பதிவு செய்த நாள்
10 செப்2017
23:54
ரிசர்வ் வங்கி கவர்னராக, உர்ஜித் படேல் பொறுப்பேற்று, செப்., 4ம் தேதியோடு, ஓராண்டு நிறைவு பெற்றது. இந்த கால கட்டத்தில், அவரது முயற்சிகளும், பங்களிப்புகளும் எப்படி இருந்தன? இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன?
ரிசர்வ் வங்கியின், 24வது கவர்னராக, உர்ஜித் படேல், கடந்தாண்டு பொறுப்பேற்ற போது, இவர், மத்திய அரசுக்கு ரொம்பவும் இணக்கமாக இருப்பார் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இவருக்கு முன், கவர்னராக இருந்த ரகுராம்ராஜன், மத்திய அரசோடு முரண்பட்ட போக்கை கொண்டிருந்ததாக பேச்சு. தன் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே, ராஜன் பதவி விலகினார். அதனால், படேல் பதவிஏற்ற போது, ஆர்.பி.ஐ.,யின் சுதந்திரத்தை, மத்திய அரசிடம் அடகு வைத்து விடுவாரோ என்ற அச்சமும் எழுப்பப்பட்டது.
வட்டி விகிதங்களில் மாற்றம் :
ஓராண்டு கழித்து, இன்று திரும்பிப் பார்க்கும் போது, படேல், ஆர்.பி.ஐ.,யின் சுதந்திரம் மட்டுமல்ல, தன் சுதந்திரத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை என்பது புரிகிறது. முக்கியமாக, வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்ற எண்ணப்போக்கு, நிதித் துறையிடம் இருந்தது. அதன் மூலம், வங்கிகளில் கிடைக்கும் கடன் தொகை அதிகரிக்கும்; தொழில் அதிகரிக்கும்; வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்பது, நிதித் துறை கணிப்பு.இதற்கு, ஆர்.பி.ஐ., நிதிக் கொள்கைக் குழுவினருடன் பேச்சு நடத்த, மத்திய நிதித் துறை அழைப்பு விடுத்த போது, அதை நாசூக்காக மறுத்தவர் படேல்.
ஒருபடி மேலே போய், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது மட்டுமே, முதல் கடமை என்ற நோக்கோடு செயல்பட்டார், படேல். ஒரு கட்டத்தில், அரசின் பொருளாதார ஆலோசகரான, அரவிந்த் சுப்ரமணியம், இறங்குமுகமாக இருக்கும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, வட்டி விகிதங்களில் மாற்றம் கொண்டு வரலாமே என, கேட்டே விட்டார். அதன்பின், போதுமான ஆலோசனைகள் மேற்கொண்டு, ‘ரெப்போ’ விகிதங்களில் மாற்றம் செய்தார். யாருடைய அழுத்தத்துக்கும் இடம் கொடுக்காதவராக, படேல் இருப்பது கண்கூடு.
அவரது ஒப்புதல் பெறப்பட்டதா, முழுமையான ஆதரவு பெறப்பட்டதா என, இன்னும் தெளிவு இல்லாத இடம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை. கவர்னராக பொறுப்பேற்று, இரண்டே மாதங்களில் நடைபெற்ற அதிரடி அது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டத்தின் அறிக்கை, இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அதன்பின், இரு விஷயங்களை மிகத் தெளிவாகச் செய்தார், உர்ஜித் படேல்.
சகஜ நிலை:
ஊடகங்களில் தலைகாட்டவில்லை. எல்லா கேள்விகளுக்கும், சக்திகாந்த தாஸை பதில் சொல்ல வைத்தார். கவர்னர் பேச வேண்டாமா, விளக்கம் தர வேண்டாமா என, ஊடகங்கள் பதறிய போது, அவர் காத்த அமைதி அலாதியானது. ஒரே ஒருவர் பேசினால் போதும்; எல்லாரும் பேசினால், குட்டையைக் குழப்புவது போல் ஆகிவிடலாம் என்பதே, அவரது மறைமுக பதிலாக இருந்தது. ஆனால், இரண்டாவது விஷயம் முக்கியமானது.புதிய, 500 – 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதையும், வங்கிகள் மூலம் வினியோகிப்பதையும் துரிதப்படுத்தியது மெச்சத்தக்கது. இவற்றை செய்ய, எட்டு மாதங்கள் ஆகும், 12 மாதங்கள் ஆகும் என, கணிக்கப்பட்ட நிலையில், 2017 ஜனவரி இறுதிக்குள், ஓரளவுக்கு சகஜ நிலை திரும்பியது யாரும் எதிர்பாராதது. அதை நடத்திக்காட்டிய பெருமை, படேலையே சேரும்.
