பதிவு செய்த நாள்
03 டிச2017
23:55
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஜூலை – செப்டம்பர் காலாண்டுக்கான, ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.3 சதவீதமாக உயர்ந்துள்ள தகவலை, மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டபோது, ஒருவித நிம்மதியும் கேள்விகளும் ஒருங்கே ஏற்பட்டன. ஜி.டி.பி.,யின் எண்களை எப்படிப் புரிந்து கொள்வது, வளர்ச்சி எங்கிருந்து வந்துள்ளது, எந்தத் துறைகள் அதற்கு பங்களித்துள்ளன, எவை பங்களிக்கவில்லை என்ற கேள்விகளும் சுவாரசியமானவை.
வெறும் சதவீதக் கணக்கையோ, அல்லது எண்களையோ மட்டும் படித்தால், நமக்கு ஓர் அர்த்தம் கிடைக்கும். இந்தக் கணக்கீடுகளுக்கு அடிப்படையாக உள்ள மூலத் தரவுகளையும் சேர்த்துப் படிப்பதன் மூலம், கூடுதலான புரிதல் கிடைக்கும்.
அந்த வகையில், இரண்டாம் காலாண்டு, ஜி.டி.பி., எண்களோடு அதற்கு அடிப்படையாக இருக்கும் மொத்த மதிப்புக் கூட்டலையும் (ஜி.வி.ஏ.,) சேர்த்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்தேன்.௬ சதவீதமாக சரிவுஇந்த உயர்வுக்குப் பங்களித்ததுறைகள், ‘உற்பத்தி, சுரங்கம்,மின் உற்பத்தி, எரிவாயு, தண்ணீர் சப்ளை மற்றும் இதர சேவைகள், வர்த்தகம், ஓட்டல்கள், தொலைதொடர்பு மற்றும் ஒலிபரப்பு சேவைகள்’ ஆகியவை.
முதலாம் காலாண்டில், உற்பத்தித் துறையில், 1.7சதவீத ஜி.வி.ஏ., மட்டுமேஇருந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் அது 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கான அடிப்படை கணக்கீட்டுக்கு, மத்திய புள்ளியியல் துறை எடுத்துக்கொண்டுள்ள தரவு, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியைத் தான்.
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அளித்துள்ள காலாண்டு அறிக்கைகளே இதற்கு அடிப்படை.சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், 70 சதவீதம் உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் என்பதால், இது நேரடியாக உற்பத்தி வளர்ச்சியையே பிரதிபலிக்கிறது என்று சொல்லலாம். இந்த நிறுவனங்களின், ஜி.வி.ஏ., வளர்ச்சி, 11.4 சதவீதம். முறைசாரா தொழில்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் உற்பத்தியைக் கணக்கிடும் தொழில் வளர்ச்சிக் குறியீடோ (ஐ.ஐ.பி.,) 2.2 சதவீதம்.
இவையிரண்டின் ஒட்டுமொத்த பங்களிப்பையே, 7 சதவீத ஜி.வி.ஏ., வளர்ச்சி குறிப்பிடுகிறது.இதன் அர்த்தம் என்னவென்றால், தனியார் துறை வளர்ச்சி தான், ஜி.டி.பி.,க்குப் பங்களிப்புச் செய்துள்ளது என, நிச்சயம் புரிந்து கொள்ளலாம்.
ஜூலை மாதம், ஜி.எஸ்.டி., அமலாவதற்கு முன், பழைய சரக்குகளை விற்றுவிட முனைந்த நிறுவனங்கள், பின்னர், உற்பத்தியை மீண்டும் துவக்கியதன் அறிகுறி இது. இதேபோல், வணிக வாகனங்களின் விற்பனையும் ஜூலை காலாண்டில், 21 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது.இன்னொரு புறம், அரசு செய்த செலவுகள் என்ன என்பதையும் சேர்த்துப் பார்ப்போம்.
சென்ற ஆண்டின், 2ம் காலாண்டில், 9.5 சதவீதமாக இருந்த, ஜி.வி.ஏ., இந்தக் காலாண்டில், 6 சதவீதமாக சரிந்தது.
