பதிவு செய்த நாள்
09 அக்2017
00:04
ஜி.எஸ்.டி., வரியை அமலுக்கு கொண்டு வருவதில் ஏற்பட்ட குழப்பங்கள், ஐயங்கள் மற்றும் அதிருப்தியை, அரசு முன்னெடுத்து, அதில் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.
வரிகள் விதிப்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால், அவற்றை அமலுக்கு கொண்டு வருவதிலும், மக்கள் மத்தியில் அவை ஏற்புடையதாக வரவேற்பை பெறுவதிலும் அரசின் ஆளுமை தெளிவாக புரியும். அத்தகைய ஆளுமை, ஏனோ இந்திய அரசிடம் முதலில் தெரிவதில்லை.
வரி வசூலிப்பு:
தவறுகளை தொடர்ந்து செய்து, மக்கள் தரும் பின்னுாட்டம் சார்ந்தே மாற்றங்கள் அமைகின்றன. அதிகார வர்க்கம், தொடர்ந்து தன் முடிவுகளை திரும்ப பெறுவது என்பது, மக்கள் மத்தியில் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதை அரசின் பலவீனமாக மக்கள் கருதுவர் என, ஜி.எஸ்.டி., வரியின் எதிர்ப்பாளர்கள் பிரசாரம் செய்தாலும், பங்குச் சந்தையின் பார்வை மாறுபடும் என்றே தோன்றுகிறது.
பங்குச் சந்தை ஜி.எஸ்.டி.,சார்ந்து எடுக்கும் கண்ணோட்டமானது, திட்டம் சுமுகமாக அமலுக்கு வருவதிலும், வரிகள் சீராக வசூலிக்கப்படுவதிலும் மட்டுமே உள்ளது. திட்டத்தில் கொண்டு வரப்படும் மாற்றங்களை, பங்குச்சந்தை அதிகம் கண்டுகொள்ளாது. மாற்றங்கள் மக்களால் வரவேற்கப்பட்டாலே சந்தையின் நம்பிக்கை கூடும் என்றே தோன்றுகிறது.
வரி செலுத்துவோரில் 90 சதவீதம், மூன்று மாதத்திற்கு ஒருமுறை, தங்கள் வரி கணக்குகளை தாக்கல் செய்தால் போதும் என்ற அறிவிப்பு, ஜி.எஸ்.டி.என்., என்ற மேலாண்மை நிறுவனம் சார்ந்த சிக்கல்களை தற்போதைக்கு புறம்தள்ளி, அது சீராக இயங்க வசதி செய்கிறது.
சரிவை தவிர்க்கலாம்:
அடிப்படையில் வரியின் நுகர்வோரான, வரி செலுத்துவோர் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி பெரிதும் அடங்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், அரசுக்கு நிதிஇழப்பும் அதிகமில்லை. ஆகவே, ஜி.எஸ்.டி., நாளடைவில் சுமுகமாக அமலுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவே சந்தை கருதும். இந்திய சந்தையில் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்யும், எப்.ஐ.ஐ., முதலீட்டாளர்கள் தங்கள் நிலையை தொடர்வர் என்றே தோன்றுகிறது. அவர்கள் விற்கும் பங்குகளை தொடர்ந்து யாராவது வாங்கினால் தான் சந்தை சரிவை தவிர்க்க முடியும்.
அடிப்படையில், இப்போது நடக்கும் சந்தையின் அடுத்தகட்ட நகர்விற்கு சில்லரை முதலீடே காரணம் என்பது உறுதியாக தெரிகிறது. பரஸ்பர நிதி நிறுவனங்கள், இந்திய பங்குகளை வாங்கிக் குவிப்பது தான் இன்று சந்தை சரிவடையாமல் இருக்க முக்கிய காரணம்.
வரவேற்பு:
ஆனால், இந்த நிலைமை ஆரோக்கியமானது அல்ல. சில்லரை முதலீடு பணத்தைக் குவித்தாலும், அதை பொறுப்போடு நகர்த்தும் கடமை பரஸ்பர நிதியை மேலாண்மை செய்வோருக்கும் உண்டு. அவர்களின் வெற்றி – தோல்விகள் சந்தையை பெரிதும் பாதிக்கும். இதற்கிடையில், பலநிறுவனங்கள், சந்தையின் உயர் மதிப்பீடுகளை சாதகமாக்கி, புதிய பங்குகளை விற்று தங்கள் வருங்கால தேவைக்கு பணத்தை குவிக்க துவங்கி உள்ளனர். மக்கள் மத்தியில் இத்தைகைய விற்பனை பெரும் வரவேற்பு பெற்றிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
நிறுவனங்களின் மதிப்பை பற்றி அதிகம் கவலைப்படாமல், விற்பனை அதிகரித்துச் செல்லும் போக்கு ஆரோக்கியமானதல்ல. பங்குகளை வாங்கிக் குவிக்கும் மேலாளர்கள் இதுபற்றி அதிகம் யோசிப்பது கூட இல்லை. புதிய பங்கு பரிவர்த்தனை உச்சத்தில் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு விடை இதில் கிடைக்கிறது.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|