பதிவு செய்த நாள்
10 நவ2017
23:57
புதுடில்லி : ‘மத்திய அரசு ஊழியர்கள், வீடு, பிளாட் வாங்க, முன்பணமாக, 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்’ என, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு, எச்.பி.ஏ., என்ற திட்டத்தில், முன்பணம் வழங்கப்படுகிறது. தற்போது, இத்திட்டத்தின் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, வீடு, பிளாட் ஆகியவற்றை வாங்கவோ அல்லது வீடு கட்டவோ வழங்கப்படும் முன்பணம், 7.50 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இத்தொகையை, 20 ஆண்டுகளில், சுலப தவணையில் திரும்பச் செலுத்தலாம். முன்பணத்திற்கு, 6 – 9.5 சதவீதம் வரை, நான்கு விதமாக வசூலிக்கப்பட்ட வட்டி, தற்போது, 8.5 சதவீதம் என, தனி வட்டி விகிதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மிச்சம்:
மத்திய அரசு ஊழியர்கள், தங்களின் அடிப்படை ஊதியத்தை பொறுத்து, 25 லட்சம் ரூபாய் வரை, முன்பணம் பெறலாம். வங்கியில் பெறும் வீட்டுவசதி கடனை விட, இத்திட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள், குறிப்பிடத்தக்க தொகையை மிச்சப்படுத்தலாம். உதாரணமாக, எஸ்.பி.ஐ., போன்ற வங்கிகளில், 8.35 சதவீத கூட்டு வட்டியில், 25 லட்சம் ரூபாய் வீட்டுவசதி கடன் வாங்கி, 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும் ஒருவர், மாத தவணையாக, 21,459 ரூபாய் செலுத்த நேரிடும்.
அவர், 20 ஆண்டுகளின் முடிவில், 26.50 லட்சம் ரூபாய் வட்டியுடன், மொத்தம், 51.50 லட்சம் ரூபாய் செலுத்தி இருப்பார். இதே தொகையை, எச்.பி.ஏ., திட்டத்தில் முன்பணமாக பெற்று, 8.5 சதவீத தனி வட்டி அடிப்படையில், 20 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் போது, முதல், 15 ஆண்டுகளுக்கு மாத தவணையாக, 13,890 ரூபாய் செலுத்த நேரிடும். எஞ்சிய காலத்திற்கான மாத தவணை, 26,411 ரூபாயாக இருக்கும். இதன்படி, 20 ஆண்டுகளில் ஒருவர், 15.84 லட்சம் ரூபாய் வட்டி தொகை உட்பட, மொத்தம், 40.84 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்துவார். இந்த வகையில், அவர், 10.66 லட்சம் ரூபாய் சேமிக்கலாம்.
விரிவாக்கம்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு, வீட்டை விரிவுபடுத்தும் திட்டத்திற்கான முன்பணம், 1.80 லட்சம் ரூபாயில் இருந்து, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், ஒருவர் வாங்கும் வீட்டிற்கான வரம்புத் தொகையும், 30 லட்சம் ரூபாயில் இருந்து, 1 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் பெற்ற வீட்டுவசதி கடனை, எச்.பி.ஏ., திட்டத்திற்கு மாற்றும் வசதியும் உள்ளது.மத்திய அரசின் இந்த திட்டம், வீட்டுவசதி துறையின் வளர்ச்சிக்கு துணை புரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இணைந்தும் பெறலாம்:
மத்திய அரசில் பணிபுரியும் தம்பதியில், ஒருவர் மட்டுமே, வீடு வாங்க முன்பணம் பெறலாம் என்பதை மாற்றி, தற்போது, இருவரும் இணைந்தோ அல்லது தனியாகவோ முன்பணம் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|