பதிவு செய்த நாள்
11 டிச2017
00:15
டிசம்பர் மாதம், பங்குச் சந்தையின் வருங்கால நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் பெற்றது. ஒவ்வொருஆண்டின் இறுதியிலும், பன்னாட்டு முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடுகளை மறு ஆய்வு செய்து, அடுத்த ஆண்டில் அவற்றின் வாய்ப்புகள் குறித்து, முக்கிய முடிவுகளை எடுக்கும் காலகட்டம் இது.
ஓராண்டு முடிந்து, மறு ஆண்டு துவங்குவது, மனதள விலும், வியூக ரீதியாகவும், பல மாற்றங்களை ஏற்படுத்துவதை, நாம் கண்டிருக்கிறோம்.ஓராண்டின் இறுதியில் எடுக்கும் வியூகங்களை, மறு ஆண்டின் துவக்கத்தில், முற்றிலும் மாற்றியமைக்கும் சந்தை போக்கையும், நாம் பார்த்திருக்கிறோம்.
இந்த மாற்றங்களின் முன்னோடிகள், எப்.ஐ.ஐ., முதலீட்டாளர்களே. அவர்கள் எடுக்கும் முடிவுகளையே, பிறர் பின்பற்றுகின்றனர்.காலப் போக்கில், எப்.ஐ.ஐ., முதலீட்டாளர்கள், இந்திய சந்தையின் முக்கிய அங்கமாக திகழும் சூழல் ஏற்பட்டதும், டிசம்பர் நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்க வேண்டிய தேவை, நமக்கு ஏற்பட்டது. அதனால், இது கால மாற்றங்களுக்கு ஒத்த சூழல் அமைப்பு என்றே சொல்ல வேண்டும்.
எப்.ஐ.ஐ., முதலீட்டாளர்கள், இந்திய சந்தைக்குள் நுழைந்த, முதல் சில ஆண்டுகளில், டிச., மாதம், சந்தைக்கு ஒருவித விடுப்பு காலமாக விளங்கியது.பன்னாட்டு நிதி மேலாளர்கள் விடுப்பில் சென்று விட, சந்தை மந்தமாக விளங்கிய டிசம்பர்கள் எத்தனையோ! ஆனால், போட்டி சூழல் வலுக்கத் துவங்கியதும், டிசம்பரிலும், பலர் சந்தையில் ஆர்வம் காட்ட துவங்கினர்.
அடுத்த ஆண்டின் துவக்கத்தில், விடுப்பு முடிந்து திரும்பும் நிதி மேலாளர்கள் எடுக்கப் போகும் புதிய வியூகங்களை, முன்பே கணிப்பது, சந்தையின் முக்கிய தேவையானது. உள்நாட்டு வர்த்தகர்கள், இந்த வியூகங்களை முன்கூட்டியே யோசித்து, தங்கள் முதலீடுகளை, வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்ளத் துவங்கினர்.
காலப் போக்கில், ஜனவரியில் எடுக்கும் முதலீட்டு மாற்றங்களை, டிசம்பரிலேயே எடுப்பது தான் சிறந்தது என, பல, எப்.ஐ.ஐ., முதலீட்டாளர்கள் கருதத் துவங்கினர். இது, உள்நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில், ஒருவித அவசரத்தை ஏற்படுத்தியது.
எப்போதும், எப்.ஐ.ஐ., நகர்வுகளை ஒட்டியே இயங்கும் வர்த்தகர்கள், டிசம்பரில், அதிக கவனமாக பல முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். பங்குத் தரகர்கள், தங்கள் பங்கு ஆய்வு மாற்றங்களை முன்கூட்டியே எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சில ஆண்டுகளாக, டிச., – ஜன., மாதங்கள், ஒருவித அழுத்தமான காலகட்டமாக, சந்தை சார்ந்தோருக்கு ஆகிவிட்டது. மாற்றங்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டிய கட்டாயமே, இதற்கு காரணம்.
சில்லரை வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்கள், இந்த மாற்றங்களை கணிக்கத் தவறுவதையும், நாம் பலமுறை கவனித்து உள்ளோம்.இந்த சூழலில், இந்த டிசம்பர், பல முக்கிய அரசியல் நிகழ்வுகளையும் சேர்த்து அமைந்தால், சந்தையின் சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும்.
பிரதமரின் சொந்த மாநிலமான, குஜராத்தின் சட்டசபை தேர்தல் முடிவுகள், இந்த டிசம்பரை, இன்னும் சுவாரசியப்படுத்தி விட்டன என, சொல்ல வேண்டும்.பொருளாதார ரீதியாக ஏற்படும் மாற்றங்கள், அரசியல் சார்ந்த தாக்கங்களுக்கு உட்பட்டது என்பதே, சந்தையின் நம்பிக்கை.
அரசியல் வெற்றி, தோல்விகள் சந்தையின் போக்கை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை பெற்றவை. குஜராத்தில் வெற்றி பெற்றால், அதில் பெரிய சந்தை மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
ஒருவேளை, மாற்று சூழல் அமைந்தால், அதற்கு சந்தை தயாராக இல்லை என்பதை, நாம் உணர வேண்டிய தருணம் இது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|