பதிவு செய்த நாள்
30 அக்2017
01:00
வரி சேமிப்பு பலனோடு, நீண்ட கால நோக்கில் வளத்தை உருவாக்கிக் கொள்ள உதவும், இ.எல்.எஸ்.எஸ்., முதலீட்டின் முக்கிய அம்சங்களை புரிந்து கொள்வது அவசியம்.
வரி சேமிப்பு சார்ந்த முதலீடு என வரும் போது, இ.எல்.எஸ்.எஸ்., எனப்படும், ‘ஈக்விட்டில் லிங்க்டு சேவிங் ஸ்கீம்’ திட்டம் பற்றியும் அடிக்கடி குறிப்பிடப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். வரி சேமிப்பிற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக இது முன்வைக்கப்படுகிறது. வரி சேமிப்பு மூலம் சம பங்குகள் மீதான முதலீட்டை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வகை முதலீடு வருமான வரி சேமிப்புக்கு உதவுவதோடு, நீண்ட கால நோக்கில் பலன் அளிப்பதாகவும் கருதப்படுகிறது. எனினும், இந்த முதலீடு தொடர்பான அடிப்படையான அம்சங்களை அறிந்து கொள்வது அவசியம்.
அறிமுகம்:
இ.எல்.எஸ்.எஸ்., திட்டம், ‘மியூச்சுவல் பண்ட்’ திட்டங்களில் ஒரு வகையானது. இவை சம பங்குகள் மற்றும் அவை சார்ந்த நிதி சாதனங்களில் முதலீடு செய்கின்றன. பங்குச் சந்தை சார்ந்த வரி சேமிப்பு முதலீட்டு திட்டம் என, இவற்றை புரிந்து கொள்ளலாம். இவற்றில் சில நிதிகள், கடன் சார்ந்த சாதனங்களிலும் முதலீடு செய்யலாம். நீண்ட கால நோக்கில் முதலீட்டாளர்களுக்கு நல்ல பலனை அளிப்பதே இவற்றின் அடிப்படை நோக்கம். இவற்றில் செய்யப்படும் முதலீட்டிற்கு, வருமான வரிச்சட்டம், ‘80சி’ பிரிவின் கீழ் விலக்கு கோரலாம்.
இந்த திட்டத்தில் மொத்தமாகவும் முதலீடு செய்யலாம் அல்லது எஸ்.ஐ.பி., எனப்படும் முறையிலும் மாதா மாதம் முதலீடு செய்யலாம். பொதுவாக எஸ்.ஐ.பி., முறையிலான முதலீடு ஏற்றதாக கருதப்படுகிறது. சீராக முதலீடு செய்ய வழி செய்வதோடு, வரி சேமிப்பிற்காக மொத்தமாக முதலீடு செய்யும் சுமையையும் இதன் மூலம் குறைக்கலாம். 12 மாத கால அளவில் முதலீட்டாளர்கள் தங்கள் வரி சேமிப்பை முதலீட்டை பரவலாக்கிக் கொள்ளலாம்.
வரி சேமிப்பு:
இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கு, ‘80சி’ பிரிவின் கீழ் விலக்கு இருப்பதால் வரி சேமிப்பு பலனை பெறலாம். ஆனால், ஒரு நிதியாண்டில் அதிகபட்சம், 1.50 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு மட்டுமே வரி விலக்கு கோர முடியும். இந்த திட்டம், அனைத்து பிரிவுகளிலும் வரி விலக்கு அளிக்கிறது. அதாவது, இதன் மீதான பலனுக்கும் விலக்கு உண்டு; ஈவுத் தொகைக்கும் வரி விலக்கு உண்டு. பொதுவாக, இந்த திட்டத்திற்கு மூன்று ஆண்டுகள், ‘லாக் இன் பிரியட்’ உண்டு. அதற்கு முன், முதலீட்டை யூனிட்கள் வடிவில் விலக்கிக் கொள்ள முடியாது. எனினும், யூனிட்கள் மீது ஈவுத் தொகை பெறலாம்.
பி.பி.எப்., கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் வைப்பு நிதிகள் போன்ற வரி சேமிப்புக்கான முதலீடுகளை விட, இதில் லாக் இன் காலம் குறைவு. மற்றவற்றில் ஐந்து ஆண்டுகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
என்ன பலன்?
இ.எல்.எஸ்.எஸ்., திட்டங்கள் பலன் குறித்து உறுதி அளிப்பதில்லை. ஆனால், சந்தையின் போக்கிற்கு ஏற்ப இதன் பலன் அமையும். மூன்று ஆண்டு காலம், ‘லாக் இன் காலம்’ என்பதால், நீண்ட கால அளவில் சந்தையில் நீடிப்பதன் மூலம், முதலீட்டின் மீதான பலனை பெறும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கமான போக்குகளுக்கு ஏற்ப விற்பனை முடிவுகளை எடுக்காமல், குறிப்பிட்ட காலம் முதலீடு செய்திருக்க இது வழி செய்கிறது. இந்த திட்டம் மூலம், ‘மியூச்சுவல் பண்ட்’களில் செய்யும் முதலீடு, கஷ்டப்பட்டு ஈட்டிய பணத்திற்கு நல்ல பலனை பெற்றுத்தர வல்லது என கருதப்படுகிறது. முதலீட்டின் போது வரி சேமிப்பு பலனை அளிப்பதோடு, நீண்ட கால நோக்கில் வளத்திற்கும் வழி வகுக்கும்.
இவற்றில் வாங்கப்படும் யூனிட்களுக்கு ஏற்ப பலன் அமையும். நிதிகளின் செயல்பாடு மாறலாம் என்றாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த வகை நிதிகள், சராசரியாக, 13 சதவீத அளவிலான பலனை அளிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற வரி சேமிப்பு முதலீட்டின் பலனை விட இது அதிகமானது. எனினும், இவை சம பங்கு சார்ந்த முதலீடு என்பதால், இவற்றுக்கான ரிஸ்கையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
முக்கிய பலன்கள்:
* இ.எல்.எஸ்.எஸ்., திட்ட முதலீடு, நீண்ட கால வளத்தை உருவாக்கி கொள்ள உதவும்* வரி சேமிப்பு முதலீடுகளில் குறைந்த லாக் இன் காலம்* ஈவுத் தொகை மற்றும் ஆதாய பலன் வரி விலக்கு கொண்டது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|