பங்களிப்பு குறைவு
அதாவது, 2016- – 17 நிதியாண்டின் இதே காலாண்டில், மத்திய அரசு செய்த நிகர செலவு, 20.8 சதவீதம் உயர்ந்தது. இந்தச் செலவில் வட்டித் தொகையோ, மானியங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையோ சேர்க்கப்படவில்லை.அதே இனத்தில், இந்தக்காலாண்டில், மத்திய அரசு செலவு செய்திருப்பது,0.8 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
அதாவது, உற்பத்தித் துறையிலோ, இதர உள்கட்டுமானத் துறையிலோ, அரசின் பங்களிப்பு என்பது மிகமிகக் குறைவு.இன்னும் சில விபரங்களையும் இதனோடு சேர்த்துப் பார்ப்போம். முக்கியமாக, விவசாயம். அது இந்தக் காலாண்டில் பொய்த்துப் போய்விட்டது.சென்ற ஆண்டு, இதே காலாண்டில், 4.1 சதவீதமாக இருந்த மொத்த மதிப்புக் கூட்டல் இப்போது, 1.7 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது. கட்டுமானத் துறையின் மதிப்புக் கூட்டல், 4.3 சதவீதத்தில் இருந்து, 2.6 சதவீதமாக சரிந்துள்ளது. சேவைத் துறைகளிலும் தொய்வு.
வங்கிச் சேமிப்புகளும் கடன்களும், சென்ற 2016 இரண்டாம் காலாண்டில், 10.8 மற்றும் 10.1 சதவீத அளவுக்கு வளர்ந்திருக்க, 2017 இரண்டாம் காலாண்டில் அவை, 8.6 மற்றும் 6.8 சதவீத அளவுக்கே உயர்ந்துள்ளன.அதாவது, தொழில் வளர்ச்சியிலும் மொத்த மதிப்புக் கூட்டலிலும் அரசின் நேரடி பங்களிப்பு இங்கேயும் சரிந்து உள்ளது கண்கூடு.தொழில் துறைக்கு அழகுஇரண்டாம் காலாண்டு எண்கள் நமக்கு ஒரு நல்ல விஷயத்தை முன்வைக்கிறது. விவசாயம் சாராத, சேவை சாராத, அரசு சாராத துறைகளின் பங்களிப்பினாலேயே மொத்த மதிப்புக் கூட்டல் உயர்ந்து உள்ளது.அதனால், மொத்த உள்நாட்டு உற்பத்தி பெருகியுள்ளது.
உண்மையில் இங்கே தனியார் துறையின் சிறகுகள் முளைத்துவிட்டது என்றே அர்த்தம்.இதுதான் உண்மையில் நாம் மெச்சவேண்டிய போக்கு. அரசின் நேரடிக் கட்டுப்பாடுகள்இல்லாமல், சலுகைகளோ, மானியங்களோ இல்லாமல், படிப்படியாகத் தன் சொந்தக் காலில் நிற்கத் துவங்குவதே தொழில் துறைக்கு அழகு.
தனியார் துறை வலுப்பெறும்போதுதான், வேலைவாய்ப்புகளும் முதலீடுகளும் பல்கிப் பெருகும். அதற்கு இந்தப் போக்கு வழிவகை செய்திருக்கிறது என்பது வரவேற்கத்தக்கதுதான்.
வளர்ச்சி தொடரும்
சரிவு முடிந்துவிட்டது, இனி வளர்ச்சிப்பாதை தான் என, மத்திய புள்ளியியல் துறை தெரிவித்தபோது, மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை பிறந்தது. இந்த நம்பிக்கைக்கு உரம் சேர்க்கும் விதமான, உலக அளவில் ஏற்பட்டு வரும் பொருளாதார முன்னேற்றமும் இருக்கிறது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ரிசர்வ் வங்கியின் அடுத்து வரும் சந்திப்பில், வட்டிவிகிதங்களைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை அடிபட்டுப் போகும். வட்டி விகிதங்களை நிலைநிறுத்தும்போது தான், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில், ஜி.டி.பி.,யின் வளர்ச்சி, மத்திய ரிசர்வ் வங்கிக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
அடுத்த இரண்டு காலாண்டுகள் இதே விதமான வளர்ச்சி தொடரும், நிதியாண்டின் முடிவில், 7 சதவீதத்துக்கு மேல் நாம் வளர்ச்சி பெறுவோம் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்து. இந்தப் பின்னணியில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி பற்றிய தன் கணிப்பை, 2018 ஜனவரியில் மீண்டும் தெரிவிக்கும் என, செய்திகள் வருகின்றன. நல்ல செய்திகள் தொடரட்டும்.
ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|