பதிவு செய்த நாள்
30 ஆக2017
23:51
நான், சென்னையில் மகளிர் விடுதி ஒன்றை நடத்தி வருகிறேன். தங்கும் இடம், சாப்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு, மாதம் ஒன்றுக்கு, நபருக்கு, 8,000 – 10 ஆயிரம் ரூபாய் வரை வாங்குகிறோம். எங்களுக்கு, ஜி.எஸ்.டி., வருமா? ஜி.எஸ்.டி., வராது என்றால், நாங்கள் மளிகை மற்றும் சாமான்கள் வாங்கும் போது, ஜி.எஸ்.டி., எண் கேட்கின்றனர். நாங்கள், ஜி.எஸ்.டி., கொடுத்து சாமான்கள் வாங்கினால், அதன், ஜி.எஸ்.டி., தொகையை எப்படி வசூல் செய்வது?– பி.பத்மா, பெரம்பூர்
உங்களுடைய ஆண்டு மொத்த வழங்கலின் மதிப்பு, 20 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், நீங்கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. மளிகை மற்றும் பிற செலவுகளில் செலுத்திய, ஜி.எஸ்.டி.,யை, நீங்கள் உள்ளீட்டு வரி பயனாக பெற இயலாது. ஒருவேளை, உங்களுடைய ஆண்டு வருமானம், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், நீங்கள் பதிவு செய்து, 18 சதவீத வரி வசூல் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு பெற்றால், உங்களுக்கு உள்ளீட்டு வரி பயன் கிடைக்கும்.
நான், வீட்டில் மெத்தை, தலையணை மற்றும் பாவாடைகள் செய்து, 15 கி.மீ., துாரத்தில் உள்ள, என் கடையில் விற்பனை செய்கிறேன். ஜி.எஸ்.டி., பதிவு, இரு இடங்களுக்கும் உள்ளது. சரக்குகளை தயார் செய்து, வீட்டிலிருந்து கடைக்கு, 20 நாட்களுக்கு ஒருமுறை ஆட்டோவில் எடுத்து செல்கிறோம். இதன் மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய்க்குள் தான் இருக்கும். சரக்குடன் என்ன, ‘பில்’ வைக்க வேண்டும்?– முத்து, திருப்பத்துார்
நீங்கள், உற்பத்தி செய்த பொருட்களை கடைக்கு எடுத்துச் செல்லும் போது, ‘டெலிவரி சலான்’ மூலம், சரக்குகளை அனுப்ப வேண்டும். இதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்படமாட்டாது.
நான், ஓராண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்குள் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன். அதனால், என்னுடைய, ஜி.எஸ்.டி.,யின் தற்காலிக பதிவை ரத்து செய்து விட்டேன். நான், உள் மாநிலத்தில் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும், வியாபாரத்திற்கு பொருட்களை வாங்க முடியுமா?– ராஜகோபால், அருப்புக்கோட்டை
நீங்கள், பதிவை ரத்து செய்த காரணத்தால், உங்களுடைய கொள்முதலில் எந்த பாதிப்பும் இருக்காது. நீங்கள், தாராளமாக உள் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து பொருட்களை வாங்க முடியும். இதற்கு, தடை இல்லை. உங்களால், கொள்முதலில் செலுத்திய, ஜி.எஸ்.டி.,யை உள்ளீட்டு வரி பயனாக பெற இயலாது.
சார், இணக்க வரி நிலையை தேர்வு செய்த நபர், அவருடைய உச்ச வரம்பு, 75 லட்சம் ரூபாயை தாண்டியவுடன், சாதாரண வரி நிலைக்கு மாற்றப்பட்டால், அவர் வழங்கிய மொத்த வழங்கலுக்கும், சாதாரண முறையில் வரி செலுத்த வேண்டுமா அல்லது அதிகப்படியான தொகைக்கு மட்டும், சாதாரண முறையில் வரி செலுத்தினால் போதுமா?– ராகவேந்திரன், சேலம்
அவர் வழங்கிய அதிகப்படியான வழங்கலுக்கு மட்டும், ஜி.எஸ்.டி., வசூல் செய்து செலுத்த வேண்டும். மொத்த வழங்கலுக்கும், சாதாரண நிலையில் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.
நான், சிறுவர் உல்லாச பூங்கா ஒன்றை நடத்தி வருகிறேன். ஜி.எஸ்.டி., பதிவு செய்துவிட்டேன். நுழைவுக் கட்டணம் மற்றும் இதர விளையாட்டு கட்டணங்களுக்கு, இப்போது எத்தனை சதவீதம் வரி கட்ட வேண்டும்?– ஆர்.ரவீந்திரன், தேனிநீங்கள், 28 சதவீத வரி வசூல் செய்து, அரசுக்கு செலுத்த வேண்டும்.
‘டேக்ஸ் இன்வாய்ஸ்’ என்றால் என்ன?– பழனிசாமி, கோபிசெட்டிபாளையம்
வரி விலைப் பட்டியல் என்ற சொல்லே, ஆங்கிலத்தில், ‘டேக்ஸ் இன்வாய்ஸ்’ எனப்படுகிறது. ஜி.எஸ்.டி., பதிவு பெற்ற நபர், வரி விதிப்பிற்குரிய வழங்கலில் ஈடுபடும் போது, இதை பெறுநருக்கு அளிக்க வேண்டும். அதில், தன்னுடைய, ஜி.எஸ்.டி., பதிவு எண், வரி விலைப் பட்டியல் எண், தேதி, முகவரி, சரக்கின் அல்லது சேவையின் விபரம், பெறுநர் பதிவு செய்யப்பட்ட நபர் என்றால், அவரின், ஜி.எஸ்.டி., பதிவு எண், வரியின் சதவீதம், தொகை போன்ற விபரங்களை, தெளிவாக குறிப்பிட வேண்டும். இது, மின்னணு மூலம் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|