பதிவு செய்த நாள்
02 டிச2017
00:03
புதுடில்லி:‘ஜி.எஸ்.டி., குறைப்பு; தேவை உயர்வு; புதிய, ‘ஆர்டர்’ அதிகரிப்பு போன்றவற்றால், நவம்பரில், தயாரிப்புத் துறையின் உற்பத்தி, சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது’ என, ‘நிக்கி – மார்கிட்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:ஜி.எஸ்.டி., குறைப்பால், 13 மாதங்களில் இல்லாத அளவிற்கு, தயாரிப்புத் துறையின் உற்பத்தி அதிகரித்துள்ளது. நிறுவனங்களுக்கு, அதிகளவில் புதிய, ‘ஆர்டர்’கள் கிடைத்துள்ளன. அதற்கேற்ப, சந்தையில் பொருட்களுக்கான தேவையும் பெருகி உள்ளது.இதன் காரணமாக, தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.எம் – பி.எம்.ஐ., குறியீடு, நவம்பரில், 52.6 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, அக்டோபரில், 50.3 புள்ளிகளாக இருந்தது.
தொடர்ந்து நான்கு மாதங்களாக, தயாரிப்புத் துறையின் வளர்ச்சியை குறிக்கும் வகையில், இக்குறியீடு, 50 புள்ளிகளை தாண்டி நிற்கிறது. ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,குறைப்பால், உற்பத்தி அதிகரித்து இருப்பதாக தெரிவித்து உள்ளன.இதனால், 2012 செப்டம்பருக்கு பின், இந்தாண்டு நவம்பரில் தான், மிக அதிகளவில், வேலைவாய்ப்பு விகிதமும் உயர்ந்துள்ளது.
உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும், இந்திய பொருட்களுக்கான தேவை பெருகி வருகிறது. மூன்று மாதங்களில் இல்லாத வகையில், முதன்முறையாக, நவம்பரில், மிக அதிக அளவிலான வெளிநாட்டு, ‘ஆர்டர்’களை தயாரிப்பு நிறுவனங்கள் பெற்றுள்ளன.அதே சமயம், மூலப்பொருட்கள் விலை உயர்வால், நிறுவனங்களின் தயாரிப்பு செலவும் அதிகரித்துள்ளது. ஏப்., முதல், மூலப்பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனால், ஜி.எஸ்.டி., குறைப்பால் கிடைத்த பயன் முழுவதையும்,வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியாத நிலையில் நிறுவனங்கள் உள்ளன.
மூலப்பொருட்கள் விலை உயர்ந்து, தயாரிப்பு செலவு அதிகரித்து உள்ளதால், ரிசர்வ் வங்கி, வரும் வாரம், ‘ரெப்போ’ விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளது.மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஐந்து காலாண்டுகளாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5.7 சதவீதமாக சரிவடைந்து உள்ளது.
இந்நிலையில், புதிய, ஜி.எஸ்.டி., முறைக்கு மாறுவதில் உள்ள சங்கடங்கள் குறைந்துள்ளன. தயாரிப்புத் துறையின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால், ஜூலை –செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.3 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓராண்டுக்கு பின்தயாரிப்புத் துறையில், 2016 அக்டோபருக்கு பின், நவம்பரில் தான், அதிக அளவிற்கு புதிய, ‘ஆர்டர்’கள் அதிகரித்துள்ளன; உற்பத்தி வளர்ச்சி விகிதமும் உயர்ந்துள்ளது. இதற்கு, ஜி.எஸ்.டி., குறைப்பும், தேவை அதிகரிப்புமே காரணம். இந்த வளர்ச்சி தொடரும்.
ஆஷ்னா தோதியா
பொருளாதார வல்லுனர், ஐ.எஸ்.எஸ்., மார்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|