பதிவு செய்த நாள்
03 ஜன2018
00:26
புதுடில்லி:கடந்த, 2017 டிசம்பரில், இந்திய தயாரிப்புத் துறையின் உற்பத்தி, 5 ஆண்டுகளில் இல்லாத வகையில், விறுவிறுப்பான வளர்ச்சி விகிதத்தை கண்டிருப்பது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்த, ‘நிக்கி – மார்கிட்’ ஆய்வறிக்கை:நுகர்வோரின் தேவை, இடைநிலை பொருட்கள் விலை, முதலீடு ஆகிய மூன்று பிரிவுகளின் அடிப்படையில், தயாரிப்புத் துறை வளர்ச்சி கணிக்கப்படுகிறது.கடந்தாண்டு டிசம்பரில், தயாரிப்புத் துறையின் உற்பத்தி வளர்ச்சியை குறிக்கும், ‘நிக்கி இந்தியா, எம்.பி.எம்.,’ குறியீடு, 54.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, நவம்பரில், 52.6 புள்ளிகளாக இருந்தது.
தயாரிப்புத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, தொடர்ந்து ஐந்து மாதங்களாக, 50 புள்ளிகளை தாண்டியே இருக்கிறது. இந்த அளவீட்டிற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், அது, தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சியின் பின்னடைவை குறிக்கும்.கடந்த, 2012 டிச., மற்றும் 2016 அக்டோபருக்கு பின், மதிப்பீட்டு மாதத்தில் தான் அதிக, ‘ஆர்டர்’கள் கிடைத்து உள்ளன.
இதனால், வர்த்தகச் செயல்பாடுகள் விறுவிறுப்படைந்து, உற்பத்தி வளர்ச்சி விகிதம் வேகமாக அதிகரித்துள்ளது.உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், நுகர்வோரின் தேவை அதிகமாக இருந்தது. இது, தயாரிப்புத் துறையின் உற்பத்தி உயர துணை புரிந்தது.
நிறுவனங்கள், உற்பத்தியை அதிகரிக்க, அதிகளவில் ஊழியர்களை நியமித்தன. இதன் காரணமாக, தயாரிப்பு நிறுவனங்களில், 2012 ஆகஸ்டுக்கு பின், ௨௦௧௭ டிசம்பரில் தான், அதிக வேலைவாய்ப்புகள் உருவாகின.ஜூலையில் அறிமுகமான, ஜி.எஸ்.டி., மூலப்பொருட்கள் விலையில் ஏற்படுத்திய தாக்கம், இன்னும் தொடர்கிறது.அதே சமயம், நுகர்வோரின் தேவை அதிகரித்துள்ளது. செலவுகளை கட்டுப்படுத்தி வந்த நுகர்வோர், டிசம்பரில், சற்று தாராளமான போக்கை கடைபிடித்தனர். இந்த வாய்ப்பை நழுவ விடாத நிறுவனங்கள், மூலப்பொருட்கள் விலை உயர்வை, நுகர்வோர் தலையில் சுமத்தாமல் ஏற்றன. இதனால், நிறுவனங்களின் லாப வரம்பில், தாக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆய்வில் பங்கேற்ற பல நிறுவனங்கள், அடுத்த ஓராண்டில், சந்தை நிலவரம் மேம்படும் என்பதால், வரும் காலாண்டிலும் வளர்ச்சி நீடிக்கும் என, நம்பிக்கை தெரிவித்து உள்ளன. இந்தாண்டு, தயாரிப்புத் துறை சிறப்பாக செயல்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எழுச்சியை நோக்கி
பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆகியவை, பொருளாதார வளர்ச்சியில், தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அதிலிருந்து மீள்வதற்கான சவால்களை, தயாரிப்புத் துறை சந்திக்க வேண்டி உள்ளது. எனினும், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி குறித்த வரலாற்றுடன் ஒப்பிடும் போது, ஒட்டுமொத்த அளவில், வீழ்ச்சியில் இருந்து எழுச்சி கண்டு வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறதுஆஷ்னா தோதியா பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|