பதிவு செய்த நாள்
11 டிச2017
00:19
‘வங்கிகளில்
போடப்பட்டுள்ள உங்களுடைய சேமிப்புகள், முதிர்வு காலத்தில் திரும்பி
வராது; அதை, வங்கிகளே எடுத்து கொள்ளப் போகின்றன’ என, பீதியை கிளப்பும்
குறுஞ்செய்திகள், ஏராளமாக உலா வருகின்றன. இதில் உண்மை என்ன? ஏன்
இவ்வளவு பதற்றம்? மத்திய அரசின் நிதித் துறை தலையிட்டு, ‘வங்கி
முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டாம்; உங்கள் பாதுகாப்பு, மேலும்
உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது’ என, நம்பிக்கை வார்த்தைகள் சொல்ல
வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
குழப்பத்தையும், தெளிவுகளையும் புரிந்து கொள்வோம்.
ஆகஸ்ட்
மாதம், நிதியியல் தீர்மானம், வைப்புத் தொகை காப்புறுதி மசோதா –
2017, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. இது, பின், நிலைக்
குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
டிச., 15
முதல் துவங்கவிருக்கிற, பார்லி., குளிர் கால கூட்டத்தொடரில், நிலைக்
குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதைத் தொடர்ந்து, இந்த மசோதா,
சட்டமாக நிறைவேறலாம் என்பது எதிர்பார்ப்பு.
இந்த சட்டம்,
அடிப்படையில், நம் நிதி நிறுவனங்களான, வங்கிகள், காப்பீட்டு
நிறுவனங்கள், இதர நிதியியல் நிறுவனங்கள், ஏதேனும் ஒரு
சிரமத்தைச் சந்தித்து, திவாலாகும் சூழல் ஏற்படுமானால், என்ன செய்ய
வேண்டும் என்பதை விளக்குகிறது. அதற்கான சட்ட ரீதியான தீர்வுகளை
முன்வைக்கிறது.
பொதுவாக, வங்கிகள் சிரமப்படும் போது, அவற்றுக்கு
போதுமான மூலதனம் இல்லாத போது, இதுவரை, ஒரு நடைமுறை
கடைபிடிக்கப்பட்டது. மத்திய ரிசர்வ் வங்கி தலையிட்டு, அதை மற்றொரு
பெரிய வங்கியோடு இணைத்துவிடும்.
குளோபல் டிரஸ்ட் வங்கி சிரமப்பட்ட
போது, அது, ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்சுடன் இணைக்கப்பட்டது
நினைவிருக்கலாம். பொதுத் துறை வங்கியாக இருக்குமானால், அதன்
மூலதனத்தை அதிகப்படுத்தி, காப்பாற்றும் நடைமுறையை மத்திய அரசு
மேற்கொள்ளும்.
இவற்றுக்கு பெயர், ‘பெயில் – அவுட்’ என்பதாகும்.
அதாவது, வங்கிக்கு வெளியில் இருந்து உதவிகள் வந்து, அந்நிறுவனம்
மீட்கப்படும் நடைமுறை இது. அடிப்படையில், அந்த வங்கியில் முதலீடு
செய்திருப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே, இது
பின்பற்றப்படும்.
நிதி நிறுவனங்களை காப்பாற்ற, புதிய சட்ட
மசோதாவில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டாலும், இரு அம்சங்கள்
தான், மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன. முதலாவது, ‘பெயில் –
இன்’ எனும் கருத்து.
மேலே தெரிவித்த, ‘பெயில் – அவுட்’க்கு
நேர்மாறானது, ‘பெயில் – இன்.’ அதாவது, வெளியிலிருந்து உதவிகள்
பெறுவதற்கு பதில், வங்கிக்குள்ளேயே இருக்கும் கடன்கள்,
முதலீடுகள் ஆகியவற்றை கொண்டே, அந்த நிதி நிறுவனத்தை காப்பாற்றும்
வழிமுறை இது.
இதன்படி, முதிர்வு காலத்தில் பணத்தைத் திருப்பித்
தராமல், அதற்கு பதிலாக கடன் பத்திரங்களை வழங்கலாம். முதிர்வு
தொகையில், ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்துக் கொள்ள கோரப்படலாம்.
வங்கியில், மறுமுதலீடாக அந்தத் தொகை பயன்படுத்தப்படலாம். பல மேலைநாடு
களில், இந்த நடைமுறை
ஏற்கனவே இருக்கிறது.
முதன்முறையாக, நிதியியல் சட்ட மசோதாவில், இந்த ஷரத்து சேர்க்கப்பட்டு உள்ளது.
