பதிவு செய்த நாள்
28 ஆக2017
07:28
இந்தியா, நுகர்வோரின் சந்தையாகி வெகு காலமாகி விட்டது. அதனால், நுகர்வோரே, சந்தையின் போக்கை தீர்மானிப்பவர்களாகவும் விளங்குகின்றனர். அரசு இயந்திரம், ஒழுங்குமுறைப்படுத்தும் ஓர் அமைப்பாக மட்டுமே செயல்பட வேண்டிய காலம், வெகு தொலைவில் இல்லை. இதற்கான, தானியங்கி மற்றும் சுய பரிசோதனை கட்டுப்பாடுகள், ஜி.எஸ்.டி., சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளதே, இதன் சிறப்பாகும்.
இந்த சட்டம், ஒரு விளக்கமான மற்றும் சுய நிர்வாகச் சட்டமாக உள்ளதால், இதனால் ஏற்படும் சில சிறிய பிரச்னைகளை, வெகு சுலபமாக களைய முடியும். இதுதவிர, அரசு துறைகள் மேற்கொள்ளும், பல்வேறு தணிக்கை நடவடிக்கைகளும் குறைந்து, மிகவும் தேவையான இடங்கள் மற்றும் நேரங்களில் மட்டுமே, தணிக்கை செய்யப்படும் என்பதாக மாறிவிடும்.
பிரிட்டன்:
தற்போது, உலக பொருளாதார அளவில், பல பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக, ஐரோப்பிய பொருளாதாரத்திலிருந்து பிரிட்டனின் விலகல். இது, பொதுச் சந்தை எனும் கருத்துக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில், நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஐரோப்பிய கூட்டமைப்பு என்பதே, பல நாடுகளின் கூட்டணி ஆகும். ஏதாவது ஒரு நாடு, தன்னுடைய நலன்கள், ஒரு பொது நோக்கத்திற்கு பலியிடப்படுகிறது என, எண்ணுமேயானால், கூட்டணிஎந்நேரமும் முறியும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது தான், ‘பிரக்ஸிட்’ [BREXIT] எனப்படும், பிரிட்டனின் விலகலில் ஏற்பட்டது.
இந்தியாவில், இது போன்றதொரு நிலை உண்டாகுமா? அதற்கான வாய்ப்பே இல்லை என, கூறலாம். முதற்கண், ஐரோப்பிய கூட்டணி நாடுகள் போல, இந்தியா பல நாடுகளின் கூட்டணி அல்ல. இந்தியா, பல மாநிலங்களின் தனித்துவமான கூட்டாட்சி தத்துவத்தில் இயங்கும், ஓர் அமைப்பாகும். அடுத்து, ஜி.எஸ்.டி., சட்டம், மூன்று பிரிவுகளாக இயற்றப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி., சட்டம் (ஐ.ஜி.எஸ்.டி.,) – மாநிலம் விட்டு மாநிலம், இறக்குமதி வரி விதிப்பு போன்றவை; மத்திய,ஜி.எஸ்.டி., சட்டம் (சி.ஜி.எஸ்.டி.,) –உள்மாநில மற்றும் யூனியன் பிரதேச வரி விதிப்பில், மத்திய அரசின் பங்கு; மாநில மற்றும் யூனியன் பிரதேச, ஜி.எஸ்.டி., சட்டம் (எஸ்.ஜி.எஸ்.டி., – யு.ஜி.எஸ்.டி.,) –உள்மாநில மற்றும் யூனியன் பிரதேச வரி விதிப்பில், அந்தந்த மாநில அல்லது யூனியன் பிரதேசங்களின் பங்கு.
இதில் வரும் இரு பிரிவுகளில் – மத்திய, ஜி.எஸ்.டி., சட்டம் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேச, ஜி.எஸ்.டி., சட்டங்கள், அதன் வரி விகிதங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. அதனால், ஏதாவதொரு மாநிலத்திற்கோ அல்லது யூனியன் பிரதேசத்திற்கோ எதிரான வரி விதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை.
நஷ்டஈடு:
ஜி.எஸ்.டி., என்பது, நுகர்வை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வரி விதிப்பு முறை என்பதால் தான், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில், நுகர்வு அதிகமாக இருந்தாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் உற்பத்தி அதிகமாக இருந்தாலோ, அதை சமன் செய்யும் பொருட்டு, மாநிலங்களுக்கான நஷ்ட ஈட்டை வழங்கும் சட்டமும், இந்த, ஜி.எஸ்.டி., சட்டத்தின் ஒரு பகுதியாக, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தின் மூலம், அறிவியல்பூர்வமாக, ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்படும் இழப்பீடு கணக்கிடப்பட்டு, மத்திய அரசால், தகுந்த நஷ்ட ஈடு வழங்கப்படும். இதில், நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுவரை, மாநிலங்களுக்கு, சேவைகள் மீது வரி விதிக்கும் உரிமை இருந்ததில்லை.
