பதிவு செய்த நாள்
18 நவ2017
00:02
பெங்களூரு : அமெரிக்காவைச் சேர்ந்த, ‘விர்ஜின் ஹைப்பர்லுாப் ஒன்’ நிறுவனம், ‘ஹைப்பர்லுாப்’ எனப்படும், மின்னல் வேக வாகன போக்குவரத்து குறித்த ஆய்வை, கர்நாடகாவில் துவக்கி உள்ளது. இதற்காக, அம்மாநில அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
‘‘பெங்களூருடன், இதர தொழில் நகரங்களை, ‘ஹைப்பர்லுாப்’ வாகன போக்குவரத்து மூலம் இணைப்பது குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்படும். சிறிய நிலப்பரப்பில், குறைந்த கட்டுமான செலவில், சிக்கனமான மின்சாரத்தில், ‘புல்லட்’ ரயிலை விட அதிவேகமாக, ‘ஹைப்பர்லுாப்’ வாகன போக்குவரத்தை செயல்படுத்தலாம்,’’ என, விர்ஜின் ஹைப்பர்லுாப் ஒன் நிறுவனத்தின், சர்வதேச செயல்பாட்டு தலைவர், நிக் இயர்லே தெரிவித்து உள்ளார்.
சிறிய விமான வடிவிலான, ஹைப்பர்லுாப் வாகனம், மின்காந்த விசை மூலம், நீண்ட குழாய் வழியே, மணிக்கு, 1,100 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடியது. இத்திட்டம் அமலானால், சென்னையில் இருந்து பெங்களூருக்கு, 20 நிமிடங்களில் செல்லலாம். ஹைப்பர்லுாப் ஒன் நிறுவனம், உலகளவில், ஹைப்பர்லுாப் வாகன போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்காக, இந்தியாவைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் உட்பட, 10 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இதில், எகாம் நிறுவனம், சென்னை – பெங்களூரு இடையிலான, 334 கி.மீ., துாரத்திற்கு, ஹைப்பர்லுாப் போக்குவரத்திற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளது. ஹைப்பர்லுாப் இந்தியா நிறுவனம், சென்னை – மும்பை இடையிலான, 1,102 கி.மீ., ஹைப்பர்லுாப் போக்குவரத்து குறித்த ஆய்வில் இறங்கி உள்ளது.
சோதனை:
ஹைப்பர்லுாப் ஒன் நிறுவனம், அமெரிக்காவின், லாஸ்வேகாஸ் அருகே, பாலைவனத்தில், ஹைப்பர்லுாப் வாகன போக்குவரத்து சோதனைகளை நடத்தி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|