பதிவு செய்த நாள்
07 செப்2017
00:18
புதுடில்லி : ‘‘நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, உரம், மருந்து, ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன துறைகள், முக்கிய பங்கு வகித்து வருகின்றன; இத்துறைகளின் ஒட்டுமொத்த விற்றுமுதல், 13.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது,’’ என, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர், அனந்த குமார் தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: உரம் மற்றும் மருந்து துறைகள், முறையே, 18.67 சதவீதம் மற்றும் 13.5 சதவீத வளர்ச்சியை கண்டு வருகின்றன. ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன துறையின் வளர்ச்சி, 11 – 12 சதவீதமாக உள்ளது. இந்த மூன்று துறைகளும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. இத்துறைகளின் விற்றுமுதல், 13.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது; கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை, இத்துறைகள் உருவாக்கி உள்ளன.
மூன்று ஆண்டுகளில், 1,100 மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டு உள்ளன. இதய நோயாளிகளுக்கான, ‘ஸ்டென்ட்’ கருவிகள், மூட்டு மாற்று உறுப்புகள் ஆகியவற்றின் விலை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 2,400 ‘ஆஷாதி மருந்து நிலையங்கள்’ திறக்கப்பட்டு உள்ளன.
உரத்துறையில், 100 சதவீத வேம்பு பூசிய யூரியா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு தட்டுப்பாடில்லாமல், யூரியா மற்றும் இதர ஊட்டச்சத்து உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், யூரியா உற்பத்தியை அதிகரித்து, பயிர் ஊட்டச்சத்துகள் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
உரத்துறையில், நேரடி மானிய திட்டத்தின் கீழ், முதற்கட்ட நடைமுறை அறிமுகமாகி உள்ளது. மூடப்பட்ட ஐந்து உர தொழிற்சாலைகளை திறக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|