எச்சரிக்கை:
வாராக்கடன்கள் மீது, படேல் தொடுத்திருக்கும் போர், பல விமர்சனங்களை எழுப்பி உள்ளது உண்மை. எந்த நிறுவனங்கள், எவ்வளவு நிலுவைத் தொகை வைத்துள்ளது என்பதை கணக்கிடும் பணி, படேல் கவர்னராவதற்கு முன் முடிந்துவிட்டது. ஆனால், என்ன நடவடிக்கை எடுப்பது; எப்படி எடுப்பது; எடுக்கத்தான் வேண்டுமா என்றெல்லாம் கேள்விகளும், அச்சமும் நிரம்பியிருந்தன.உர்ஜித் படேல், அதை எடுத்தார். அவருக்குத் தோதாக, அரசும், புதிய திவால் சட்டத்திருத்தத்தைச் செய்து கொடுத்தது. வங்கிகளுக்கு கடனைத் திருப்பிச் செலுத்தாத, 12 நிறுவனங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் முயற்சி துவங்கியது.
அடுத்த, 26 நிறுவனங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. வாராக்கடன்களை, வங்கிகள் தலைமுழுகிவிடும் என்ற எண்ணம் துடைத்தெறியப்பட்டது.துரத்தித் துரத்தி கொடுத்த பணத்தின், ஒரு பகுதியையேனும் மீட்டுவிட வேண்டும் என்ற படேலின் முனைப்பு பாராட்டத்தக்கது. அது, மக்கள் பணம்; தாம், அதை நிர்வாகம் மட்டுமே செய்கிறோம்; பெரிய நிறுவனங்களிடம் ஏமாந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு, வரவேற்கத்தக்கது.
வங்கி துறைக்குள், படேல் மேற்கொண்ட இன்னொரு முயற்சி கவனிக்கத்தக்கது. பல பொதுத் துறை வங்கிகள், தங்கள் வாராக்கடன் தொகையை முழுமையாகக் காட்டாமல் தவிர்த்தன. அவற்றை முழுமையாக காண்பிக்கச் சொன்னதுடன், அதனால் ஏற்படக்கூடிய இழப்புகளுக்கு, போதிய நிதியை ஒதுக்கி வைக்கவும் அறிவுறுத்தினார். இத்தகைய சூழலில், அரசுக்கு, ஆர்.பி.ஐ., ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் ஈவுத் தொகையை, இம்முறை பாதியாக குறைத்து, 30,659 கோடி ரூபாய் மட்டுமே வழங்கினார். வங்கிகளின் கஷ்டத்தை புரிந்து கொண்ட செயலாகவே, இது பார்க்கப்படுகிறது.
திறமை:
அதிகம் பேசாதவர், படேல். ஓராண்டில், ஆறு முறை மட்டுமே வாய் திறந்துள்ளார். பல மாநிலங்கள் கடன் தள்ளுபடி செய்ய முனைந்த போது, அதனால் ஏற்படக்கூடிய நிதிச் சிக்கலை, பளிச்சென்று எடுத்துச் சொன்னது, ஆட்சியாளர்களுக்கு கசக்கலாம். ஆனால், நியாயத்தை பேசுவதில் தயக்கம் இல்லாதவர். அதே போல், சிறிய வங்கிகளை, பெரிய வங்கிகளோடு இணைப்பதை முன்மொழிந்து வருகிறார். இவர் பெயர், தலைப்புச்செய்திகளில் அடிபடவில்லை என்றாலும், இவரது பணிகள் அனைத்தும், தலைப்புச் செய்திகளாக மாறுகின்றன. அலட்டல் இல்லாமல், அடக்கமாக, அதே சமயம், விழிப்புடன் செயல்படுவதும் ஒரு திறமை தான். அது, உர்ஜித் படேலுக்கு கைவந்திருக்கிறது.
-ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|