பதிவு செய்த நாள்
03 டிச2017
00:35
இந்தியாவில், ஜி.எஸ்.டி., எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது?
இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை மனதில் வைத்து, இரு பாகங்களாக, ஜி.எஸ்.டி., பிரிக்கப்பட்டு உள்ளது. அதாவது, சி.ஜி.எஸ்.டி.,எனப்படும், மத்திய, ஜி.எஸ்.டி., மற்றும், எஸ்.ஜி.எஸ்.டி., எனப்படும், மாநில ஜி.எஸ்.டி., மத்திய அரசும், மாநில அரசும் பொருட்கள் மீது ஒரே நேரத்தில், ஜி.எஸ்.டி., விதிக்கும். ஒவ்வொரு சரக்கு மற்றும் சேவைகளை வழங்கும் போதும் வரி விதிக்கப்படும்.
மாநிலங்கள் இடையிலான பரிமாற்றமாக இருந்தால், அரசியல் சாசனத்தின் பிரிவு, 269 ஏ – 1ன் கீழ், மாநிலங்களுக்கு இடையே வினியோகிக்கப்படும், அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு, மத்திய அரசு, ஐ.ஜி.எஸ்.டி., எனப்படும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கும்.ஐ.ஜி.எஸ்.டி., என்பது, தோராயமாக, மத்திய, ஜி.எஸ்.டி., – மாநில, ஜி.எஸ்.டி., ஆகியவை, சேர்ந்த அளவில் இருக்கும்.
ஒவ்வொரு நிலையிலும், பொருட்கள் அல்லது சேவையை வினியோகம் செய்யும் போது, மத்திய, ஜி.எஸ்.டி.,யின் உள்ளீட்டு வரி வரவை, மத்திய, ஜி.எஸ்.டி.,யில் ஈடுசெய்ய முடியும்.இதே போல, மாநில, ஜி.எஸ்.டி.,யில் உள்ள உள்ளீட்டு வரி வரவை, மாநில, ஜி.எஸ்.டி.,யுடன் ஈடுசெய்ய முடியும். ஆனால், மத்திய சரக்கு மற்றும் சேவை வரியுடன், மாநில சரக்கு மற்றும் சேவை வரியை ஈடுசெய்ய முடியாது.
ஒரு குறிப்பிட்ட சரக்கு மற்றும் சேவைக்கு, சி.ஜி.எஸ்.டி., – எஸ்.ஜி.எஸ்.டி., எவ்வாறு விதிக்கப்படுகிறது?
சரக்கு மற்றும் சேவைகளுக்கு, ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும், ஒரே நேரத்தில், மத்திய, ஜி.எஸ்.டி., மற்றும், மாநில, ஜி.எஸ்.டி., விதிக்கப்படும். மேலும், இரண்டும் ஒரே விலைஅல்லது மதிப்பிற்கு விதிக்கப்படும்.சரக்கு அல்லது சேவைகளின் வினியோகத்தின் போது கொடுக்கப்படும் தள்ளுபடி தொகைக்கும், ஜி.எஸ்.டி., உண்டா?ஒப்பந்தப்படி செய்யப்படும் வினியோகங்களுக்கு வழங்கப்படும், தள்ளுபடி தொகைக்கு, ஜி.எஸ்.டி., இல்லை.
ஜி.எஸ்.டி., விதிப்பால், நுகர்வோருக்கு என்ன பயன்?
மத்திய, மாநில அரசுகள், பல்வேறு வகையான மறைமுக வரிகளை விதித்த போது, பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட அனைத்து வரிகளும், கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை. இதனால், பெரும்பாலான சரக்கு மற்றும் சேவைகளின் விலை, மறைமுக வரிகளால் அதிகரித்தது.
தற்போது, ஜி.எஸ்.டி., மூலம், சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்புகளுக்கு, ஒரே அளவான மற்றும் வெளிப்படையான வரி அளவு விதிக்கப்பட்டு, வரவு வைக்கப்படுகிறது.இதனால், இறுதி நுகர்வோர் மட்டும், வெளிப்படையான முறையில் வரி செலுத்தும் நிலை ஏற்படுகிறது. மேலும், இந்த வரியின் வெளிப்படைத் தன்மை நிர்வகிப்பதற்கு, சுலபமாக இருக்கும் காரணத்தாலும், குளறுபடிகளை கட்டுப்படுத்த செய்யப்பட்டுள்ள வழிமுறைகளாலும், பெரும்பாலான பொருட்களின் ஒட்டு மொத்த வரிச்சுமை குறையும். இது, நுகர்வோருக்கு பயனளிக்கும்.
மாநிலங்களுக்கு இடையே பரிமாறி கொள்ளப்படும், சரக்கு மற்றும் சேவைகளுக்கு, ஏன், ஐ.ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது?
