பதிவு செய்த நாள்
14 அக்2017
04:00
வாஷிங்டன் : ‘‘இந்தியா – அமெரிக்கா இடையிலான, பரஸ்பர வர்த்தகத்தை, 50 ஆயிரம் கோடி டாலராக உயர்த்தும் இலக்கு, வெகு தொலைவில் இல்லை,’’ என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க தலைநகர், வாஷிங்டனில் உள்ள, பன்னாட்டு நிதியத்தின் தலைமை அலுவலகத்தில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில், அருண் ஜெட்லி பேசியதாவது: சில ஆண்டுகளாக, இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகம், மிகவும் வலுவடைந்து வருகிறது. குறிப்பாக, பாதுகாப்பு மற்றும் விமான துறைகளில் மட்டும், எண்ணற்ற வர்த்தக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதனால், இரு நாடுகளின் பரஸ்பர வர்த்தகத்தை, 50 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை எட்ட, நீண்ட காலம் தேவைப்படாது.
இரு நாடுகளின் பரஸ்பர வர்த்தகம், 2016ல், 6,770 கோடி டாலராக இருந்தது. அமெரிக்கா உடனான, இந்தியாவின் உபரி வர்த்தக மதிப்பு, 2,400 கோடி டாலராக உள்ளது. அது போல, அமெரிக்கா, அதிகளவில் வர்த்தகம் புரியும் நாடுகளில், இந்தியா, 9வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. தற்போது, இந்திய நிறுவனங்கள், அமெரிக்காவில் அதிகம் முதலீடு செய்ய துவங்கி உள்ளன. இதன் மூலம், மிகச் சிறந்த வர்த்தக வாய்ப்பை, இந்திய நிறுவனங்கள் பெறும். அடுத்த, 10 ஆண்டுகளில், இந்திய விமான போக்குவரத்து துறை, மிகப்பெரிய விரிவாக்கத்தை காண உள்ளது. இத்துறையில், அமெரிக்க நிறுவனங்கள், ஏற்கனவே, ஆர்வமுடன் முதலீடு செய்து வருகின்றன.
அமெரிக்க நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து, பாதுகாப்பு துறைக்கு தேவையான சாதனங்களை தயாரிக்கும் ஆலைகளை அமைக்க, முன்வர வேண்டும். இந்தியாவில், நிலம் கையகப்படுத்தல் தொடர்பான சட்டங்களில், தேவைப்படும் மாற்றங்களை செய்து கொள்ள, மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், தொழிலாளர் பிரச்னை மிகைப்படுத்தி கூறப்படுகிறது; தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம் என்பதெல்லாம், மலையேறி விட்டது. எண்ணற்ற துறைகளில், இடையூறின்றி வர்த்தகம் புரியும் சூழல் உள்ளது. உதாரணமாக, வங்கி மற்றும் விமான போக்குவரத்து துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால், வர்த்தகம் புரிவது சுலபமாகி உள்ளது.
மூன்றரை ஆண்டுகளாக, நிதி பற்றாக்குறை இலக்கு, நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே பராமரிக்கப்படுகிறது. திட்டச் செலவுகளை சீர்படுத்தி, வரி வருவாயை அதிகரிக்க, முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதே போல, வங்கிகளின் வாராக்கடன் பிரச்னையை தீர்க்கவும், முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்காக, புதிய சட்டங்கள், சட்டத்திருத்தங்கள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இது போன்ற நடவடிக்கைகளால் ஏற்படும் தாக்கம், தற்காலிகமாகவே இருக்கும். நடுத்தரம் மற்றும் நீண்ட கால அடிப்படையில், மிகச் சிறந்த பயன்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|