பதிவு செய்த நாள்
28 நவ2017
00:09
புதுடில்லி : ‘இந்தியாவில், வர்த்தக வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதால், இங்கு பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடுகளை அதிகரிக்க ஆர்வம் காட்டுகின்றன’ என, பிரிட்டன் இந்திய வர்த்தக கவுன்சில் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இந்தியா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த, 100 நிறுவனங்களை உறுப்பினராக கொண்ட, இக்கவுன்சிலின் குழுமத் தலைவர், ரிச்சர்ட் ஹீல்டு, மேலும் கூறியதாவது: இந்தியாவில், பெட்ரோலியம், வங்கி, மருந்து உள்ளிட்ட துறைகளில், பிரிட்டன் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு, ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. வருங்காலத்திலும், வளர்ச்சிக்கான சூழல் பிரமாதமாக உள்ளது. இதனால், இங்குள்ள பிரிட்டன் நிறுவனங்களில், பெரும்பாலானவை, அவற்றின் முதலீடுகளை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளன. தொழில் துவங்குவதற்கான ஆய்வை, பல நிறுவனங்கள் மேற்கொண்டு உள்ளன.
இந்தியாவில், ஒருசில பிரிவுகளில் தொழில் துவங்குவது சுலபமாகி உள்ளது; மின் வசதி விரைவாக கிடைக்கிறது; மின்னணு தொழில்நுட்பமும் பரவலாகி உள்ளது. எனினும், தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக்கும் வகையில், பல பிரிவுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு, தொழில் துவங்குவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. ஆனால், இந்த தாராளமயமாக்கல், ஒரே சீராக இல்லை. ஆட்சியில் உள்ளோரும், மூத்த அதிகாரிகளும், தொழில் துவங்குவதை சுலபமாக்குவதில் தீவிரமாக உள்ளனர். ஆனால், அப்பணிகளின் செயலாக்கம், கீழ்மட்டத்தில் எதிர்பார்த்த அளவிற்கு திருப்திகரமாக இல்லை என்பது, எங்கள் அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எனினும், ஒட்டுமொத்த அளவில், இந்தியாவில் தொழில் துவங்குவது,முன் இருந்ததை விட, தற்போது சுலபமாகி உள்ளது. தொழில் புரிவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்த, மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால், அத்திட்டங்களின் செயலாக்க வேகமும், சீர்திருத்தங்களை அமலாக்குவதில் காணப்படும் தாமதமும், கவலை அளிப்பதாக உள்ளன. இந்தியாவிடம் இருந்து, பிரிட்டன் நிறுவனங்கள் கற்றுக் கொள்ள ஏராளமாக உள்ளன. அதனால் தான் அவை, இந்தியாவில் முதலீடு செய்ய வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னணி நிறுவனங்கள்:
பிரிட்டனைச் சேர்ந்த, கேட்பரி இந்தியா, பிரிட்டிஷ் டெலிகாம், எச்.எஸ்.பி.சி., ஜி.எஸ்.கே பார்மாசூட்டிக்கல்ஸ், ஐ.சி.ஐ., இந்தியா, ராய்ட்டர்ஸ், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி, ஷெல் இந்தியா, மார்க்ஸ் அண்டு ஸ்பென்சர், பி அண்டு ஓ போர்ட்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், இந்தியாவில் செயல்படுகின்றன.
தனித்துவமான நல்லுறவு:
பிரிட்டன், இந்தியாவுடன் தனிச் சிறப்புமிக்க நல்லுறவை கொண்டுள்ளது. இது, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பின், மேலும் முக்கியத்துவம் வாய்ந்த தனிச் சிறப்புமிக்கதாக இருக்கும்.
-ரிச்சர்ட் ஹீல்டு, பிரிட்டன் இந்திய வர்த்தக கவுன்சில் குழுமத் தலைவர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|