பதிவு செய்த நாள்
19 செப்2017
05:12
புதுடில்லி : நாட்டில் முதன்முறையாக நடைபெற உள்ள, ‘பிபா – யு 17’ உலக கால்பந்து போட்டியையொட்டி, இறக்குமதியாகும் விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்டவற்றுக்கு, முழு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
அக்., 6 – 28 வரை, நாட்டில், 17 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும், ‘பிபா – யு 17’ உலக கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி, இப்போட்டி தொடர்பாக இறக்குமதியாகும் விளையாட்டு சாதனங்கள், பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கு, நிபந்தனையுடன் கூடிய முழு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இது குறித்து, மத்திய கலால் மற்றும் சுங்க வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து விளையாட்டு சாதனங்கள், உடற்பயிற்சி கருவிகள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு, நிபந்தனையின் அடிப்படையில், முழு வரி விலக்கு அளிக்கப்படும். விளையாட்டு ஒளிபரப்பு தொடர்பான சாதனங்கள், கால்பந்து அணிகளின் சீருடைகள், ஆடைகள், உபகரணங்கள், பயன்பாட்டு பொருட்கள், சத்து பானங்கள், உணவு வகைகள் ஆகியவற்றுக்கும், வரி விலக்கு கிடைக்கும்.
வரி விலக்கு சலுகை பெறுவோர், அன்பளிப்பு பொருட்கள், நினைவு சின்னங்கள், கேடயங்கள் ஆகியவை நீங்கலாக, இறக்குமதியான பொருட்களை, போட்டி முடிந்த, மூன்று மாதங்களுக்குள் மறு ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்த உத்தரவாதத்துடன், தேவையானவற்றை, வரியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம்.
‘பிபா – யு 17’ போட்டியை நடத்தும் அமைப்புகள், ஒருங்கிணைப்பு நிறுவனங்கள், ‘டிவி’ ஒளிபரப்பு நிறுவனங்கள் ஆகியவை, வரி விலக்கு சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து சாதனங்களுக்கும், ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி.,யில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மொத்த பட்ஜெட்:
‘பிபா – யு 17’ போட்டியின் மொத்த பட்ஜெட், 76 கோடி ரூபாய். இதுதவிர, மத்திய அரசு, 120 கோடி ரூபாய் செலவிடுகிறது. இதில், 95 கோடி ரூபாய், கால்பந்து போட்டிக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
எந்தெந்த சாதனங்கள்?
விளையாட்டு சாதனங்கள், உடற்பயிற்சி கருவிகள், ஊக்க மருந்து கண்டுபிடிப்பு சாதனங்கள், முதலுதவி பெட்டிகள், சேட்டிலைட் போன்கள், வீடியோ, பிளாஸ்மா திரைகள், மின்னணு ஸ்கோர்போர்டு, ஸ்டாப் வாட்ச், புரொஜக்டர், பிரின்டர், கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், ரூட்டர் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் மற்றும் பொருட்களுக்கு, சுங்கம் மற்றும் ஐ.ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
முதல் போட்டி:
கொச்சியில், ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில், அக்., 6ல், முதல் கால்பந்து போட்டி துவங்குகிறது. இறுதி போட்டி, அக்., 28ல், கோல்கட்டாவின், சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்தியா உட்பட, 24 நாடுகள், ‘பிபா – யு 17’ இப்போட்டியில் பங்கேற்க உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|