பதிவு செய்த நாள்
14 அக்2017
03:59
வாஷிங்டன் : ‘‘பல்வேறு திட்டங்களுக்கு, ‘ஆதார்’ விபரங்களை கட்டாயமாக்கி, முறைகேடுகளை தடுத்த காரணத்தால், மத்திய அரசுக்கு, 900 கோடி டாலர் மிச்சமாகி உள்ளது,’’என, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின், செயல்சாரா தலைவர், நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.
அவர், வாஷிங்டனில், மின்னணு பொருளாதாரம் குறித்த, உலக வங்கியின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: முந்தைய, ஐ.மு., கூட்டணி அரசால், ஆதார் திட்டம் துவக்கப்பட்டது. அடுத்து, 2014ல், பிரதமர் மோடி தலைமையில் அமைந்த மத்திய அரசு, ஆதார் திட்டத்தை தொடர்வதற்கு, ஆர்வமுடன் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகள் மூலம், தற்போது, 100 கோடிக்கும் அதிகமானோருக்கு, ஆதார் கிடைத்துள்ளது.
அரசின் பல்வேறு திட்டங்களுக்கு, ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டதால், போலி பயனாளிகளை சுலபமாக கண்டறிந்து நீக்கவும், நிதி முறைகேடுகளை தடுக்கவும் முடிந்தது. இந்த வகையில், ஆதார் மூலம், மத்திய அரசுக்கு, 900 கோடி டாலர், அதாவது, 58,500 கோடி ரூபாய் மானியம் மிச்சமாகி உள்ளது. வங்கிக் கணக்கில், 50 கோடி பேர், ஆதார் விபரங்களை இணைத்துள்ளனர். மேலும், 1,200 கோடி டாலர் அளவுக்கு, அரசு மானியம், பயனாளிகளின் வங்கிக் கணக்கில், நேரடியாக வரவு வைக்கப்பட்டு உள்ளது.
இது, உலகளவில், மின்னணு தொழில்நுட்பம் வாயிலாக நடைபெற்ற, மிகப்பெரிய ரொக்கப் பரிமாற்றம் ஆகும். சரியான மின்னணு கட்டமைப்பு வசதியை உருவாக்கினால், மிக விரைவான வளர்ச்சி காணலாம் என்பது, நிரூபிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|