டதால்,பொருட்கள் மீதான போக்குவரத்து சம்பந்தமான கட்டணங்கள் கணிசமாக குறையும். இதனால், இதுவரை, மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் பரிவர்த்தனைக்கான கட்டணங்கள் குறையும்.
சிறு, குறு வணிகர்களுக்கான, ‘தொகுப்பு வரி திட்டம்’ மூலமும், வரிச்சுமை குறைக்கப்பட்டு உள்ளதால், அத்தகைய பொருட்களை உபயோகிக்கும் நுகர்வோருக்கும், குறைந்த வரி செலுத்தி பொருட்களை வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
ஒரு பொருளை உள்நாட்டில் வாங்குவதற்கும், இறக்குமதி செய்வதற்குமான வரி விதிப்பில், சமநிலை ஏற்பட்டு, சந்தையில் சமமான போட்டி உண்டாகும். இதனால், வரி செலுத்துபவர், இந்தியாவிலேயே பொருட்களை தயாரிக்க ஊக்கம் ஏற்படும். இது, ‘மேக் இன் இந்தியா’ என்ற உற்பத்தித் திறனை வளர்க்கும்.
தொழில் துறை
ஜி.எஸ்.டி., அறிமுகத்துக்கு முன், தொழில் துறையினர் வரி வசூலிப்பது, செலுத்துவது சம்பந்தமாக, பல்வேறு அலுவலகங்களுக்கு அலைய வேண்டி இருந்தது. அதே போல், பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் போதும், நிறைய சிரமங்கள் ஏற்பட்டன.
தற்போது, ஜி.எஸ்.டி., முறையால், இத்தகைய நிலை அறவே ஏற்படாது. உள்நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகள் கொள்முதலை பொறுத்தவரை, தொழில் துறையினர், ஏதாவதொரு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகத்தை மட்டும் அணுகினாலே போதுமானது. மேலும், ஏற்கனவே கூறியது போல, தடையற்ற உள்ளீட்டு வரி பயன் முறை மூலம், வரிச்சுமை கணிசமாக குறையும்.
இதுவரை, தொழில் துறையில் நிலவி வந்த, பல மோசடி முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளதால், நியாயமான முறையில் தொழில் புரிவோருக்கு நல்ல ஊக்கம் கிடைக்கும்.
வரி செலுத்துதல்
சம்பந்தமான அனைத்து படிவங்களும், இணையத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளதால், குழப்பம், சந்தேகம் எதுவுமில்லாமல், அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், ‘செயல்பாட்டு செலவு’ குறையும். நுகர்வோருக்கு நன்மை அடுத்து, மக்களுக்கு, ஜி.எஸ்.டி., மூலம் என்னென்ன நன்மைகள் என, பார்க்கலாம்.
மறைமுக வரிகள் ஒருமுகப்படுத்தப்பட்டு, உள்ளீட்டு வரி பயனும் ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளதால், கள்ளச் சந்தை ஒழிந்து, நல்ல சந்தை உருவாகும். இதன் மூலம், பொருட்கள் மற்றும் சேவைகள், நியாயமான விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், ஒரே வரி விதிப்பு முறையால், பொதுச் சந்தை உருவாக துவங்கி உள்ளது.
பொருட்கள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது, சேவைகள் அளிப்பது ஆகியவை எளிமையாக்கப்பட்டதாலும், பொருட்கள் போக்குவரத்து விரைவுபடுத்தப்பட்டு உள்ளதாலும், இதில் ஈடுபட்டுள்ளவர்கள் வருமானம், வாழ்க்கைத் தரம் உயர வழிவகை ஏற்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி.,யின் முக்கியமான ஒரு சிறப்பம்சமாக, அமைப்பு சாரா தொழில்கள் மற்றும் சேவைகளை, ஓர் அமைப்பின் கீழ் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால், அமைப்பு சாரா தொழில் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும்சேவைகள், பொதுமக்களை எளிதில் சென்றடைய வழி ஏற்பட்டுள்ளது.
ஒருவர், அமைப்புசார் தொழில் மூலம் பெறும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்குஇணையாக, இந்த அமைப்பு சாரா தொழில் மற்றும் சேவைகளை தரம் உயர்த்தவும், பொதுமக்கள், குறைந்த விலையிலேயே பொருட்கள் மற்றும் சேவைகளை, அமைப்பு சார் தொழில் மற்றும் சேவைகளுக்கு நிகராக பெறவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.
ஆக, மொத்தத்தில், ஜி.எஸ்.டி., விதிப்பின் பல்வேறு பரிமாண தாக்கங்களால், பொதுமக்களுக்கு நன்மைகள் தான் அதிகம் ஏற்படும்.
தவறான கருத்து
இதுவரை, யார் யாருக்கு என்னென்ன நன்மைகள் என்பதை பார்த்தோம். இனி, அடுத்த கேள்வி, எது நல்ல, ஜி.எஸ்.டி.,யாக இருக்க முடியும்?
