பதிவு செய்த நாள்
02 செப்2017
00:22
புதுடில்லி : பங்கு வர்த்தக நேரத்தை இரவு 7.30 மணி வரை நீட்டிப்பது குறித்து, இந்திய பங்குச் சந்தைகள் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மிகப் பெரிய பங்குச் சந்தைகளாக மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் விளங்குகின்றன. இவற்றுடன், கோல்கட்டா, கொச்சி என, பல்வேறு நகரங்களில், சிறிய அளவிலான பங்குச் சந்தைகள் இயங்கி வருகின்றன. இச்சந்தைகளில், 2009 வரை, பங்கு வர்த்தகம், காலை, 9:45 மணிக்கு துவங்கி மாலை, 4:00 மணி வரை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட பெரும்பாலான ஆசிய நாடுகளில், பங்கு வர்த்தகம், முன்கூட்டியே துவங்கி விடுவதால், அதற்கேற்ப வர்த்தகத்தை முன்னதாகவே துவக்க வேண்டும் என, இந்திய பங்குச் சந்தைகள், 'செபி' யிடம் கோரின. இதன் மூலம், முதலீட்டாளர்கள் இதர ஆசிய நாடுகளை போல, இந்திய பங்குச் சந்தைகளிலும், ஒரே சமயத்தில் வர்த்தகம் மேற்கொள்ளலாம் ; வர்த்தக ஏற்ற, இறக்க பாதிப்பை சமாளிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்று, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி', பங்கு வர்த்தக நேரத்தை மாற்ற அனுமதி அளித்தது. அதன்படி, இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தகம், 2010, ஜனவரி 4 முதல், காலை, 9:00 மணிக்கு துவங்கி மாலை, 3:30 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெரும்பாலான ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் போக்கிற்கு ஏற்ப, முதலீட்டு முடிவுகளை எடுக்கவும், சந்தையின் வர்த்தகத்தை அதிகரிக்கவும், பங்கு வர்த்தக நேரத்தை மாலை, 5:00 மணி அல்லது இரவு, 7:30 மணி வரை நீட்டிப்பது குறித்து, இந்திய பங்குச் சந்தைகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
இது குறித்து, பங்குத் தரகர் ஒருவர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், பங்கு வர்த்தக நேரத்தை நீட்டிப்பது குறித்து பேச்சு எழுந்தது. அப்போது பங்குத் தரகு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது மீண்டும், இத்திட்டத்தை அமல்படுத்த பங்குச் சந்தைகள் துடிக்கின்றன. இத்திட்டம் அமலானால், பங்கு தரகு நிறுவன பணியாளர்கள், 10 மணி நேரம், இரு 'ஷிப்ட்'களில் வேலை செய்ய நேரும். மேலும், முதலீட்டாளர்களின் 'ஆர்டர்'களை செயல்படுத்த, காலை, மாலை என, குறைந்தபட்சம் இரண்டு ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.
காலையில், பங்குகளை ஒரு ஆலோசகரிடம் வாங்கச் சொல்லும் முதலீட்டாளர், மாலையில் அப்பங்கின் நிலவரத்தை அறிந்து, முடிவெடுக்க, இந்த பரிவர்த்தனை குறித்து சிறிதும் அறியாத, வேறொரு ஆலோசகரை அணுக வேண்டும். இதனால், முதலீட்டாளருக்கு சரியான ஆலோசனை வழங்க முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், 'நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம், இதுபோன்ற பிரச்னையே இல்லாமல், முதலீட்டாளர்களுக்கு சிறப்பான ஆலோசனை வழங்க முடியும்' என, பங்குச் சந்தைகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், 'செபி' அனுமதி அளித்தால் மட்டுமே, இத்திட்டம் சாத்தியமாகும்.
ஒரே நாளில் வாபஸ்:
மெட்ரோபாலிட்டன் பங்குச் சந்தை, ஜூலை, 7ம் தேதி முதல், பங்கு வர்த்தகம் 9:00 – 5:00 மணி வரை நடைபெறும் என, அறிவித்தது. ஆனால், பங்குத் தரகு நிறுவனங்களின் எதிர்ப்பு காரண மாக மறுநாளே, அந்த அறிக்கையை வாபஸ் பெற்றுக் கொண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|