பதிவு செய்த நாள்
04 ஜன2018
00:17
புதுடில்லி:கடந்த ஆண்டு, சிறிய, நடுத்தர நிறுவனங்கள், ஐ.பி.ஓ., எனப்படும், புதிய பங்கு வெளியீடு மூலம், 1,785 கோடி ரூபாய் திரட்டி சாதனை படைத்துள்ளன. இது, 2016ல் திரட்டப்பட்ட தொகையை விட, மூன்று மடங்கு அதிகம்.
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், 2012 மார்ச்சில், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கென, எஸ்.எம்.இ., பங்குச் சந்தைகள் துவக்கப்பட்டன.
வர்த்தகம்
இதில், குறைந்தபட்சம், 1 கோடி ரூபாய் பங்கு மூலதனத்துடன், மூன்று ஆண்டுகள் செயல்பாட்டில் உள்ள ஒரு நிறுவனம், பங்கு வெளியீடு மேற்கொள்ளலாம். அதன்பின், பங்குகள், எஸ்.எம்.இ., சந்தையில் பட்டியலிடப்பட்டு, அவற்றின் மீதான வர்த்தகம் துவங்கும்.குறைந்த மூலதனத்தில் செயல்படும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள், அவற்றின் வர்த்தகம் மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு, கடன் பெறாமல், பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்டிக் கொள்ள, எஸ்.எம்.இ., உதவுகிறது.
இதனால், இப்பிரிவில், புதிய பங்கு வெளியீடுகள், ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. இதுவரை, 329 நிறுவனங்கள், இப்பிரிவில் பட்டியலிடப்பட்டு உள்ளன.கடந்த ஆண்டு இப்பிரிவில், 132 சிறிய, நடுத்தர நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகள் மூலம், சாதனை அளவாக, 1,785 கோடி ரூபாய் திரட்டி உள்ளன. இது, 2016ல், 66 நிறுவனங்கள், 540 கோடி ரூபாய் திரட்டியதை விட, மூன்று மடங்கு அதிகம்.
ஐந்து ஆண்டுகளில், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், மொத்தம் திரட்டிய தொகை, 1,315 கோடி ரூபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி
ஊடகம், பொழுதுபோக்கு, தயாரிப்பு, ஜவுளி, பொறியியல், நிதி, ரசாயனம், விவசாயம், உணவு பதப்படுத்துதல், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், அதிகளவில் பங்கு வெளியீடுகளை மேற்கொண்டன.இவற்றில், 39 நிறுவனங்களின் பங்குகள், பட்டியலிடப்பட்ட நாளன்றே, விலை உயர்வு கட்டுப்பாட்டு வரம்பான, 20 சதவீதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.
ஐந்து பங்கு வெளியீடுகளில், திரட்ட உத்தேசித்த தொகையை விட, 100 மடங்கிற்கும் அதிகமாக, முதலீட்டு விண்ணப்பங்கள் குவிந்தன. இவற்றில், முதலீட்டாளர்கள், 18,629 கோடி ரூபாய் மதிப்பிற்கு விண்ணப்பித்து இருந்தனர்.கடந்த ஆண்டு, மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ மற்றும் தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடுகள், முறையே, 27 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளன.
அதே சமயம், எஸ்.எம்.இ., குறியீடுகள், முறையே, 89 சதவீதம் மற்றும் 67 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத் முதலிடம்
கடந்த ஆண்டு, எஸ்.எம்.இ., சந்தையில், அதிகபட்சமாக, குஜராத்தைச் சேர்ந்த, 51 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டன.அடுத்து, மஹாராஷ்டிரா, 39; மத்திய பிரதேசம், 11; டில்லி, 8; ராஜஸ்தான், 6; தெலுங்கானா, 4; மேற்கு வங்கம், 3; ஆந்திரா மற்றும் பஞ்சாபில், தலா ஒரு நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|