‘இன்புட் டேக்ஸ் கிரடிட்’டை, ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்துக்கு தடையில்லாமல் கொண்டு செல்வதை உறுதிப்படுத்துவதற்காகவே, ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி., வழிமுறை உருவாக்கப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி.,யில், இறக்குமதிக்கு எவ்வாறு வரி விதிக்கப்படும்?
இறக்குமதிக்கு விதிக்கப்படும் கூடுதல் கலால் வரி, சிறப்பு கூடுதல் வரி ஆகியவை, ஜூலை, 1க்கு பின், ஜி.எஸ்.டி.,யில் இணைக்கப்பட்டு விட்டது. ஜூலை, 1க்கு பின், ஜி.எஸ்.டி.,யில், அரசியல் சாசனத்தின் பிரிவு, 269 ஏ – 1ன் படி, இந்திய எல்லைக்குள் அனைத்து இறக்குமதிக்கும், ஐ.ஜி.எஸ்.டி., விதிக்கப்படும்.இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு, உள்ளீட்டு வரி வரவு எடுத்து கொள்ளலாம். இறக்குமதி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தும் மாநிலங்கள், இறக்குமதிக்காக செலுத்தப்படும் ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி.,யில் இருந்து, தங்கள் பங்கை பெற முடியும்.
ஏற்றுமதிக்கான, ஜி.எஸ்.டி., நடைமுறை என்ன?
பூஜ்ஜிய வரி விகித அடிப்படையில், ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் சரக்கு மற்றும் சேவைகளுக்கு, வரி செலுத்த அவசியமில்லை. இருப்பினும், உள்ளீட்டு வரி வரவு சலுகை உள்ளது. அதையே, ஏற்றுமதியாளர்களுக்கு திருப்பி கொடுக்கும்படியாகவும் அமைய பெற்றுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகளை தெரிவு செய்யும் வாய்ப்புள்ளது. அதாவது, ஏற்றுமதியாகும் சரக்கு அல்லது சேவை மீதான வரியை செலுத்தி, பின் அதை, ஐ.ஜி.எஸ்.டி.,யாக திரும்ப பெறலாம் அல்லது வரியை செலுத்தாமல், ஒப்பந்த பத்திரத்தில் ஏற்றுமதி செய்து, உள்ளீட்டு வரி வரவாக, அதை திருப்பி தரக் கோரலாம்.
நாங்கள், ஏற்றுமதி தொழில் மட்டுமே செய்கிறோம். இந்தியாவில், விற்பனை கிடையாது. நாங்கள், ஜி.எஸ்.டி., எண் பெற வேண்டுமா?
உங்கள் ஆண்டு விற்பனை, 20 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால், ஜி.எஸ்.டி., பதிவு அவசியம். ஏற்றுமதி செய்யும் காரணத்தால், நீங்கள் உள்ளீட்டு வரி பயன் பெறலாம்
நான், ‘ஜாப் ஒர்க்’ எடுத்து செய்யும் ஒரு பணியாளர். நான், கட்டாயம், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டுமா?
‘ஜாப் ஒர்க்’ ஒரு சேவை என்பதால், உங்களது ஆண்டு வருமானம், 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், பதிவு அவசியமில்லை.
ஜி.எஸ்.டி.,யில், வழங்குபவர் அல்லது பெறுபவர்களை தவிர, வேறு யாராவது வரி செலுத்த வேண்டுமா?
ஆம். மத்திய, மாநில அரசுகள், மின்னணு வர்த்தகத்தை இயக்குபவரின் சேவைகளுக்கு வரி விதித்துள்ளது. சேவைகள் மின்னணு வர்த்தகத்தை இயக்குபவரின் வாயிலாக வழங்கப்பட்டு இருந்தால், அனைத்து சட்ட விதிமுறைகளும், இந்த மின்னணு வர்த்தகத்தை இயக்குபவரின் சேவைகளுக்கு பொருந்தும். அம்மாதிரி சேவைகளை வழங்கிய நபர், வரி செலுத்த கடமைப்பட்டவர்.
அறக்கட்டளை மூலம் வினியோகிக்கப்படும் அத்தியாவசியமான பொருட்களுக்கும், ஜி.எஸ்.டி., விதிக்கப்படுமா?
அறக்கட்டளையின் வினியோகங்கள், வியாபாரத்தை பெருக்கும் நோக்கத்தில் இருந்தால், சரக்கு மற்றும் சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி.,யில் வரி விதிக்கப்படும். இல்லையென்றால், ஜி.எஸ்.டி.,யில் வரி விதிக்கப்பட மாட்டாது.
– ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனர் மற்றும் கலால் துறையின் சென்னை பிரிவு வெளியீடு. இந்த தகவல், பொதுவான கண்ணோட்டத்தில் வழங்கப்படுவதால், இது, சட்ட ஆலோசனையாக அல்லது கருத்தாக கருதப்படாது.(அடுத்த ஞாயிறு சந்திப்போம்)
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|