பதிவு செய்த நாள்
29 நவ2017
23:54
ஐதராபாத் : ‘‘தொழில்நுட்பம், அறிவியல் உட்பட, அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளில், பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும்,’’ என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் மகளும், ஆலோசகருமான, இவாங்கா டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று, ‘பணியாளர் மேம்பாடு மற்றும் திறன் பயிற்சிகளில், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க நம்மால் முடியும்’ என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், இவாங்கா டிரம்ப் பேசியதாவது: அமெரிக்காவில், ஆண், பெண் தொழிலாளர்களின், ஊதிய விகித சமன்பாட்டிற்கான கொள்கைகளின் தேக்க நிலையை மாற்ற, ஒவ்வொரு அதிபரும் முயற்சி மேற்கொண்டு வந்துள்ளனர். அனைத்து பெண்களும், பணியாற்றும் பெண்கள் தான். அவர்கள், தங்கள் குடும்பத்திற்காகவோ அல்லது வல்லுனராகவோ பணியாற்றுகின்றனர். ஒரு பெண், தான் ஈட்டும், 1 டாலரில், தன் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், 90 சென்ட் செலவழிக்கிறார்.
அமெரிக்காவில், 24 சதவீத பெண்கள் மட்டுமே, கணினி வல்லுனர்களாக உள்ளனர்; 13 சதவீத பெண்கள், தொழில் முனைவோராக விளங்குகின்றனர். அமெரிக்க அரசு, ‘ஸ்டெம்’ கல்வித் திட்டத்தில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறைகளில், பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், இத்துறைகளில், ஆண்களுக்கு நிகரான பெண்களின் பங்கு உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கருத்தரங்கில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்வாக இயக்குனர், சந்தா கோச்சார் பேசியதாவது: பெண்கள், தொழில் மற்றும் பணியில் வெற்றி பெற, கல்வி, ஊக்கம் மற்றும் சுயாதிகாரம் என்ற மூன்று அம்சங்கள் முக்கியம். இந்தியா, பெண்களின் சுயாதிகார முன்னேற்றத்திற்கு, ஏராளமான திட்டங்களை செயல்படுத்துகிறது. இதன் காரணமாக, அரசியல், விளையாட்டு, ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில், பெண்கள் சாதனை புரிகின்றனர். எனினும், பெண்கள் முன்னேற்றத்திற்கு, இன்னும் அதிகம் செய்ய வேண்டியது உள்ளது. பட்டதாரி பெண்களில், 25 சதவீதம் பேர் கூட, பணியாளர் சமூகத்தில் இடம் பெறாமல் உள்ளனர்.
‘பணிச் சூழலில், ஆண், பெண் இடைவெளியை குறைப்பதன் மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 70 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கு கூடுதலாக அதிகரிக்கும் ஆற்றல், இந்தியாவிற்கு உள்ளது’ என, மெக்கின்சே ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இக்கருத்தரங்கில், பிரிட்டன் முன்னாள் பிரதமர், டோனி பிளேயர், மனைவி, செர்ரி பிளேயர் மற்றும் சர்வதேச முன்னணி நிறுவனங்களின் பெண் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
மேம்பட்ட ஆற்றல்:
ஆண்களை விட, தங்களை தாழ்ந்தவர்களாக பெண்கள் கருதக் கூடாது. பெண்களுக்கு, தொழில்நுட்பக் கல்வி வசதி கிடைத்தால், அவர்கள் ஆண்களை விட மேம்பட்ட ஆற்றல் கொண்டவர்களாக மிளிர்வர்.
-செர்ரி பிளேயர்
மகளிருக்கான செர்ரி பிளேயர் அறக்கட்டளை நிறுவனர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|