வரி செலுத்துபவரால், அது சரியாக பின்பற்றக்கூடிய முறையில் இருக்கிறதா; வரி அடித்தளத்தை அது விரிவுபடுத்துமா; விலைவாசியை அது குறைக்குமா அல்லது சமனப்படுத்துமா; அரசின் வரி வருமானம் அதிகரிக்குமா; மக்களிடையே செல்வாக்கை பெறுமா என்பவற்றை பொறுத்து, அது அமையும்.
இதற்கு பதிலாக, தேவையில்லாத, அதிகபட்சமான நோக்கங்களை, ஜி.எஸ்.டி., மீது சுமத்துவது, முற்றிலும் தவறானது. பெரும்பாலான பத்திரிகை செய்திகளும், சமூக ஊடகங்களும், இத்தகைய தேவையில்லாத ஆட்சேபங்களையே, ஜி.எஸ்.டி., மீது சுமத்துகின்றன.
ஜி.எஸ்.டி., என்பது, ஒரு நுகர்வு வரி. எனவே, ஒரு பொருளோ அல்லது சேவையோ, யாரை கடைசியாக சென்றடைகிறதோ, அவர்கள் மேல் தான் அந்த வரிச்சுமை விழும். எனவே, ஜி.எஸ்.டி.,க்குள் வரி விகித வேறுபாடு இருந்தால், அது, ஏழை மக்களின் நுகர்வுக்கு ஏற்றார்போல அமைய வேண்டுமே தவிர, செல்வந்தர்களின் நுகர்வுக்கு ஏற்ப அல்ல.
மேலும், இந்த வரி விகித வேறுபாடு மூலம், வேலைவாய்ப்பு, தொழில் கொள்கை, சமூக சீர்திருத்தம் இவற்றில் மிகப்பெரிய மாறுதல் கொண்டு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை.‘ஒரே நாடு; ஒரே வரி’ எனச் சொல்லிவிட்டு, ஐந்து வரி விகிதங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதே என்றால், அதற்கு மேற்கூறப்பட்டதே பதிலாக அமையும்.
எரிபொருள்
ஜி.எஸ்.டி., என்பது, மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியாகும். ஜி.எஸ்.டி., விதிப்பால், மாநிலங்கள் விதித்து வந்த, ‘வாட்’ வரி மாறுதலுக்கு உட்பட்டு, மாநிலங்களின் வரி வருவாய் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
இதை தவிர்க்க, வருவாய் இழப்பை சந்திக்கக்கூடிய மாநிலங்களின், வரி விகிதத்துக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும், வரி விகிதங்களை நிர்ணயிக்கையில், உள்ளீட்டு வரி பயனின் விளைவுகளையும் கணக்கில் கொள்ளப்பட்டது.சரி, ஜி.எஸ்.டி.,யில் குறையே இல்லையா?
பெரிய குறை என, ஏதாவது சொல்வதென்றால், சில பொருட்களுக்கு, அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதை சொல்லலாம். பெட்ரோலிய கச்சா எண்ணெய், அதிவேக டீசல், பெட்ரோல், இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருள் ஆகியவையே அவை. ஆனால், அதுவும் தற்காலிகமானது தான்.பெட்ரோலியப் பொருட்கள் மூலம், இப்போது கிடைக்கும் கலால் வரி, மொத்த கலால் வரி வசூலிப்பில், 40 சதவீதமாகும்.
மேலும், மாநிலங்கள் இவற்றின் மீதான விற்பனை வரியை கூட்டவோ, குறைக்கவோ வழியிருப்பதால், இது, பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயமாகும். அதனால், ஜி.எஸ்.டி.,யின் கீழ், பெட்ரோலியப் பொருட்களை எதிர்காலத்தில் கொண்டு வர, சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
வரி விகிதம்
ஜி.எஸ்.டி.,யை, இதுவரை, கொள்கை அளவில் அலசினோம். தீர்வையில், இப்போதுஇருக்கும் பிழைகள் என்னவாயிருக்கலாம்; அவை சரியா? அவற்றின் தீர்வு என்ன என்பதை பார்க்கலாம்.
முதலில், பெரும்பாலோருடைய சந்தேகமாக இருப்பது, ‘ஒரே நாடு; ஒரே வரி’ என்ற முழக்கத்தை கூறிவிட்டு, ஏன் பல வரி அடுக்குகள் ஏற்படுத்தப்பட்டன என்பதே. இதற்கான விடை, ‘ஒரே வரி’ என்பது, ஒரே வரி விதிப்பு முறையை குறிப்பிடுகிறதே ஒழிய, ஒரே வரி விகிதத்தை குறிப்பதல்ல.
