பதிவு செய்த நாள்
02 ஜன2018
00:57
புதுடில்லி:சிறிய வியாபாரம், பெரிய அளவிலான சில்லரை விற்பனை, மின்னணு வர்த்தகம், நுகர்வோருக்கு நேரடி விற்பனை உட்பட, பலதரப்பட்ட வர்த்தகத்திற்கென, தேசிய வர்த்தக கொள்கையை, மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்கள், அதன் செகரட்டரி ஜெனரல், பிரவீன் கந்தல்வால் தலைமையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபுவை சந்தித்து பேசினர்.
அப்போது, மின்னணு வணிக நிறுவனங்கள், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைகளை மீறி, நுகர்வோருக்கு நேரடியாக பொருட்களை விற்பதால், தங்களின் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக, அவர்கள் புகார் தெரிவித்தனர்.
தடைவலைதள சந்தை நிறுவனங்கள், நேரடியாக நுகர்வோருக்கு பொருட்களை வழங்க, அன்னிய நேரடி முதலீட்டு சட்டம் தடை செய்கிறது.இந்நிறுவனங்கள், வியாபாரிகளுக்குத் தான் பொருட்களை விற்க வேண்டும் என, சட்டம் கூறுகிறது. ஆனால், வலைதள சந்தை நிறுவனங்கள், கவர்ச்சிகரமான தள்ளுபடிகளையும், சலுகைகளையும் அளிப்பதாக, மிகப்பெரிய அளவில், ஊடகங்களில் விளம்பரம் செய்கின்றன.
சமீபகாலமாக, பல நிறுவனங்கள், பொருட்களின் விலையை வெகுவாக குறைத்து, விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. தள்ளுபடி சலுகைகளால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை, வலைதள சந்தை நிறுவனங்கள் ஈடு செய்கின்றன.இந்த வகையில், இந்நிறுவனங்கள், அப்பட்டமாக, அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மீறி, நுகர்வோரை நேரடியாக அணுகி பொருட்களை விற்கின்றன என, வர்த்தகக் குழுவினர், குற்றஞ்சாட்டினர்.
கேள்வி
வலைதள சந்தை நிறுவனங்கள், வியாபாரிகளுக்கே பொருட்களை விற்பதாக கூறினாலும், எதற்காக, நுகர்வோரை நேரடியாக ஈர்க்கும் வகையில், பெரிய அளவில் விளம்பரங்களை வெளியிட வேண்டும் என, அமைச்சரிடம் வர்த்தக பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர்.ஆகவே, வலைதள சந்தை நிறுவனங்களின் சட்டமீறலை தடுக்க, தேசிய அளவில், சில்லரை விற்பனை கொள்கையை, மத்திய அரசு உருவாக்க வேண்டும். சிறிய வியாபாரம், பெரிய நிறுவனங்களின் சில்லரை விற்பனை, மின்னணு வர்த்தகம், நேரடியாக, நுகர்வோருக்கு பொருட்களை விற்கும் முறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக, இக்கொள்கை இருக்க வேண்டும் என, அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான மனுவை பெற்ற அமைச்சர், விரைவில், இப்பிரச்னை குறித்து, இரு தரப்பு குழுவை கூட்டி விவாதிப்பதாகவும், சில்லரை வியாபாரிகளின் தொழிலை பாதுகாக்க, தேசிய சில்லரை விற்பனை கொள்கை உருவாக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|