பதிவு செய்த நாள்
18 நவ2017
00:04
புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த, தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ்’ இந்தியாவின் கடன் தகுதி மதிப்பை, 13 ஆண்டுகளுக்கு பின் உயர்த்தி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் தொடரும், பொருளாதாரம் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த சீர்திருத்தங்களால், அந்நாடு உயரிய வளர்ச்சியை காணும். அரசின் கடன்களை சமாளிக்கும் வகையில், மிகப்பெரிய அளவில், நிலையான நிதி வளம் உள்ளதால், நடுத்தர கால அளவில், அரசின் பொதுக்கடன், படிப்படியாக குறையும். அதே சமயம், இந்தியாவின் கடனில், பெருங்கடன்களின் சுமையும் கவலைக்குரியதாக உள்ளது. பொருளாதார மந்த நிலையால், கடன் சுமை அதிகரித்தால் கூட, நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களால், அந்த இடர்ப்பாட்டை சமாளிக்கலாம்.அதனால், மத்திய அரசின் உள்நாட்டு கரன்சி மற்றும் அன்னிய செலாவணியிலான கடன் பத்திர வெளியீடுகளுக்கான, தர நிர்ணய அளவீடு, ‘பி.ஏ.ஏ., – 3’ என்ற நிலையில் இருந்து, ஒரு படி உயர்த்தி, ‘பி.ஏ.ஏ., – 2’ ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் கடன் தகுதி மதிப்பீடு, சாதகமான நிலையில் இருந்து, ஸ்திரமான நிலைக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இந்தியாவில், பல முக்கிய சீர்திருத்தங்கள், இன்னும் திட்ட வடிவிலேயே உள்ளன. எனினும், நடைமுறைக்கு வந்த சீர்திருத்தங்களால், வர்த்தகச் சூழல் மேம்பட்டு உள்ளது; உற்பத்தித் திறன் உயர வழிவகுத்து உள்ளது. உள்நாடு மற்றும் அன்னிய முதலீடுகள் அதிகரிக்க துணை புரிந்து உள்ளது. இந்தியாவின் வலுவான வளர்ச்சியும், சீர்திருத்தங்களும், எத்தகைய இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளவும், உலகளவில் அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்கக் கூடிய ஆற்றலையும் அளிக்கும்.
ஜி.எஸ்.டி., மாநிலங்கள் இடையிலான வர்த்தக தடைகளை அகற்றி, உற்பத்தி உயர வழிவகுத்து உள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ‘ஆதார்’ இணைப்பு, பயனாளிகளுக்கு நேரடி மானியம் உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள், கறுப்பு பொருளாதாரத்தின் பங்கை குறைக்க வழி செய்துள்ளன. வங்கி வாராக்கடன் பிரச்னைக்கு, மறு பங்கு முதலீட்டு திட்டம் தீர்வளிக்கும். எனினும், நிலம் மற்றும் தொழிலாளர் சந்தை சார்ந்த சீர்திருத்தங்கள், மாநில அரசுகளுடன் தொடர்புடையது என்பதால், பயனளிக்க சில காலம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பயன்கள்:
* மத்திய அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள், வெளிநாடுகளில் திரட்டும் கடன்களுக்கான செலவினம் குறையும்* இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் காணும்.
காலம் கடந்த அங்கீகாரம்:
நாட்டின் கடன் தகுதி மதிப்பீடு, 13 ஆண்டுகளுக்கு பின் உயர்த்தப்பட்டதை வரவேற்கிறோம். எனினும் இது, சில ஆண்டுகளாக, மத்திய அரசு, பொருளாதாரத்தை வலுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்கு, காலம் கடந்து கிடைத்த சர்வதேச அங்கீகாரம் ஆகும். இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து ஐயம் தெரிவித்தோர், தங்களை சுய பரிசோதனை செய்து கொள்வர் என, நம்புகிறேன்.
-அருண் ஜெட்லி, மத்திய நிதி அமைச்சர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|