பதிவு செய்த நாள்
12 நவ2017
23:52
பரவலாக அறியப்பட்ட, முதலீட்டு வாய்ப்பான பி.பி.எப்., எனக் குறிப்பிடப்படும், ‘பப்ளிக் புராவிடண்ட் பண்டு’ திட்டத்தின், அதிகம் அறியப்படாத அம்சங்கள் குறித்து ஒரு பார்வை.
வட்டி விகிதம் குறையும் சூழலிலும், பி.பி.எப்., அதிகம் நாடப்படும் முதலீட்டு வாய்ப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. நீண்ட கால நோக்கில் பலன் தருவதும், வரி சேமிப்பு உள்ளிட்ட சாதகமான அம்சங்கள் இருப்பதும், இதன் சிறப்பம்சமாக இருக்கிறது. முதலீடு காலத்தில் மட்டும் அல்லாமல், பலனை பெறும் போதும், இது வரிச்சலுகை கொண்டதாக இருக்கிறது. இந்த திட்டம் பிரபலமானதாக இருந்தாலும், இது தொடர்பாக அதிகம் அறியப்படாத அம்சங்களும் இருக்கின்றன.
பங்களிப்பு :
பி.பி.எப்., திட்டத்தில் செய்யப்படும் முதலீடு, 15 ஆண்டுகள் ‘லாக் இன்’ காலம் கொண்டது. ஆனால், இந்த முதிர்வு காலம், கணக்கு துவக்கப்பட்ட நாளில் இருந்து கணக்கிடப்படுவது இல்லை என்பது தெரியுமா? பி.பி.எப்., திட்ட விதிமுறைகள் படி, ‘டிபாசிட்’ செய்யப்பட்ட நிதி ஆண்டின் இறுதியில் இருந்து, முதிர்வு காலம் கணக்கிடப்படுகிறது. எனவே, எந்த மாதத்தில் கணக்கு துவக்கப்பட்டது என்பது முக்கியம் அல்ல. உதாரணத்திற்கு, ஒருவர், 2014 ஜூலையில் கணக்கு துவக்கி இருந்தால், அவரது கணக்கிற்கு துவக்கம், 2015 முதல் கணக்கிடப்பட்டு, 2030 ஆண்டு முதிர்வு காலமாக அமையும்.
திட்டத்தின் விதிமுறைகளின்படி, குறைந்தபட்சம், 500 ரூபாய் மற்றும் அதிகபட்சம், 1.50 லட்சம் ரூபாய் முதலீடு அனுமதிக்கப்படுகிறது. சொந்தமாக துவக்கிய கணக்கு அல்லது மைனர்கள் பெயரில் துவக்கப்பட்ட கணக்கு எல்லாவற்றுக்கும், இது பொருந்தும். மொத்தமாக பணம் செலுத்தலாம் அல்லது மாதத் தவணைகளில் செலுத்தலாம். ஆனால், நிதியாண்டில், 12 தவணைகளுக்கு மேல் செலுத்த முடியாது. லாக் இன் காலம் நிதியாண்டின் இறுதியில் இருந்து துவங்குவதால், திட்டக் காலத்தில் செலுத்தப்படும் பங்களிப்பு, 16 ஆக கருதப்படும். கணக்கு துவங்கும் போது செலுத்தப்படும் தொகை, முதல் பங்களிப்பாக கருதப்படும். அதன்பின், திட்டக் காலத்தில் 15 பங்களிப்புகள் செலுத்தப்பட்டு இருக்கும். மாதாந்திர பங்களிப்புக்கும், இது பொருந்தும்.
வட்டி கணக்கீடு:
இத்திட்டத்தில், மாதந்தோறும் பங்களிப்பு செலுத்துபவர்கள், ஒவ்வொரு மாதமும், 5ம் தேதிக்கு முன்னதாக, பணம் செலுத்துவது ஏற்றது. மாதத்தின், 5ம் தேதி முதல், மாத கடைசி வரை உள்ள தொகையே, வட்டி கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுவதால், இந்த காலத்திற்குள் தொகையை செலுத்தினால், அதுவும் வட்டி கணக்கில் சேரும். மொத்தமாக தொகையை செலுத்துவதாக இருந்தால், நிதியாண்டின், ஏப்., 5க்கு முன்னதாக செய்ய வேண்டும். மார்ச், 31 வட்டி செலுத்தப்பட்டாலும், ஏப்., 5ம் தேதிப்படி தான், வட்டி கணக்கிடப்படுகிறது.நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் செலுத்தப்படும் தொகைக்கு, எந்த வட்டியும் கிடையாது, தற்போதைய நிலைப்படி, இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம், ஆண்டுக்கு, 7.8 சதவீதம் என, தீர்மானிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு, ஏப்., முதல், வட்டி விகிதம், காலாண்டு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அதற்கு முன் இது, ஆண்டுக்கு ஒருமுறை தீர்மானிக்கப்பட்டது.
பகுதி விலக்கல்:
இந்தியாவில் வசிப்பவர் மட்டுமே, கணக்கு துவங்க முடியும். எனினும், இணைந்து கணக்கு துவக்கம் வாய்ப்பு இல்லை. மைனர்களுடன் இணைந்து பாதுகாவலர் கணக்கு துவக்கலாம். இந்தியாவில் வசிக்காதவர் மற்றும் இந்து கூட்டு குடும்பம் கணக்கு துவங்க முடியாது. இந்தியர் ஒருவர், வெளிநாட்டில் வாழும் இந்தியராக மாறினால், அவரது பெயரிலான, பி.பி.எப்., கணக்கு நிறுத்தப்படும் என, சமீபத்தில், அரசு அறிவித்துள்ளது. அதன்பின், கணக்கு முடிக்கப்படும் காலம் வரை, அஞ்சலக வட்டி விகிதமே வழங்கப்படும். பி.பி.எப்., திட்டம், 15 ஆண்டுகள் காலத்திற்கானது என்றாலும், இடையே பகுதி விலக்கல் மற்றும் கடன் வசதி சாத்தியம். மீதி தொகை மற்றும் பங்களிப்பு காலத்திற்கு ஏற்ப, இதற்கான விதிமுறை அமையும். கடனுக்கு, திட்ட வட்டியை விட, 2 சதவீதம் கூடுதல் வட்டி வசூலிக்கப்படும். எனினும், பகுதி விலகல் அனுமதிக்கப்படும், 7வது ஆண்டுக்கு பின், இதன் மீது கடன் பெற முடியாது. ‘நாமினேஷன்’ வசதியும் இருக்கிறது.
நீண்டகால நலன்:
* பி.பி.எப்., நீண்டகால நலன் தரும் திட்டம். கூட்டு வட்டியின் பலன் தருவது.
* வரி சேமிப்பு அளிப்பது. எல்லா கட்டத்திலும் வரி விலக்கு கொண்டது.
* முதிர்வு காலத்திற்கு பின், 5 ஆண்டு நீட்டிக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|