பதிவு செய்த நாள்
05 ஜன2018
00:33
புதுடில்லி:சேவைகள் துறை வளர்ச்சி, டிசம்பரில் எழுச்சி கண்டிருப்பது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ‘நிக்கி – மார்கிட்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:
சேவைகள் துறை வளர்ச்சியை குறிக்கும், என்.எம்.எஸ்.பி.எம்.ஐ., குறியீடு, 2017 டிசம்பரில், 50.9 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, நவம்பரில், 48.5 புள்ளிகள் என்ற அளவில், பின்னடைவை கண்டிருந்தது.கடந்த ஆண்டு, பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., என்ற இரு பெரும் அதிர்ச்சி நடவடிக்கைகளை, இந்திய பொருளாதாரம் சந்தித்தது. இதன் தாக்கத்தால், நான்கு மாதங்கள், சேவைகள் துறை வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. முந்தைய இரு ஆண்டுகளிலும், தலா இரு மாதங்கள் மட்டுமே, பின்னடைவு இருந்தது.
தகவல் தொடர்பு, நிதி, காப்பீடு உள்ளிட்ட சில துறைகளில் காணப்பட்ட எழுச்சி, ஒட்டுமொத்த சேவைகள் துறையின் சிறிதளவு வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.எனினும், ஜி.எஸ்.டி., நடைமுறைகளில் உள்ள குழப்பம் தொடர்வதால், வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள் உடனான பணப் பரிவர்த்தனைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சேவை துறை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
அதே சமயம், சேவைகள் துறை நிறுவனங்கள், செப்., முதல், பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.டிசம்பரில், மூலப்பொருட்கள் விலை குறியீடு குறைந்துள்ளது. இதனால், சேவைகள் துறை நிறுவனங்கள், லாப வரம்பை தக்க வைத்துக் கொண்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னேறும் அறிகுறி
சேவைகள் துறை, பின்னடைவில் இருந்து முன்னேறி வருவதற்கான அறிகுறிகள் தோன்றி உள்ளன. இது, டிசம்பர் வளர்ச்சியில் தெரிய வந்துள்ளது.
ஆஷ்னா தோதியா
பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|