பதிவு செய்த நாள்
22 டிச2017
02:50
புதுடில்லி : இந்திய பங்குச் சந்தைகளில், இந்தாண்டு, 153 புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 75,400 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, ‘எர்னஸ்ட் யங்’ நிறுவனம், சர்வதேச அளவில், நடப்பாண்டு மேற்கொள்ளப்பட்ட, புதிய பங்கு வெளியீடுகள் குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: உலகளவில், இந்தாண்டு புதிய பங்கு வெளியீடுகளுக்கு, வரவேற்பு காணப்பட்டது. இதில், இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க பிராந்தியத்தை உள்ளடக்கிய, இ.எம்.இ.ஐ.ஏ., நாடுகளில், இந்திய பங்குச் சந்தைகள், புதிய பங்கு வெளியீடுகளில், அதிக நிதி திரட்டி சாதனை படைத்துள்ளன.
நம்பிக்கை :
மும்பை பங்குச் சந்தையான, பி.எஸ்.இ., சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான, எஸ்.எம்.இ., பங்குச் சந்தை ஆகியவை, 17 புதிய பங்கு வெளியீடுகள் மூலம், சாதனை அளவாக, 550 கோடி டாலர் திரட்டி உள்ளன. இது, ரூபாய் மதிப்பில், 35,750 கோடியாகும். இதில், மிக அதிக தொகையை திரட்டிய நிறுவனம் எனும் சிறப்பை, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா பெற்றுள்ளது. இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 11,050 கோடி ரூபாய் திரட்டி உள்ளது.
இந்தியாவில், அரசியல் சூழல் ஸ்திரமாக உள்ளது. மத்திய அரசு, சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்துள்ளது. இதனால், புதிய பங்கு வெளியீடுகள் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்தாண்டு, சாதனை அளவாக, புதிய பங்கு வெளியீடுகளும், அவற்றின் மூலம் திரட்டிய தொகையும், நாட்டின் பொருளாதார வலிமையை பறைசாற்றுகின்றன. அத்துடன், முதலீட்டாளர்கள் இடையே, பங்கு முதலீடுகளில் அதிகரித்து வரும் ஆர்வத்தையும் எடுத்துக் காட்டுகின்றன.
மூலதன சந்தை:
இந்நிலையில், அமெரிக்க அரசு மேற்கொள்ள உள்ள வரி சீர்திருத்தங்களின் எதிரொலியாக, இந்திய மூலதனச் சந்தை, மேலும் வலுவான வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மூலதனச் சந்தையின் எழுச்சியும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், வரும் மாதங்களில், வளரும் நாடுகளின் பங்கு முதலீடுகளில், இந்தியாவை முன்னிலைப்படுத்தும். இந்தாண்டு, வளரும் நாடுகளின் புதிய பங்கு வெளியீடுகளில், இந்தியாவின் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், 74 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன.
இ.எம்.இ.ஐ.ஏ., நாடுகளில், அதிகம் புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டதில், தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலிடம் பிடித்துள்ளன. அடுத்து, தொழில் மற்றும் நிதித் துறை நிறுவனங்கள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாய்ப்பு:
இந்தியாவின் புதிய பங்கு வெளியீட்டு சந்தை, 2018ல் நன்கு இருக்கும். தற்போதுள்ள பங்குகளின் மதிப்பு, ஏற்கனவே முதலீடு செய்து உள்ளோருக்கு, மேலும் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்கும் வகையில் உள்ளது. எனினும், பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் நீடிப்பது, பழைய மற்றும் புதிய பங்கு விற்பனையின் சரிசமமான வளர்ச்சியை பொறுத்துள்ளது.
-விஷ் திங்ரா, பங்குதாரர், ‘எர்னஸ்ட் யங் இந்தியா’
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|