பதிவு செய்த நாள்
02 அக்2017
01:07
சந்தை, தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், பலர் அடுத்து என்ன செய்வது என, தெரியாமல் தவிப்பது தெரிகிறது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் மனதில், சந்தை சார்ந்த நம்பிக்கை, திடீர் சரிவை கண்டிருக்கிறது.
இது, பலரும் எதிர்பாராத நேரத்தில் நடந்தேறி உள்ளது. சந்தையின் போக்கில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் காட்டிய அபரிமிதமான நம்பிக்கை, ஏன் திடீரென ஒரே வாரத்தில் தலைகீழாக மாறியது என்ற திகைப்பில் பலரும் ஆழ்ந்துள்ளனர். இதற்கான அடிப்படைக் காரணத்தை புரிந்து கொள்வது அவசியம். சந்தையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை வளர்வதும், வீழ்வதும் தொடர் நிகழ்வுகள். ஒவ்வொரு காளைச் சந்தையும், இந்த இரு நிலைகளை காணாமல் இல்லை. ஆனால், அடிப்படையில், இந்திய முதலீட்டாளர்கள் தங்கள் நம்பிக்கையை ஆழமாக கற்றுக் கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.
பீதியில் முடிவு:
அடிப்படையில், ஒரு முதலீட்டின் மேல் ஒருவர் கொள்ளும் நம்பிக்கை, அந்த முதலீட்டின் அடிப்படை தன்மை சார்ந்தும், அதன் வருங்கால வளர்ச்சி மற்றும்எதிர்பார்ப்பு சார்ந்தும் அமைய வேண்டும்.எப்போதுமே, நாம் ஒரு முதலீட்டின் மீது அளவிடும் எதிர்பார்ப்புகள் அடிப்படையில் யதார்த்தமாகவும், நிறைவேறும் தன்மை கொண்டும் இருக்க வேண்டும். நாம் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களின் மதிப்பீடு, இந்த இரண்டு அடிப்படைகள் சார்ந்து அமைய வேண்டும்.
அப்படி இருந்தால், நாம் வாங்கும் எந்த பங்கிற்கும், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதிருக்காது. அடிப்படையில், நாம் பங்குகளை வாங்கும் முறை, மதிப்பீடு சார்ந்து மட்டுமே இருக்கும். பங்குகளை வாங்குவதற்கு நாம் கையாளும் வழிமுறை கட்டுக்கோப்பாகவும், சீராகவும் அமையும்.ஆனால், காளைச் சந்தையில், பெரும்பாலானோர் இந்த கட்டுக்கோப்பை துாக்கி எறிகின்றனர். அவசரம் அவர்களை சிறை பிடித்து நகர்த்த துவங்குகிறது. இரண்டு விதமான தவறுகளை அவர்கள் செய்கின்றனர்.
ஒன்று, மதிப்பீட்டை புறந்தள்ளி, முதலீட்டு முடிவுகளை எடுப்பது. இன்னொன்று, எங்கே முடிவு எடுக்க தாமதித்தால், முதலீடு செய்யும் வாய்ப்பே நழுவி விடுமோ என்ற பீதியில் முடிவெடுப்பது.
மதிப்புசார் ஆய்வு:
இந்த இரண்டு தவறுகளையும், நம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் சில மாதங்களாக தொடர்ந்து செய்து வந்தனர். சந்தையில், பங்குகளை வாங்குவோர் மிக அதிகமாகவும், விற்போர் மிக குறைவாகவும் இருக்க, சந்தை அபரிமிதமான வளர்ச்சி கண்டது. இது, சந்தையில் பங்கு வாங்குவோர் மத்தியில், வாங்கும் பீதியை ஏற்படுத்தியது. பங்குகள் மேலும் மதிப்பு கூடின.ஒரு காலகட்டத்தில், பல பங்குகளின் மதிப்பு அவற்றின் எதிர்கால லாபத்தை விட பன்மடங்கு கூடி விற்றன.ஆனாலும், பங்கு வாங்குவோர்,மதிப்பீட்டை பற்றிய எந்த கவலையும் இன்றி வாங்கிக் குவித்தனர்.
இப்படி வாங்கிக் குவிப்பதில் காட்டிய அவசரம் தான், இன்றைய பீதிக்கு மூலக் காரணம்.பொருளாதாரம் சார்ந்து எழுந்த சமீப கால கவலையும், ஐயமும், முதலீட்டாளர்கள் காட்டிய நம்பிக்கையை, ஒரே வாரத்தில் நிலைகுலையச் செய்துவிட்டன. பங்குகளின் மீது நம்பிக்கை வளர்ப்பது ஒரு கலை. அதை நிதானம் கொண்டு வளர்ப்பவர்கள் நம்பிக்கையை எளிதில் இழப்பதில்லை. நம்பிக்கையை நாம் உருவாக்கும் விதமும், அதை வளர்க்கும் செயல்முறையும், அதன் நிலைகுலையாமையையும், ஆயுளையும் நிர்ணையிக்கும்.
இதைக் கற்றுக்கொள்ள சந்தை மந்தமாக இருக்கும் நேரங்கள் பெரிதும் உதவுகின்றன. சந்தை காணக் கூடிய தொய்வு நிலையை, ஒவ்வொரு முதலீட்டாளரும் தங்கள் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். கையிருப்பு முதலீடுகளை, மதிப்புசார் ஆய்வு செய்து கொண்டு, அவற்றில் தவறான தேர்வுகளை களைய வேண்டும்.புதிய முதலீடுகளை மதிப்பு சார்ந்து கவனமாகத் தேர்வு செய்து, வருங்கால பொருளாதார வளர்ச்சியில் நாமும் பங்கேற்று பயன் அடையலாம்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|