பதிவு செய்த நாள்
05 அக்2017
23:54
புதுடில்லி : புதிய, ‘ஆர்டர்’கள் அதிகரித்ததால், நாட்டின் சேவைகள் துறை, மூன்று மாதங்களில் இல்லாத வகையில், செப்டம்பரில் முதன் முறையாக, வளர்ச்சி கண்டிருப்பது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
‘நிக்கி இந்தியா’ நிறுவனம், செப்டம்பரில், இந்திய சேவைகள் துறை குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: ஜி.எஸ்.டி., அறிமுகம் காரணமாக, நாட்டின் சேவைகள் துறையின் வளர்ச்சி, சுணக்கம் கண்டிருந்தது. இந்நிலையில், செப்டம்பரில், சேவைகள் துறையில், அதிகளவில், புதிய ஆர்டர்கள் குவிந்தன. இதனால், வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
பொருளாதார சூழல்:
இந்த புள்ளி விபரங்களின் அடிப்படையில், செப்டம்பரில், சேவைகள் துறைக்கான, ‘நிக்கி இந்தியா சேவைகள், பி.எம்.ஐ.பி.ஏ., குறியீடு’ 50.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது; இது, ஆகஸ்டில், 47.5 புள்ளிகளாக, பின்னடைவை கண்டிருந்தது.செப்டம்பரில், சேவைகளுக்கான தேவை அதிகரித்து உள்ளதுடன், சேவை நிறுவனங்களின் விளம்பர பிரசாரங்களும், வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளன.
ஜூலையில், ஜி.எஸ்.டி., அறிமுகமானதும், சேவைகள் துறை வளர்ச்சியில், சுணக்கம் ஏற்பட்டது. இத்தகைய இடர்ப்பாடுகளை கடந்து, சேவைகள் துறை வளர்ச்சியை நோக்கி நகர்ந்திருப்பது, தெரிய வந்துள்ளது.இதே போல, தயாரிப்புத் துறையும், மந்த நிலையில் இருந்து விடுபட்டு, வளர்ச்சி பாதைக்கு திரும்பி உள்ளது.
நாட்டின் பொருளாதார சூழல் மேம்பட்டு வருவதால், வேலைவாய்ப்பு அதிகரித்து உள்ளது. தேவை அதிகரிப்பு காரணமாக, சேவைகள் துறையில், வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம், ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, செப்டம்பரில் உயர்ந்துள்ளது. இதற்கு முன், 2011 மத்தியில், போக்குவரத்து, கிடங்கு மற்றும் நுகர்வோர் சேவைகளின் துணை பிரிவுகளில், வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் அதிகமாக காணப்பட்டது.
நம்பிக்கை:
அடுத்த ஓராண்டு வரை, சேவைகள் துறையின் வளர்ச்சி நன்கு இருக்கும் என, இத்துறையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். எனினும், ஜூலை – செப்., வரையிலான, காலாண்டு வளர்ச்சி குறித்த நம்பிக்கை, குறைவாகவே உள்ளது.
செப்டம்பரில், தயாரிப்புத் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘நிக்கி இந்தியா, எம்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 51.2 புள்ளிகளாக உள்ளது. முந்தைய, ஆக., மாதத்திலும், இதே அளவிலான வளர்ச்சி காணப்பட்டது. ஆக, ஜி.எஸ்.டி.,க்கு பின், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறைகள் எழுச்சி கண்டிருப்பது, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காண துவங்கி உள்ளதற்கான அறிகுறி என, கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஆரோக்கியமான அறிகுறி:
ஜூலையில், ஜி.எஸ்.டி., அறிமுகமானது முதல், இந்திய தனியார் துறையின் வளர்ச்சி சரிந்து காணப்பட்டது. இந்த நிலை, செப்டம்பரில் மாறி உள்ளது. தயாரிப்பு மற்றும் சேவைகள் துறைகள், பின்னடைவில் இருந்து வளர்ச்சி பாதைக்கு திரும்பி உள்ளது, ஆரோக்கியமான அறிகுறியாகும்.
-ஆஷ்னா தோதியாபொருளாதார வல்லுனர், ஐ.எஸ்.எஸ்., மார்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|