ஆனால், மேற்கண்ட, ஜி.எஸ்.டி., சட்டங்கள் மூலம், சேவைகளின் மீது, மாநிலங்களுக்கான, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு சாத்தியமாகி உள்ளது. இது, மறைமுகமாக, மத்திய அரசு, உற்பத்தி அதிகமுள்ள மாநிலங்களுக்கு தர வேண்டிய நஷ்ட ஈட்டை குறைக்கவும் உதவும்.தற்போது, சில பொருட்களை வாங்கும் போதும், சேவைகளை பெறும் போதும், விலையேற்றம் ஏற்பட்டுவிட்டதாக ஒரு கருத்தும் நிலவுகிறது. ஒரு பொருளுக்கு, முன் இருந்த நிலையிலிருந்து, ஜி.எஸ்.டி.,யில், வரி சிறிது அதிகமாக இருந்தாலும், வர்த்தகர், அப்பொருளின் விலையை ஏற்றிவிடுகிறார். ஆனால், அவருக்கு உள்ளீட்டு வரி பயனை, ஜி.எஸ்.டி.என்.,–ல் தெரியப்படுத்த, மூன்று மாதங்கள் அவகாசம் இருப்பதால், தற்போது, அதன் தாக்கம் உணரப்படவில்லை. எனவே, தற்காலிகமாக, சில பொருட்களின் விலை ஏறியிருக்க வாய்ப்புள்ளது.
தவிர, முன், 15 சதவீதமாக இருந்த சேவை வரி, தற்போது, ஜி.எஸ்.டி.,யில், 18 வரி விகித அடுக்கில் வந்துவிட்டதால், சில சேவைகளின் மீதான வரி விதிப்பு அதிகமாகிவிட்டது. ஆனால், இத்தகைய சேவை வழங்குவோருக்கு உரிய உள்ளீட்டு சேவைகளின் மீதான வரி பயனும், இதே அளவில் உயர்ந்தே அவருக்கு கிடைப்பதால், அத்தகைய சேவைகளின் விலை, சிறிதளவு உயரவே வாய்ப்பிருக்கிறது. இதை, நுகர்வோர் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
கண்காணிப்பு:
மேலும், குறைந்த கால அளவில் நோக்கினால், ஜி.எஸ்.டி.,யால் சிறிதளவுக்கு பணவீக்கம் உயர வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பெரும்பாலும், சேவை துறையையே சார்ந்துள்ளதும், ஜி.எஸ்.டி., விதிப்பில், சேவைகளுக்கான வரி விகிதம், 3 சதவீதம் உயர்ந்திருப்பதும் ஆகும்.இது மட்டுமின்றி, வர்த்தகர்கள், தங்கள் உள்ளீட்டு வரி பயனை, ‘ரீபண்டு’ பெறும் காலம் வரை, அவர்கள், வணிகத்தில் முதலீடு செய்துள்ள மூலதனத்தை உபயோகப்படுத்துவது இயலாததாகிறது. தவிர, மாநிலங்கள், ஜி.எஸ்.டி., தவிர, விதிக்கும் மேலும் சில வரியினங்களால், விலைவாசி ஏற வாய்ப்பிருக்கிறது.
சில மாநிலங்கள், விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இத்தகைய நிகழ்வுகளால், அந்தந்த மாநிலங்களின் நிதிநிலை மீது அழுத்தம் ஏற்படவும், விலையேற்றம் அல்லது பணவீக்கம் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.இத்தகைய பணவீக்கம், பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் என்பதால், ஜி.எஸ்.டி.,யின் குறுகிய கால விளைவுகள் பற்றி, அரசு நேரடி கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும், அரசு அவ்வப்போது செய்கிறது.
எடுத்துக்காட்டாக, நாடு முழுவதும், பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைமாற்றத்தை கண்காணிக்கவும், அவற்றை, அவ்வப்போது அரசுக்கு தெரியப்படுத்தி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், 205 அரசு உயரதிகாரிகளை, ஐந்து மாவட்டங்களுக்கு ஒரு அதிகாரி என்ற விகிதத்தில், அரசு நியமித்துள்ளது.இதுதவிர, அரசின் முக்கியமான, 18 துறைகள் மீது, ஜி.எஸ்.டி., விதிப்பின் விளைவுகள் என்ன என்பதை கண்டறிந்து, அதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி, துறை சார்ந்த செயற்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இத்தகைய முயற்சிகள் மூலம், அரசு, விலைவாசி ஏற்றத்தை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கிறது.
உரிமை பாதுகாப்பு:
இந்த, ஜி.எஸ்.டி., விதிப்பின் மூலம், நம் நாட்டில், ‘நிதி கூட்டாட்சி நிர்வாகம்’ எனும், புதிய பரிமாணம்விரைவில் ஏற்படப் போகிறது. வரி விகிதங்களை தீர்மானிப்பதில், ஜி.எஸ்.டி., சபையே உச்சகட்ட அமைப்பாக உள்ளதால், வரி விதிப்பில் ஒரு ஸ்திரத்தன்மையும், எல்லா மாநிலங்களின் உரிமைகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.உண்மையில், இந்த, ஜி.எஸ்.டி.,சபை மூலம், மத்திய அரசானது, இதுவரை வரி விதிப்பில் கொண்டிருந்த, தன் ஏகபோக உரிமையை விட்டுக் கொடுத்து, மாநிலங்களின் உரிமைகளோடு பகிர்ந்து கொண்டுள்ளது.