அதாவது,
நிதி நிறுவனங்கள், ‘திவால்’ நிலையை அடையும் போது, அதை காப்பாற்ற
பின்பற்றப்படும் பல்வேறு நடவடிக்கைகளில், ‘பெயில் – இன்’ முறையும்
ஒன்று என்பதே, இதன் அர்த்தம். இங்கே தான், தேவையற்ற குழப்பமும்,
பீதியும் ஏற்பட்டுள்ளன.
முதலில், இந்தியாவில், எந்தவொரு நிதி
நிறுவனமும், திவால் நிலையை அடையும் வரை கண்டு கொள்ளாமல்
விடப்படுவதில்லை. இன்று, புதிய திவால் சட்டம் அமலாகி இருக்கும்
நிலையில், வங்கிகளின் வாராக்கடன்கள் எவ்வளவு என்பது, ஆரம்பத்தி
லேயே தெரிந்து விடும்.
அவற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள், வலுவாக உள்ள நிலையில், வங்கிகள் கையறு நிலையை
அடைந்து விடும் என, நம்புவதற்கு வாய்ப்பே இல்லை.
அப்படி ஒரு நிலை
ஏற்பட்டால், என்ன செய்யலாம் என்பதை குறிப்பதற்கே, ‘பெயில்- இன்’
என்பது, ஒரு வாய்ப்பாக முன்வைக்கப்பட்டு உள்ளது என, புரிந்து கொள்ள
வேண்டுமே அன்றி, நாளைக்கே, இந்த ஷரத்து அமலுக்கு வந்து விடும் என,
அர்த்தமில்லை.
மேலும், இந்த மசோதாவிலேயே, இதற்கு ஒரு பாதுகாப்பு
இருக்கிறது. எல்லா வங்கி சேமிப்புகளையும் இப்படி, ‘பெயில் – இன்’
செய்வதற்கான வாய்ப்பாக, வங்கிகள் பயன்படுத்திக் கொள்ள முடியாது.
55 2(பி) துணைப் பிரிவு, மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்கிறது.
வங்கியில் முதலீடு செய்யும் போதே, நாளை இப்படிப்
பட்ட அவலநிலை ஏற்படு
மானால்,
என்னுடைய தொகையை, நீங்கள் வங்கியை காப்பாற்றுவதற்கு
பயன்படுத்திக் கொள்ளலாம் என, முதலீட்டாளர்கள், ஒப்புதல்
பெறப்பட்டிருக்க வேண்டும்.
அதாவது, இதுவரை இத்தகைய ஒப்புதல் பெறப்படாத நிலையில், வங்கி சேமிப்புகளுக்கு, எந்த பாதிப்பும் இல்லை.
நாளை,
இந்த மசோதா இதே வடிவில் நிறைவேற்றப்படுமானால், அப்போது, முதலீடு
செய்யும் போதே, இந்த ஷரத்தை ஓர் ஆப்ஷனாக, படிவம் குறிப்பிடும். அதை
ஏற்பதோ, ஏற்க மறுப்பதோ, முதலீட்டாளர் கையிலேயே இருக்கிறது. இந்த
பிரிவுக்கான ஒப்புதலை, வங்கிகள் வற்புறுத்துவதற்கான
வாய்ப்பும் இல்லை.
இன்னொரு விஷயம், வங்கிகள் திவாலானால்,
அதிலுள்ள முதலீடுகளுக்கான காப்புறுதி. ஒரு வங்கிக் கணக்கில், ஒரு
லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டிருந்தால், வங்கிகள்
திவாலானால், ஒரு லட்சம் ரூபாய் வரை, காப்பீடுத் தொகையைத் திரும்பப்
பெற முடியும்.
இதை வழங்குவதற்காகத் தான், ‘வைப்புத் தொகை
காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாத கார்ப்பரேஷன்’ என்ற அமைப்பு
ஏற்படுத்தப்பட்டது.
அந்த அமைப்பு, புதிய சட்ட மசோதாவால் உருவாக்கப்படும், ரெசல்யூஷன் கார்ப்ப
ரேஷனோடு இணைத்துக் கொள்ளப்படும் நிலையில், ஒரு லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுமா என்ற தெளிவு இல்லாமல் இருக்கிறது.
வழக்கமான
அத்தனை பாதுகாப்புகளோடு, கூடுதல் பாதுகாப்பை
முதலீட்டாளர்களுக்கு வழங்கவே, இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது
என்ற, நிதித் துறையின் விளக்கம் நம்பிக்கை அளிக்கிறது.
குளிர் கால
கூட்டத்தொடரில், பொதுமக்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கும்
விதமாக, இந்த மசோதா மீதான முழுமையான விவாதத்தை, பார்லிமென்ட்
நடத்துமானால், இன்னும் வெளிச்சம் கிடைக்கும்.
– ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|