பதிவு செய்த நாள்
03 டிச2017
23:52
சந்தையில் தொடர்ந்து வரலாறு காணாத அளவு அதிகமான பணப்புழக்கம் நிலவுகிறது. உள்நாட்டு முதலீடுகள் சந்தையில் குவியும் தற்கால சூழலில், பன்னாட்டு முதலீட்டாளர்களை நாம் சட்டை செய்யக்கூட முயல்வதில்லை.
பன்னாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு நகர்வுகளின் நுணுக்கங்களை, எப்போதும் தொடர்ந்து கவனிக்கும் பழக்கமுள்ள இந்திய முதலீட்டாளர்கள், சற்றே மமதையோடு இப்போது தோன்றுகின்றனர்.இந்த தோற்றத்திற்கான அடிப்படைக் காரணம், சந்தையின் தொடர் வளர்ச்சியும், இந்த ஆண்டு சந்தை கொடுத்திருக்கும் அபரிமிதமான லாபங்களும் ஆகும்.அடுத்து என்ன வாங்கலாம்? எந்த பங்குகளை வாங்கினால், மிக குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பது சார்ந்த தேடல் வேட்டையில், அனைத்து உள்நாட்டு முதலீட்டாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
திணறும் சூழல்
பங்குகளை வாங்குவதில் நிலவும் கடும் போட்டிச் சூழல், பங்குகளை நிர்வகிக்கும் நிதிமேலாளர்கள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.ஓ., மூலம் செய்யப்படும் பங்குகளின் விற்பனைகளில் கூட கடும் போட்டி நிலவுகிறது.இந்த சூழலில், சந்தைக்குள் பணவரத்து சிறிதும் குறையாததால், செலுத்த வேண்டிய முதலீடுகளை சீராக செலுத்த முடியாமல், மேலாளர்கள் தவிக்கின்றனர். சந்தை வீழ்ச்சியே காணாத நிலையில், நாட்கள் கடக்க கடக்க, நிதி மேலாளர்கள் முதலீடு செய்ய அவசரம் காட்ட துவங்கி உள்ளனர்.இந்த அவசரம், அதிக விருப்பு பெற்ற பங்குகளின் விலை, தொடர் உச்சங்களை தொடக் காரணமாகி உள்ளது.
நவம்பரில், சந்தையின் விருப்பு பெற்ற தனிப்பட்ட பங்குகள் அதிகம் உயர்ந்தாலும், ஒட்டுமொத்த சந்தையின் குறியீடான, நிப்டியில் மாற்றமில்லை. மாதத்தின் துவக்கத்தில் இருந்ததைவிட சற்று குறைந்தே நிப்டி நவம்பரை கடந்தது.இந்தச் சூழலில்,தொடர்ந்து வரலாறு காணாத அளவு, பரஸ்பர நிதிகளில் பணம் குவியக் குவிய, அதன் மேலாளர்கள், அந்த பணத்தை நிர்வகிக்க திணறும் சூழல் நிலவுகிறது.
நுணுக்க ஆய்வு
பங்குகளை தங்களுக்கு சாதகமான மதிப்பீட்டில் வாங்க முடியவில்லை என்பதை மேலாளர்கள் உணர்ந்தாலும், பண வரத்தை அவர்கள் தடுப்பதில்லை. அந்த பணம் பெரும்பாலும், மிட்-கேப் வகை பங்குகளிலும், சிறு மற்றும் குறு பங்குகளிலும் குவிந்து வருவது, அவர்களின் சங்கடத்தை மேலும் உயர்த்தி உள்ளது.இந்த வகை பங்குகளில், வரலாறு காணாத சூதாட்டம் புழங்குகிறது. விரைவில்,இந்த பங்குகளில் நிலவும் சூதாட்ட சூழல் தணிக்கப்பட வேண்டும். அது நடக்க, இன்னும் நிறைய புதிய நிறுவனங்கள் சந்தைக்குள் நுழைய வேண்டும்.
அல்லது, ஒட்டு மொத்த சந்தையில், முதலீட்டாளர்களின் முதலீட்டு அவசரம் குறைய வேண்டும்.டிசம்பர் மாதம் எப்போதுமே மாற்றத்திற்கான காலகட்டம் ஆகும். உலக சந்தைகள், எப்போதுமே டிசம்பரில் அடுத்த ஆண்டுக்கான புதிய முதலீட்டு வியூகங்களை அமைப்பது வாடிக்கை. ஆகவே, கடந்த ஆண்டு எடுத்த நிலைப்பாட்டில் இருந்து வித்தியாசமான முடிவுகளை வரும் ஆண்டில் எடுப்பதாயின், அந்த மாற்றங்கள், டிசம்பரில் கசியத் துவங்கும்.
மேலும், குஜராத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு பின்னடைவு ஏற்படுமாயின், அதுவும் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.ஆகவே, அடுத்த ஆண்டு சந்தையில் தென்படக்கூடிய முதலீட்டு சூழலின் முன்னுரையாக, டிசம்பர் மாத நிகழ்வுகள் அமையும்.நிகழும் மாற்றங்களை நுணுக்கமாக ஆய்வு செய்ய வேண்டும். நிதானமான முடிவுகள் தொடர வேண்டும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|