மேலும், மத்திய அரசானது, ஜி.எஸ்.டி., சபையில், மூன்றில் ஒரு பங்கு ஓட்டுரிமை மட்டுமே கொண்டிருப்பதால், வரி விதிப்பில், மாநிலங்களின் பெரும்பான்மை கருத்துக்கே, முதலிடம் அளிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.ஜி.எஸ்.டி., விதிப்பு அமல்படுத்தப்பட்ட சில நாடுகளில், அதை அமல்படுத்தும் போது ஏற்பட்ட, அசாதாரணமான நிதானத்தால், மக்களின் போராட்டங்கள் ஏற்பட்டன. உதாரணம், மலேஷியா. ஆனால், நம் நாட்டில், ஜி.எஸ்.டி., அமலாக்கம், பிற நாடுகளில் ஏற்பட்ட பிரச்னைகள், அவற்றின் தீர்வுகள், இவற்றிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள், கணினிமயமாக்கல், வரி விலக்களித்தல், வரி அடுக்கை நிர்ணயம் செய்தல் போன்ற, பல்வேறு அலசல்களுக்கு பின்னே சாத்தியமாகி உள்ளது.
‘பிறரின் அனுபவங்களில் இருந்து, பாடம் கற்பவனே புத்திசாலி’ என்ற அறிஞர்களின் கூற்றுக்கேற்ப, இந்தியா நிச்சயமாக, ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட நாடுகளான, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, மலேஷியா போன்றவற்றிடமிருந்து, பல நல்ல பாடங்களை கற்றுள்ளது என்றால், அது மிகையாகாது. மேலும், சென்றடையும் திட்டம், அலுவலர்களுக்கு பயிற்சி, சேவை மையங்கள் அமைப்பது என, பல வழிகளில், ஜி.எஸ்.டி., விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, சந்தேகங்களை நீக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும், விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
முற்றுப்புள்ளி:
ஜி.எஸ்.டி., சம்பந்தமான, எல்லாவகையான பணிகளும், ஜி.எஸ்.டி.என்., எனப்படும், பொது அமைப்பின் மூலம் இணையவழி நடைபெறும். இதனால், பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவோர், வரி சம்பந்தமான தங்கள் தேவைகளை, அரசு அலுவலகங்களுக்கு செல்லாமலேயே நிறைவேற்றிக் கொள்ள, நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மேலும், ஜி.எஸ்.டி., சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள, ‘கொள்ளை லாபத்திற்கு எதிரான ஏற்பாடு’ அதீத லாபம் ஈட்ட முயல்வோருக்கு, ஒரு முட்டுக்கட்டையாக அமையும். இனிமேல், வரி விலக்கு அளிக்கப்பட்டோர் தவிர, பொருட்கள் மற்றும் சேவைகளை அளிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள்,ஜி.எஸ்.டி., ஐ.என்., எனப்படும், ஜி.எஸ்.டி., குறியீட்டு எண்ணை, கண்டிப்பாக, தங்கள்ரசீதுகளில் குறிப்பிட வேண்டும். இதனால், முறையற்ற வணிக நோக்கங்களுக்கு, ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி., சம்பந்தமான எல்லா பரிவர்த்தனைகளும், இணையவழியே நடைபெறுவதால், பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய எல்லா விபரங்களையும், அரசும், வணிகர்களும் இணையவழியே சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த முயற்சியால், வரி ஏய்ப்பு பெருமளவில் தவிர்க்கப்படும்.மேலும், உள்ளீட்டு வரி பயன், எல்லா நிலைகளிலும் நன்கு கண்காணிக்கப்படுவதால், அரசுக்கு இதுவரை ஏற்பட்டு வந்த வருவாய் இழப்பு, பெருமளவில் தடுக்கப்பட்டுவிடும்.
முடிவாக, இந்த, ஜி.எஸ்.டி., முறையால், நாட்டின் கூட்டாட்சித் தன்மை பாதிக்கப்படுமா; 125 கோடி நுகர்வோருக்கு நல்ல பலன் ஏற்படுமா?வரி அடித்தளம் விரிவடையுமா; ஊழலற்றவரி முறைமைக்கு வழிவகுக்குமா; வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு, வளர்ச்சி ஏற்படுமா; மாநிலங்களின் நிதி சுதந்திரம் பாதிக்கப்படுமா; ஏற்றுமதி செய்யும் மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படுமா என, பல கேள்விகள், ஜி.எஸ்.டி., மசோதா ஏற்றுக் ள்ளப்படுவதற்கு முன், லோக்சபாவில் கேட்கப்பட்டன.இவற்றிற்கு, காலம் பதில் சொல்லும். அது, நிச்சயமாக நல்ல பதிலையே சொல்லும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் தான் தென்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|