பதிவு செய்த நாள்
30 அக்2017
01:07
பொதுத் துறை வங்கிகளின் பங்குகளில், இந்த வாரம் நாம் கண்ட விலை உயர்வு, அனைவரின் வியப்பையும் சம்பாதித்து விட்டது. யாரும் சமீப காலமாக வாங்காத பங்குகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை வாங்குவதில் எந்த லாபமும் இல்லை என்பதே, சந்தையில் பெருவாரியான முதலீட்டாளர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது. ஆகவே, முற்றிலும் புறக்கணித்த நிலையில் இருந்தன பொதுத் துறை வங்கி பங்குகள். அத்தகைய சூழலில் வந்தது இந்த சூறாவளி விலை நகர்வு.
முதலீட்டாளர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக சந்தை நகர்வுகள் அமைவது புதிதல்ல. இது தொடர்ந்து நடக்கும் என்பதே சந்தை பற்றிய நம் உறுதியான புரிதலாக இருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு சந்தை நகர்விலும் புதிய புரிதல்களும், பழைய புரிதல்களின் நினைவூட்டலும் தொடர்ந்து ஏற்படும். இதை, சந்தை நமக்கு புகட்டும் தொடர் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.பொதுத் துறை வங்கிகளில் நாம் எதிர்கொள்ளும் வாராக் கடன் சார்ந்த சவால்கள் மகத்தானவை. அரசு இந்த சவால்களை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், அரசு மீதும், நம் வங்கி அமைப்பு சார்ந்தும் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கும், புரிதலும் அரசியல் பார்வை சார்ந்ததாக அமைவது இயற்கை. அரசியல் பார்வையோடு பொருளாதார சிக்கல்களை அணுகும் போது, நம் முதலீட்டு முடிவுகளில் அரசியல் புகுந்துவிடுகிறது. இது தவிர்க்க வேண்டிய நிகழ்வு.வங்கியின் வாராக் கடன் சார்ந்த நடத்தையை, தொழில் ரீதியாக அளவிட வேண்டும். அப்படி அணுகினால் மட்டுமே, நம்மால் முதலீட்டு முடிவுகளை நிதானமாகவும், சாதுர்யமாகவும் எடுக்க முடியும்.
பெருவாரியான முதலீட்டாளர்கள் பொதுத் துறை வங்கிகளில் முதலீடு செய்வதை தவிர்த்தனர். ஆகவே, அந்த வங்கிகளுக்கு அரசு மீண்டும் முதல் கொடுக்கும் முடிவை அறிவித்தவுடன், சந்தை அவற்றின் பங்கு விலையை ஒரே நாளில், 25 முதல், 40 சதவீதம் வரை உயர்த்திவிட்டது. ஆக, அரசு அறிவிப்பு வெளியான பின், குறைந்த விலையில் முதலீடு செய்யும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்கவில்லை. இரண்டே நாட்களில் விலை உயர்ந்து, அவற்றில் ஏற்கனவே முதலீடு செய்தோர் மட்டுமே இந்த அறிவிப்பின் பலனை பெற முடிந்தது.இந்த நிகழ்வு, ஒன்றை மட்டுமே தெளிவாக அறிவுறுத்துகிறது. சந்தையில் நாம் கையெடுக்கும் முதலீட்டு முடிவுகள், அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகளை எதிர்பார்த்து, முன்கூட்டியே அமைய வேண்டும்.
அப்படி அமைந்தால் மட்டுமே, முக்கிய பொருளாதார நிகழ்வுகளில் நாமும் பங்குபெற முடியும். அறிவிப்பு வெளிவந்த பின்பு, நாம் சந்தையில் பங்கு வாங்க அவசரம் காட்டுவதை தவிர்த்து, பங்கு ஆய்வுகளில் நம் முழு கவனமும் செலுத்த வேண்டும். இப்போது அறிவிப்பு மட்டுமே வெளிவந்து உள்ளது. ஆய்வுகள் மட்டுமே அறிவிப்புகளின் முழு தாக்கத்தையும், கொள்கை முடிவுகளின் முன்நகர்வையும் நமக்கு தெளிவுபடுத்தும். அந்த தெளிவுடன் நம் வருங்கால முதலீட்டு முடிவுகளை எடுப்பது இப்போது அவசியமாகிறது.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|