பதிவு செய்த நாள்
03 நவ2017
00:05
சிங்கப்பூர் : ‘‘இந்தியாவை, வரம்பு மீறி டாலரை குவிக்கும் நாடாக, அமெரிக்கா முத்திரை குத்தக் கூடாது,’’ என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் வலியுறுத்தி உள்ளார்.
‘இந்தியா, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த, அதிக அளவிற்கு டாலரை வாங்கி குவிக்கிறதா என்பது, தீவிரமாக கண்காணிக்கப்படும்’ என, சமீபத்தில், அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்திருந்தது.
இது குறித்து, ‘பார்க்லேஸ் ஆசிய கூட்டமைப்பு’ மாநாட்டில் பங்கேற்க, சிங்கப்பூர் வந்திருந்த, ரகுராம் ராஜன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜன., – ஜூன் வரையிலான அரையாண்டில், இந்தியாவின் நிகர டாலர் கொள்முதல் அதிகரித்துள்ளது. இந்த வகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1.8 சதவீதம், அதாவது, 4,200 கோடி டாலர் வாங்கப்பட்டு உள்ளது.இதை, வரம்பு மீறிய டாலர் குவிப்பு என, கூற முடியாது. ‘ஓராண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறைந்தபட்சம், 2 சதவீத டாலரை, நிகர அளவில் வாங்கி குவித்தால் மட்டுமே, அது, முறையற்ற அன்னிய செலாவணி பரிவர்த்தனை’ என, அமெரிக்க கருவூலத் துறை வரையறுத்து உள்ளது.அதனால், இந்தியா மீது, முறையற்ற வகையில், டாலரை வாங்கி குவிக்கும் நாடு என்ற முத்திரை குத்தப்படும் என, நான் எண்ணவில்லை.
அப்படியே, இந்தியா, டாலரை அதிகம் வாங்குவதாக அமெரிக்கா கருதினாலும், அத்தகைய நடவடிக்கையை எடுக்கக் கூடாது. ஏனெனில், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, ஜூன் நிலவரப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.4 சதவீதம், அதாவது, 1,430 கோடி டாலராக உள்ளது. இது, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், மேலும் அதிகரிக்கும். அதற்கேற்ப, இந்தியா, டாலரை அதிகம் அளிக்க நேரிடும். அதிகளவில் டாலர் வெளியேறினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள, அதன் கையிருப்பை அதிகரித்துக் கொள்வது, ரிசர்வ் வங்கிக்கு அவசியமாகிறது.
மிகப்பெரிய நாடாக திகழும் இந்தியா, டாலருக்காக, பன்னாட்டு நிதியத்தின் உதவியை, அவ்வப்போது நாட முடியாது. அரசியல் ரீதியாகவும், அத்தகைய நிலைப்பாடு கடினமானதாக இருக்கும். அதனால், டாலர் கையிருப்பு அதிகரிப்பு, இந்தியாவின் விவேகமான நடவடிக்கை எனலாம். எந்தவொரு நாட்டையும், ஓர் அளவுகோல் படி, முறையற்று கரன்சியை குவிப்பதாக கூற முடியாது. ரூபாயின் பரிவர்த்தனை மதிப்பு, குறைவாகவே உள்ளதால், இந்தியாவை யாரும் அவ்வாறு குற்றஞ்சாட்டவும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
3 அம்சங்கள்:
அமெரிக்க கருவூலத் துறை, கீழ்கண்ட மூன்று அம்சங்களின் அடிப்படையில், ஒரு நாட்டை, முறையற்ற அன்னிய செலாவணி பரிவர்த்தனையில் ஈடுபடுவதாக, முத்திரை குத்துகிறது.
* அமெரிக்காவுடனான ஒரு நாட்டின் பரஸ்பர வர்த்தக உபரி, குறைந்தபட்சம், 2,000 கோடி டாலரை எட்டினால்...
* மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு உபரி, 3 சதவீதத்தை தொட்டால்...
* ஓராண்டில், அன்னிய செலாவணி கொள்முதல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2 சதவீதமாக உயர்ந்தால்...
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|