பதிவு செய்த நாள்
05 ஜன2018
00:38
புதுடில்லி:பொதுத் துறை வங்கிகளுக்கு, மறு பங்கு மூலதன திட்டத்தில், 80 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய நிதியமைச்சகம், பார்லிமென்டின் ஒப்புதலை கோரி உள்ளது.
பொதுத் துறை வங்கிகள், வாராக்கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றன. இதனால், சில வங்கிகளின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது; கடன் வளர்ச்சியும் சரிவடைந்து உள்ளது.
இதையடுத்து, பொதுத் துறை வங்கிகள், வாராக்கடன் பிரச்னையை சமாளித்து, சொத்து மதிப்பை நிலை நிறுத்தவும், கடன் வளர்ச்சியை அதிகரிக்கவும், மறு பங்கு மூலதன திட்டத்தை, மத்திய அரசு, 2017 அக்டோபரில் அறிவித்தது.
இத்திட்டத்தில், அடுத்த இரு ஆண்டுகளில், பொதுத் துறை வங்கிகளுக்கு, 2.11 லட்சம் கோடி ரூபாய், பங்கு மூலதனமாக வழங்கப்பட உள்ளது.இத்தொகையில், 1.35 லட்சம் கோடி ரூபாய், மறு பங்கு மூலதன பத்திரங்கள் வாயிலாக வழங்கப்படும்.
இத்துடன், பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து, 18,139 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பொதுத் துறை வங்கிகள், மத்திய அரசின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை, வெளிச்சந்தையில் விற்பனை செய்து, 58 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம், நடப்பு, 2017 -– 18ம் நிதியாண்டிற்கான, மூன்றாம் கட்ட துணை மானியக் கோரிக்கையை, பார்லி.,யில் நேற்று தாக்கல் செய்தது. அதில், பொதுத் துறை வங்கிகளின் மறு பங்கு மூலதன திட்டத்தில், மறு பங்கு மூலதன பத்திரங்களை வெளியிட, கூடுதலாக, 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவினத்திற்கு அனுமதி கோரப்பட்டு உள்ளது.
இது குறித்து, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:மானிய கோரிக்கைக்கு, பார்லி., ஒப்புதல் கிடைத்ததும், மறு பங்கு மூலதன பத்திரங்கள் வெளியிடும் நடவடிக்கை
துவங்கும். இப்பத்திரங்களை அரசு நேரடியாகவோ அல்லது தனி நிறுவனத்தின் மூலமாகவோ
வெளியிடும். மார்ச்சுக்குள் இப்பணி முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பத்திரங்களுக்கான வட்டி விகிதம் உள்ளிட்ட இதர அம்சங்களை, பொருளாதார விவகாரங்கள் துறை தீர்மானிக்கும்.
மேலும், இந்த பத்திரங்களுக்கு, எஸ்.எல்.ஆர்., அந்தஸ்து வழங்கப்படாது. அதனால், வங்கிகள் திரட்டும் டிபாசிட்டில், குறிப்பிட்ட சதவீதத்தை, கடன் பத்திரங்களில் கட்டாயம் முதலீடு செய்யும் விதி, மறு பங்கு மூலதன பத்திரங்களுக்கு பொருந்தாது.இத்திட்டம், வங்கிகளின் வாராக்கடன் சுமையை குறைத்து, அவற்றின் சொத்து மதிப்பின் இழப்பை தடுக்க உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.
கிடுகிடு உயர்வு
பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன், 2017 மார்ச் நிலவரப்படி, 7.33 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, 2015 மார்ச்சில், 2.75 கோடி ரூபாயாக இருந்தது. வாராக்கடனில், 12 நிறுவனங்களின் பங்கு, 25 சதவீதமாக உள்ளது. இது தொடர்பாக, புதிய திவால் சட்டத்தில், நிறுவனங்கள்
மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|