பதிவு செய்த நாள்
07 செப்2017
00:21
புதுடில்லி : ‘ஜி.எஸ்.டி., அறிமுகத்தால் ஏற்பட்ட தாக்கம் மறைந்து, நாட்டின் பொருளாதாரம், விரைவில் மறு எழுச்சி காணும்’ என, நிதிச் சேவைகள் நிறுவனமான, ‘மார்கன் ஸ்டான்லி’ நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: கடந்த ஆண்டு, நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, தொழில் துறை உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மேற்கொண்ட முயற்சியால், பணப்புழக்கம் அதிகரித்து, இயல்பு நிலை திரும்பியது. இந்த பாதிப்பின் தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், ஜூலையில், ஜி.எஸ்.டி., அறிமுகமானது.
இதனால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல், குறிப்பாக, தயாரிப்புத் துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கம் காரணமாக, நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. இதை மட்டுமே வைத்து, முழு நிதியாண்டின் வளர்ச்சியை எடை போட முடியாது. அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளில், அடிமட்டத்தில் தேவைப்பாடு அதிகரித்து வருவது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த, சமீபத்திய புள்ளி விபரங்களுக்கு, நேர் எதிரான போக்கு உருவாகி வருவதை புரிந்து கொள்ளலாம்.
அதனடிப்படையில், மதிப்பீட்டு காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட, 2 சதவீதம் கூடுதலான வளர்ச்சியை, 2018 ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், காண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.5 சதவீதமாக உயரும் என, கணிக்கப்பட்டு உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில், முறையே, 7.6 மற்றும் 8 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., தாக்கம் காரணமாக, இந்த வளர்ச்சி, முறையே, 6.4 மற்றும் 7.4 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 6.7 சதவீதம்; வரும் நிதியாண்டில், 7.5 சதவீதமாக இருக்கும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை; ஜி.எஸ்.டி., அமலாக்கம் ஆகியவற்றின் காரணமாகவே, நாட்டின் வளர்ச்சி வேகம் மந்தமடைந்து உள்ளது. இது, ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான்.
அதே சமயம், பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை காரணிகளில் ஒன்றாக உள்ள, மக்களின் தேவைப்பாடு, குறைவின்றி பெருகி வருவது ஆறுதல் அளிக்கிறது. நாட்டின் பொருளாதாரம் சுணக்க நிலையில் இருந்து மீண்டு, மறு எழுச்சி காணும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னேற்றம்:
உற்பத்தி வளர்ச்சியில், இந்தியா, அடுத்தகட்ட நகர்வை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இது, நிலையான, நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியும்.
-‘மார்கன் ஸ்டான்லி’ ஆய்வறிக்கை
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|