பதிவு செய்த நாள்
10 செப்2017
23:51
சந்தை எப்போதெல்லாம் உச்சநிலை அடைகிறதோ, அப்போதெல்லாம், முதலீட்டாளர் நடத்தையில், மந்தை மனநிலை தெளிவாக வெளிப்படும். சந்தை தாழ்நிலை அடையும் போதும், முதலீட்டாளர்களின் மந்தை மனநிலை தெளிவாக தெரியும்.
பிறர் என்ன செய்தாலும், அதை அப்படியே நாமும் செய்தாலே, முதலீட்டில் எளிதில் வெற்றிகரமான முடிவுகளை எடுக்க முடியும் என்பதே, இந்த மன நிலை உருவாக முக்கிய காரணம். எங்கே, நாம் பிறர் போல முடிவு எடுக்க தவறினால், அவர்கள், நம்மை புறந்தள்ளி வெற்றி அடைந்து விடுவரோ என்ற அச்சம் தான், இந்த மனநிலை உருவாக முக்கிய காரணம்.அனைவரும், ஒரே அடிப்படையில் முதலீட்டு முடிவுகள் எடுத்தால், எல்லாருமே வெற்றி அடையலாம் என்ற நம்பிக்கையும், இதில் அடக்கம். இத்தனை பேர், ஒரே மாதிரி சிந்திக்கும் போது, அந்த சிந்தனை தவறாக அமைய வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையும், இந்த மன நிலை உருவாக முக்கிய காரணம்.
நிதி சார்ந்த நடத்தை பற்றி, உலகெங்கும் பல ஆய்வுகளை செய்து, மந்தை மன நிலை குறித்து, பல அறிஞர்கள் விரிவாக எழுதி இருக்கின்றனர். இந்த துறை சார்ந்த அறிஞர் பலரும், இந்த தலைப்பில் ஆளுமை உள்ளவர்களாக இருக்கின்றனர். முதலீட்டில் லாபம் அடைவதை ஒரு கலையாகவும், நடத்தை சார்ந்த நகர்வாகவும், இவர்கள் ஒருங்கிணைந்து பார்க்கின்றனர். இதன் வடிவம் தான், மதிப்புசார் முதலீடு.
ஆங்கிலத்தில், ‘வேல்யூ இன்வெஸ்டிங்’ எனப்படும், இந்த அணுகுமுறை, நம் நாட்டிலும், ஒரு சிறு வட்டத்திற்குள் சிறந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, இன்று, பரஸ்பர நிதிகளிலும் அதிகம் கடைப்பிடிக்கப்படுகின்றன. உலகளவில், இத்துறையில் பெருமதிப்பை சம்பாதித்தவரில், ஹவர்ட் மார்க்ஸ் மிக முக்கியமானவர். அவர், இந்தாண்டு, இந்தியாவில் நெடும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல ஆய்வுகள் செய்து, பல சிறந்த உரைகளையும் நிகழ்த்தினார். இந்த உரைகளில், இந்திய சந்தை பற்றியும், இங்குள்ள பங்கு மதிப்பு பற்றியும் பேசினார். தன் சிந்தனைகளை, தொடர்ந்து, மடல் மூலம் எழுதி வருகிறார். ‘சந்தையின் போக்கை, முன்கூட்டியே கணிக்க முடியாது. ஆனால், நாம் அதன் மாற்றங்களுக்கு, நம்மை தயார்படுத்திக் கொள்ள முடியும்’ என, தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.
ஆகவே, சந்தை வீழுமா என்ற யூகங்களை விட்டுவிட்டு, ஒருவேளை வீழ்ந்தால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு, நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தினார். அதிக மதிப்பு கொடுத்து வாங்கும் மிகச் சிறந்த பங்குகளை விட, மதிப்பிற்கு ஏற்ற, கூர்ந்த ஆய்வு மூலம் நமக்கு சாதகமாக தோன்றும் சிறந்த பங்குகளை வாங்கினால், அதிக லாபம் பெறலாம். அதே நேரம், அந்த முடிவுகள் சந்தை சரிந்தாலும், நம்மை காலப் போக்கில் அதிகம் பாதிக்காது என்பதும், அவர் கருத்து.இந்த கருத்து, மிக சரி என்றாலும், அத்தகைய பங்குகளை அடையாளம் காண்பது, மிக கடினம். இன்று சிறந்து விளங்காத எந்த நிறுவனங்கள், நாளை சிறக்கக் கூடும் என்ற கணிப்பை, சரியாக செய்ய வேண்டும். இதுவே, மார்க்ஸ், நமக்கு அறிவுறுத்தும் முதலீட்டு அறிவுரை. இதை, சரியாக கடைப்பிடிக்க தேவையான ஆய்வுத்திறன், முதிர்வு மற்றும் பொறுமை அவசியம்.
பல நிறுவனங்களின், நாளைய நிதிநிலையை சரியாக கணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இது, முதிர்ந்த அனுபவம் பெற்ற முதலீட்டாளர்களுக்கும், பெரும் சவாலாகவே இருக்கிறது. சந்தையில், அதிக அனுபவமின்றி பங்கு பெறுவோருக்கு, இது எளிதல்ல. இருப்பினும், முதலீடு செய்யும் போது, இதை மனதில் கொள்வது, உங்கள் நிதி வளர்ச்சிக்கு நல்லது.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|