பதிவு செய்த நாள்
02 நவ2017
03:35
மும்பை, நவ. 2–‘நாட்டில், சிமென்ட்டுக்கான தேவை, நடப்பு நிதியாண்டின், நான்காவது காலாண்டில் இருந்து அதிகரிக்கும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.இது குறித்து, ‘இக்ரா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:நடப்பு நிதியாண்டின், முதல் அரையாண்டு கால கட்டத்தில், ரியல் எஸ்டேட் மந்த நிலை, மணல் தட்டுப்பாடு, ஜி.எஸ்.டி., அறிமுகம் உள்ளிட்ட காரணங்களால், சிமென்ட்டுக்கான தேவை குறைந்திருந்தது.ஆனால், நான்காவது காலாண்டு முதல், சிமென்ட்டுக்கான தேவை அதிகரிக்கும். குறிப்பாக, சகாய விலை வீடுகள், உட்கட்டமைப்பு வேலைகள், சாலை மற்றும் பாசன திட்டங்கள் ஆகிய காரணங்களால், சிமென்ட் தேவை அதிகரிக்கும்.மந்தமாகி போன ரியல் எஸ்டேட் துறை செயல்பாடுகள், சில மாநிலங்களில் ஏற்பட்ட மணல் தட்டுப்பாடு ஆகியவை, சிமென்ட் தேவையை, இரண்டாவது காலாண்டு வரை தாமதப்படுத்தி இருக்கிறது.சிமென்ட் உற்பத்தியாளர்களை பொறுத்தவரை, அடுத்து வரும் காலங்களில், விலையை கட்டுக்குள் வைத்திருப்பது, கஷ்டமானதாக இருக்கும். குறிப்பாக, நிலக்கரி போன்ற எரிசக்தி பொருட்களின் விலை அதிகரிப்பு, டீசல் விலை அதிகரிப்பு போன்றவை, இந்த நிதியாண்டில் சவாலாக இருக்கும்.நடப்பு நிதியாண்டின், முதல் ஐந்து மாதங்களில், சிமென்ட் உற்பத்தி, அதற்கு முந்தைய நிதியாண்டின், ஐந்து மாதங்களோடு ஒப்பிடும் போது, 3.2 சதவீதம்வளர்ச்சி குறைவை சந்தித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஐந்து மாதங்களில், 117.3 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும்; கடந்த நிதியாண்டின் ஐந்து மாதங்களில், 121.2 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும், சிமென்ட் உற்பத்தி இருந்தது.நடப்பு நிதியாண்டில், சிமென்ட்டுக்கான தேவை, நாடெங்கும் குறைவாகவே இருந்தது. வட மாநிலங்களில் குறிப்பாக, உ.பி., பஞ்சாப் மாநிலங்களில், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் மணல் தட்டுப்பாடு காரணமாக, ரியல் எஸ்டேட்டில் மந்த நிலை ஏற்பட்டது.மேற்கு மாநிலங்களில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய மசோதாவால், கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.தென் மாநிலங்களில், குறிப்பாக, தமிழகம் மற்றும் கேரளாவில், வறட்சி மற்றும் மணல் தட்டுப்பாடு காரணமாக, கட்டுமான பணிகள் குறைந்தன.கிழக்கு மாநிலங்களில், குறிப்பாக, பீஹாரில் மணல் குவாரிகள் தடுப்பு நடவடிக்கைகளால், சிமென்ட் விற்பனை பாதிப்புக்கு ஆளானது.ஆக., – செப்., மாதங்களில், பருவ மழை பாதிப்புகள் காரணமாக, சிமென்ட் தேவை குறைந்தது. அக்., மாதத்தை பொறுத்தவரை, பருவ மழை, மணல் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், உ.பி., பஞ்சாப், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், தேவை குறைந்து காணப்பட்டது. இருப்பினும், நான்காவது காலண்டில், தேவை அதிகரிக்க துவங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|