மேலும், இத்தகைய பல்லடுக்கு வரி விகிதம் இல்லாமலிருப்பது, அதிக பணவீக்கத்திற்கு வழிவகை செய்வது மட்டுமின்றி, வரி விதிப்பில், பாரபட்சத்திற்கும் வழிவகுக்கும். உதாரணத்திற்கு, அன்றாட உபயோகப் பொருட்களுக்கும், ஆடம்பர உபயோகப்பொருட்களுக்கும், ஒரே வரி விகிதம் இருக்க முடியுமா? அது, வளரும் நாடான, இந்தியா போன்ற நாடுகளில் சாத்தியம் தானா? அதனால் தான், பெரும்பாலான உணவுப் பொருட்கள், இயற்கை விளை பொருட்கள் ஆகியவற்றிற்கு, வரி விதிக்கப்படவில்லை.
தங்கத்திற்கு, 3 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, பொருட்கள் மற்றும் சேவைகளின் வகையை பொறுத்து, 5, 12, 18 மற்றும் 28 சதவீத வரிகள் விதிக்கப்பட்டு உள்ளன.
தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களான, பான் மசாலா, புகையிலை பொருட்கள், செயற்கை குளிர்பானங்கள், சொகுசு கார்கள் மற்றும் நிலக்கரி (சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதன் காரணமாக) ஆகியவற்றின் மீது, கூடுதல் தீர்வை விதிக்கப்பட்டு உள்ளது.
சவால்தவிரவும், இந்தியா போன்ற ஆளுவதில் சிரமங்கள் நிறைந்த, தொழில்நுட்ப முன்னேற்றங்களை, மெதுவாக மேற்கொள்ளும் முயற்சிகளை உடைய, விழிப்புணர்வு குறைவாக உள்ள நாடுகளில், ஜி.எஸ்.டி., போன்ற வரி விதிப்பு முறையை, திறம்பட செயல்படுத்துவது மிகவும் சவாலானது.
இந்த, ஜி.எஸ்.டி., மாற்றமானது, நன்கு விவாதிக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டிருந்தாலும், சமூக மற்றும் பொருளாதார காரணிகளை கொண்டு, வரி விதிப்பு முறையில், மேலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுவதாக, மத்திய நிதியமைச்சரும்,வருவாய் துறை செயலரும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கூறியுள்ளது, மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியதாகும். ஜி.எஸ்.டி.,யில், ‘புதிய மொந்தையில், பழைய கள்’ என்ற சங்கதி இல்லை. இதற்கு முன், அமலில் இருந்த, மத்தியகலால் வரி சட்டம் – 1944, நிதி சட்டம் – 1994 மற்றும் பல்வேறு மாநிலங்களின் விற்பனை வரி சட்டங்களை ஒருங்கிணைப்பதிலும், அதில் அமலில் இருந்த சிரமங்களை களைந்ததிலும், அதை, மேலும் எளிமையாக்கி, சட்ட வடிவம் அளித்ததிலும், ஜி.எஸ்.டி., கவுன்சில் எனும் அமைப்பின் பங்கு அளப்பரியது.
நிறைகளே அதிகம்
இந்தியா, ஒரு பன்முக பரிமாணங்களை உள்ளடக்கிய நாடு. அதனால் தான், எந்தவொரு வரி சீர்திருத்தமும் அமல்படுத்தப்படும் முன், தீவிரமாக அலசி, ஆராய்ந்து, ஆலோசனைகள் பெறப்படும். பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்படும்.
இத்தனை செரிமானம் செய்த பின்னே, ஜி.எஸ்.டி., விதிப்பு முறை அமலுக்கு வந்திருக்கிறது. எனவே தான், குறைகளை விட, நிறைகளே அதிகம் காணப்படுகின்றன.ஜி.எஸ்.டி., அமலின் பின்னே உள்ள முக்கியமான நோக்கம், ‘ஒரே சந்தை’ அல்லது ‘நாடு முழுவதும் பொதுச் சந்தை’ என்ற ஏற்பாட்டை செய்வதாகும். இத்தகைய ஓர் ஏற்பாட்டை கொண்டு வர, சில காலம் காத்திருக்க வேண்டி வரும்.
ஏனெனில், ஜி.எஸ்.டி., அமலாக்கத்திற்கு, இந்திய சந்தை, மாநிலங்கள் அளவில் எதிர்வினை புரிய வேண்டும். இதுதவிர, உள்நாட்டு சந்தை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஏற்பாட்டுடன் இணைந்து செயல்பட, சில காலம் பிடிக்கலாம்.
- மாநிலங்களுக்கு எதிரான வரி விதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?
- ஜி.எஸ்.டி., பிரிட்டனின் விலகல் போன்ற நிலை, இந்தியாவில் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
- பணவீக்கம் உயருமா?
- ஆஸ்திரேலியா, மலேஷியா போன்ற நாடுகளிலிருந்து, பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறோமா?
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|