பதிவு செய்த நாள்
16 அக்2017
00:35
உலகின் மிக முக்கிய முதலீட்டாளரான, வாரன் பப்பெட் அறிவுரைகளில் மிக முக்கியமான ஒன்று, ’ஒரு பங்கை வாங்கும் போது, அதன் விலையைப் பார்ப்பதைக் காட்டிலும், நாம் கொடுக்கும் விலைக்கு அந்த பங்கு உரிய மதிப்பை கொண்டதா என்று பாருங்கள்’ என்பதாகும்.
’மதிப்பு’ என்று பப்பெட் சொல்வது, மக்கள் அந்த பங்கை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அல்ல. அந்த நிறுவனத்தின் சொத்துக்களின் இன்றைய மதிப்பையும், பல ஆண்டுகள் கழித்து, அந்த நிறுவனம் அடையப் போகும் நிகர லாபத்தின் இன்றைய மதிப்பீட்டையும் சார்ந்தே நம் முதலீடுகள் இருக்க வேண்டும் என்பதே அவர் அறிவுரையின் உட்பொருள்.
விதி விலக்கு:
நாம் லாபம் அடைய வேண்டுமெனில் கடைப்பிடிக்க வேண்டிய இரண்டு விதிகள் என்று அவர் சொல்வது இதுதான்:விதி எண் ஒன்று: பணத்தை இழக்காதீர்கள்.விதி எண் இரண்டு: முதல் விதியை மறக்காதீர்கள்! லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொள்ளும் பங்குச் சந்தை ஆர்வலர்களுக்கு, அதனால் பெரும் பயனுற்ற ஒரு முதலீட்டாளர் சொல்லும் அறிவுறுத்தல், ஏன் இழப்பை மையப்படுத்துகிறது என்று நாம் யோசிக்க வேண்டும்.
பங்குச் சந்தையில் ஏற்படும்இழப்பின் நிரந்தரத் தன்மையை நன்கு உணர்ந்ததால் மட்டுமே, அவர் இப்படிச்சொல்கிறார். எக்காரணம் கொண்டும் ஒரு முதலீட்டாளர் நிரந்தர இழப்படையக் கூடாது என்பதே அவர் இப்படி சொல்வதற்கு முக்கிய காரணம். ஆனால், நாம் இதை எந்த அளவு பொருட்படுத்துகிறோம்?பங்குகளை வாங்கும் பெரும்பாலானோர், அதன் விலையை மட்டுமே மையப்படுத்தி, முதலீட்டு முடிவுகளை எடுக்கின்றனர். விலை உயர, உயர ஒரு பங்கை வாங்க வரும் முதலீட்டாளர்களின் ஆர்வம் பன்மடங்கு கூடுகிறது.
ஆர்வம் கூடும் தருணங்களில் ஆய்வு குறைந்துவிடுவதும், எங்கே நாம் முடிவெடுப்பதற்குள் விலை மேலும் கூடிவிடுமோ என்ற அச்சமும், முடிவுகளை பின்னிருந்து வேகப்படுத்துகின்றன. அந்த வேகத்தை குறைப்பதை யாரும் விரும்புவதில்லை.இந்த அவசரம் ஏதோ சிறுமுதலீட்டளர்களிடம் மட்டுமே இருப்பதாக நினைக்க வேண்டாம். பெருமுதலீட்டாளர்களும், பரஸ்பர நிதி மேலாளர்களும்கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.
விலை அதிகம்:
இன்னும் சொல்லப்போனால், சந்தை மந்தைமயமாக மாறிவிடுவதற்கு முக்கிய காரணம், பங்குகளில் கிடுகிடு விலை ஏற்றம் மட்டுமே. அதிரடியாக கூடும் விலை, ஒருவித மாயை ஏற்பட காரணமாகி விடுகிறது. அத்தகைய விலை ஏற்றம், எந்த வகையிலும் அந்த நிறுவனத்தின் தர ஏற்றமாக அமையாத சூழல்கள் தான் அதிகம். இப்படி ஒரு சூழல் அமையும்போது, பல நிறுவனங்களின் பங்கு விலை அதன் உண்மை மதிப்பைவிட மிக அதிகமாக நிலவக்கூடும். அப்படி அமையும் சூழலில், அத்தகைய பங்குகளை சந்தையின் சாதாரண முதலீட்டாளர்களும், முக்கிய பெருமுதலீட்டாளர்களும் போட்டி போட்டு வாங்குவதை அடிக்கடி காணலாம்.
வரலாறு நமக்குச் சொல்லும் ஒரே பாடம், எல்லாரும் ஒன்றையே செய்வதால், அது சரி என்று ஆகிவிடாது என்பதே. அத்தருணங்களில், நாம் சந்தைக்கு எதிர்மயமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அப்படி நடக்க, பப்பெட் சொல்லும் அறிவுரைகள் பெரிதும் உதவும்.’விலை அதிகம் கொடுப்பதுஎன்பது, நம் நாளைய லாபத்தை, இன்றைக்கே இன்னொருவருக்கு தாரைவார்க்கும் செயல்’ என்பதைப்புரிந்து நடப்பதே, நமக்கு நன்மை பயப்பதாக அமையும்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|