பதிவு செய்த நாள்
28 நவ2017
23:54
புதுடில்லி : ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதம் குறைக்கப்படுமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, அக்., 5ல் வெளியிட்ட அறிக்கையில், ‘வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி, மாற்றமின்றி, 6 சதவீதமாகவே தொடரும்’ என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. ‘நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காண்பதற்கும் அல்லது ஸ்திரமாக இருப்பதற்குமான காரணிகள், மேலும் வலுப்பெறாதவரை, பணவீக்கத்தின் தாக்கத்தை கருதி, வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை’ என, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டிச., 6ல், ரிசர்வ் வங்கியின், அடுத்த நிதிக் கொள்கை அறிவிப்பு வெளியாக உள்ளது. அதில், ‘ரெப்போ விகிதம் குறைக்கப்பட வேண்டும்’ என, மத்திய நிதியமைச்சகம் விரும்புவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏப்., – ஜூன் வரை, 5.7 சதவீதமாக குறைந்து இருந்தது. ஜூனில், 1.54 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம், ஆகஸ்டில், 3.36 சதவீதமாக அதிகரித்து, செப்டம்பரில், 3.28 சதவீதமாக குறைந்தது. எனினும், ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை மாற்றவில்லை. அக்டோபரில், சில்லரை பணவீக்கம், 3.58 சதவீதமாக உயர்ந்துள்ள போதும், அது, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த, 4 சதவீத வரம்பிற்குள் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சில், 210 பொருட்களுக்கான வரியை குறைத்துள்ளது. ஓட்டல்களுக்கு சீராக, 5 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கரீப் பருவ உற்பத்தி, 2.8 சதவீதம் குறையும் என, மதிப்பிடப்பட்டாலும், பருவ மழை பொழிவு சீராக இருக்கும் என, கூறப்படுகிறது. சமீபத்தில், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பை, ‘மூடிஸ்’ தர நிர்ணய நிறுவனம் உயர்த்தி உள்ளது. பிரதமர் மோடியின் சீர்திருத்த திட்டங்களை பாராட்டியுள்ள, ஸ்டாண்டர்டு அண்டு பூர்ஸ் நிறுவனம், ‘இந்தியாவின் கடன் தகுதி மதிப்பில் மாற்றமில்லை’ என, கூறியுள்ளது.
இது போன்ற அம்சங்களால், டிச., 6ல், ரெப்போ வட்டி குறைக்கப்படலாம். அவ்வாறு இல்லையென்றாலும், 2018 பிப்ரவரியில் வெளியாக உள்ள, அடுத்த நிதிக் கொள்கை அறிவிப்பிலாவது, ரெப்போ வட்டி குறைக்கப்பட வேண்டும் என, நிதியமைச்சக வட்டாரம் எதிர்பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிலைப்பாடு சரியல்ல:
ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழுவின் நிலைப்பாடு, வரையறுக்கப்பட்ட இலக்கிற்கு வெளியே உள்ளது. ஓராண்டு காலமாக, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கிற்கு குறைவாகவே பணவீக்கம் உள்ளது. ஆனால், ‘ரெப்போ’ வட்டியை குறைப்பதில் மட்டும், ரிசர்வ் வங்கி ஏனோ மெத்தனமாகவே இருக்கிறது
-சுர்ஜித் பல்லா, உறுப்பினர், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|